டெல்லி சிங்கு எல்லையில் விவசாயி கொல்லப்பட்டது முதல் இதுவரை - கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Hindustan Times
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
டெல்லியை அடுத்த ஹரியாணா எல்லையில் உள்ள சிங்குவில் விவசாயி ஒருவரது கை துண்டிக்கப்பட்டு அவரது சடலம் தொடங்க விடப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீளவில்லை. அங்குள்ள கள நிலவரத்தை பதிவு செய்கிறார் பிபிசி செய்தியாளர் தில்நவாஸ் பாஷா.
நிஹாங் சீக்கியர்களின் குழுவான அகாலி நிர்பையர் கால்ஸாவின் குருத்வாராவுக்கு வெளியே செய்தியாளர்களின் கூட்டம் நடந்தது. அதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான், பஞ்சாபின் தரன் தாரன் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் சீக்கியரான லக்பீர் சிங்கின் சடலம் அதே குருத்வாராவுக்கு வெளியே உள்ள தடுப்பில் வெள்ளிக்கிழமை காலை தொங்கவிடப்பட்டிருந்தது.
இந்த குருத்வாராவில் வைக்கப்பட்டிருந்த சீக்கியர்களின் புனித புத்தகத்தை லக்பீர் சிங் அவமதித்ததாகவும், பின்னர் அவர் பிடிக்கப்பட்டு அந்த செயலுக்கான தண்டனை கொடுக்கப்பட்டதாகவும் நிஹாங் சீக்கியர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள நிஹாங் சீக்கியர்களும், அவர்களின் தலைவரும், அதை நிஹாங் சீக்கியர்களின் "நடவடிக்கை" என்று அழைத்தனர்.
நடந்த கொலைக்குப்பொறுப்பேற்று, நிஹாங் சீக்கியரான சரப்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை மாலை காவல்துறையிடம் சரணடைந்தார்.
"இந்த சம்பவம் குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடந்தது என்ன?
லக்பீர் சிங் புனித புத்தகத்தை அவமதித்ததை தான் முதலில் பார்த்ததாக பகவந்த் சிங் கூறுகிறார்.
தான் லக்பீரைப் பிடித்ததாகவும், பின்னர் கூட்டம் கூடியதாகவும் பகவந்த் சிங் பிபிசியிடம் கூறினார்.
"அதிகாலை மூன்று மணி இருக்கும். நான் குளித்தபின் தலைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தேன். அப்போது குருத்வாராவின் திரைச்சீலைகள் திறந்திருப்பதையும், புனித புத்தகத்தை போர்த்தியிருந்த துணி விலகியிருப்பதையும் நான் பார்த்தேன். அவர் அந்த துணியை மேலே தூக்கியிருந்தார். அங்கு இரண்டு தீப்பெட்டிகளும் இருந்தன. அவர் தீயை மூட்ட திட்டமிட்டிருந்தார் என்று தோன்றுகிறது," என்கிறார் அவர்.
தரன் தாரன் மாவட்டத்தின் சீமா கலான் கிராமத்தில் வசிப்பவரான லக்பீர் சிங், சில நாட்களுக்கு முன்பு இந்த குருத்வாராவுக்கு வந்து இங்கு சேவைகள் செய்து வந்தார்.
"அவர் எங்கள் நம்பிக்கையைப் பெற்ற பிறகு எங்கள் குழுவில் சேர்ந்தார். அவர் போதை மருந்து உட்கொண்டிருக்கலாம். அவர் ஏதோ திட்டத்தின் கீழ் இங்கு வந்ததாக நாங்கள் நினைக்கிறோம்."என்று பகவந்த் சிங் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Ravinder Singh Robin
லக்பீர் சிங் விவசாயிகள் இயக்கத்தின் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று பகவந்த் சிங்கும், சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற சாட்சிகளும் தெரிவிக்கின்றனர்.
பரபரப்பு காரணமாக பெரும் கூட்டம் கூடியிருந்தது. இங்குதான் லக்பீரிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது மற்றும் அவரது வாக்குமூலம் மொபைலில் பதிவு செய்யப்பட்டது. அந்த சம்பவத்தின் பல வீடியோக்களில், காயமடைந்த லக்பீர் தரையில் படுத்திருப்பதையும், நிஹாங் சீக்கியர்கள் அவரிடம் விசாரணை நடத்துவதையும் பார்க்க முடிகிறது.
"அரசியல்வாதிகள் தங்கள் அரசியலை செய்யட்டும். ஆனால் குருவிடம் இருந்து அவர்கள் விலகி இருந்து செய்யட்டும்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Ravinder Singh Robin
லக்பீர் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரது கை துண்டிக்கப்பட்டு மீண்டும் விசாரணை செய்யப்பட்டது. பின்னர் அவர் பந்த் நிர்பயரின் குருத்வாராவுக்கு வெளியே ஒரு தடுப்பு வேலியில் தொங்க விடப்பட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர் விவரித்தார்.
இந்த வழக்கில் அமிர்தசரஸுக்கு அருகிலிருந்து மற்றொரு நிஹாங் சீக்கியரான நாராயண் சிங் கைது செய்யப்பட்டிருப்பதாக அதன் புறநகர் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகேஷ் கெளஷல் கூறியதாக பிபிசியின் ரவீந்திர சிங் ராபின் தெரிவித்தார்.
லக்பீர் சிங்கைக் கொன்றவர்களில் தானும் ஒருவர் என்று நாராயண் சிங் கூறுகிறார்.
அதிர்ச்சியில் விவசாயிகள்
இந்த சம்பவத்திற்குப் பிறகு, நிஹாங் சீக்கியர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியபோது, போராட்ட இடத்தில் இருந்த விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர். இருப்பினும், பேச விரும்பிய பலரும் கேமராவுக்கு முன்வரத் தயாராக இல்லை.
சிங்கு எல்லையில் உள்ள ஐக்கிய கிசான் மோர்ச்சாவின் மேடை, இறந்தவர் தூக்கிலிடப்பட்ட இடத்திலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில் உள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகும் இங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. மேடையிலிருந்து உரைகளும் நிகழ்த்தப்படுகின்றன. மேடையிலிருந்து அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
இந்த சம்பவத்தை கண்டித்த ஐக்கிய கிசான் மோர்ச்சா, நிஹாங் சீக்கியர்களை போராட்ட இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது.
கிசான் மோர்ச்சாவின் அறிக்கைக்கு பதிலளித்த பல்விந்தர் சிங், "அவர்களுக்கு சம்மந்தம் இல்லையென்றால், அவர்கள் அதை வைத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் பொதுமக்கள் அனைவரிடமும் எங்களுக்கு சம்மந்தம் உள்ளது. எங்காவது தவறு நடந்தால், நாங்கள் அங்கு இருப்போம். பாதுகாக்கவே நாங்கள் படைக்கப்பட்டுள்ளோம்," என்றார்.
" மோர்ச்சாவுக்காக, நாங்கள் இங்கிருந்து செல்லவேண்டும் என்றால் சென்றுவிடுகிறோம். மோர்ச்சாவை தோல்வியடைய விடமாட்டோம். அதற்காக எந்த தியாகமும் செய்யத்தயாராக உள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

பட மூலாதாரம், Hindustan Times
போலீஸ் அணுகுமுறை
தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள ஹரியாணாவின் சோனிபத் மாவட்டத்தின் கோண்ட்லி காவல் நிலைய வரம்புக்குட்பட்ட இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. ஹரியாணா போலீஸ் குழு இந்த சம்பவத்தை ஆய்வு செய்ய பல முறை வந்தது. ஆனால் அவர்கள் யாரையும் விசாரிக்கவில்லை அல்லது நிஹாங் சீக்கியர்களின் முகாமிற்குள் நுழையவில்லை.
ஹரியானா காவல்துறையின் உயர் அதிகாரிகள் நாள் முழுவதும் கோண்ட்லி காவல் நிலையத்தில் முகாமிட்டனர். இங்கு ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், ரோஹ்தக் பிரிவு ஐஜி சந்தீப் கிரிவார், "நாங்கள் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்துள்ளோம். சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்" என்று கூறினார்.
"குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி எங்களிடம் தகவல் உள்ளது. 5 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சில சந்தேக நபர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்."என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று நிஹாங் சீக்கியரான சரப்ஜீத் சிங் வெள்ளிக்கிழமை மாலையில் சரணடைந்தார்.
சோனிபத் போலீசார் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் அவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தனர். சரணடைவதற்கு சற்று முன்பு, சரப்ஜீத், "நான்தான் அனைத்தையும் செய்தேன். வேறு யாரும் எதுவும் செய்யவில்லை," என்றார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சரணடைவதற்கு முன் சிங்கு எல்லையில் உள்ள நிஹாங் சீக்கியர்கள் சரப்ஜீத் சிங்கிற்கு மரியாதை செலுத்தினர். சரணடையும்போது, ஜதேதார் அமான் சிங் பிபிசியிடம், "நாங்கள் விவசாயிகளுடன் சேர்ந்து போராடத்தொடங்கி பத்து மாதங்கள் ஆகின்றன. ஏதோ ஒரு தீயவன் எங்கள் குருவை அவமதிக்க முயன்றான். நாங்கள் அவன் மீது நடவடிக்கை எடுத்தோம்,"என்று தெரிவித்தார்.
மற்றொரு ஜதேதார் ராஜாராஜ் சிங், "சரப்ஜீத்தை பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். மோர்ச்சாவின் பிரச்சனை தீரும்வரை நாங்கள் இங்கே நிற்போம். நாங்கள் சரப்ஜீத்தை மரியாதையுடன் நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம்," என்றார்.
கிசான் மோர்ச்சாவை எச்சரிக்கும் அமான் சிங் "நீங்கள் எந்த அரசியலைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை குருவிடம் இருந்து விலகியிருந்து செய்யுங்கள். இன்று வரை நாங்கள் விவசாயத் தலைவர்களுக்கு எதிராகப் பேசவில்லை. உங்கள் அறிக்கையை சிந்தித்து வெளியிடுங்கள். நடந்தது எதுவோ அது குரு சாஹிபின் ஆணைப்படி நடந்தது,"என்று கூறினார்.
பிற செய்திகள்:
- கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்?
- பூடான்: தொலைந்த வரலாறை தேடும் 'சந்தோஷ சாம்ராஜ்ஜியம்'
- தென் கொரியாவின் சுயமுகத்தை காட்டும் ஸ்க்விட் கேமின் ஆறு பகுதிகள்
- கேரளாவில் கடும் மழை வெள்ளம், நிலச்சரிவு: 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட்
- ரஷ்யாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை கடந்தது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








