சைலேந்திர பாபு ஐபிஎஸ் பேட்டி: "மக்கள் மனுக்களை விசாரித்து 30 நாட்களுக்குள் நடவடிக்கை"

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள சைலேந்திர பாபு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை விசாரித்து 30 நாட்களுக்குள் அறிக்கை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக உள்ள திரிபாதியின் பதவிக்காலம் இன்று நிறைவடைகிறது. இதையொட்டி புதிய தலைமை இயக்குநராக முனைவர் சைலேந்திரபாபுவை தமிழக அரசு ஜூன் 29ஆம் தேதி நியமித்தது.
இதைத்தொடர்ந்து சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இன்று புதிய டிஜிபி பொறுப்பேற்கும் முன்னர், பதவியில் இருந்து ஓய்வு பெறும் டிஜிபி திரிபாதிக்கு காவல்துறை உயரதிகாரிகள் வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர். முன்னதாக, புதிய டிஜிபி ஆக பொறுப்பேற்க வந்த சைலேந்திர பாபுவை திரிபாதி தலைமையக வாயில் பகுதியில் வரவேற்றார். பின்னர் இருவரும் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதன் பிறகு புதிய டிஜிபி ஆக சைலேந்திர பாபு பொறுப்பேற்றார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காவல்துறை தலைமை இயக்குநர் பதவி ஏற்றிப்பது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு. இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது பதவிக்காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாரமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களில், குறிப்பாக மாநில முதல்வரிடம் கொடுத்த மனுக்கள் மீது 30 நாட்களில் துரித விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்," என்று கூறினார்.
"காவலர்களைப் பொருத்தவரை, பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும், மனித உரிமைகளை மதித்து அவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படும். காவலர் குறைகள் தீர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இலக்கை அடைய பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
உணவு, உடற்பயிற்சி என தினமும் புத்துணர்ச்சியோடு வலம் வரும் சைலேந்திர பாபு, இணைய உலகில் தனக்கென ஒரு பெரும் கூட்டத்தையே வைத்திருக்கிறார். டி.ஜி.பி பதவி வரையில் சைலேந்திர பாபு உயர்ந்தது எப்படி?
யார் இந்த சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறையில் கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த சைலேந்திர பாபு, அரசுப் பள்ளியில் தனது படிப்பை நிறைவு செய்தார். இவரது தந்தை இந்திய ராணுவத்தின் கப்பல் பிரிவில் பணியில் இருந்துள்ளார். பின்னர், கேரள போக்குவரத்துத் துறையில் பணிபுரிந்துள்ளதாகவும் பேட்டி ஒன்றில் சைலேந்திர பாபு குறிப்பிட்டுள்ளார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயம் பயின்றுள்ளார். அங்கு படிக்கும்போதுதான் மத்திய அரசுப் பணியாளர் தேர்வினை எழுதி ஐ.பி.எஸ் ஆக தேர்வானார்.

பட மூலாதாரம், Sylendra babu
பள்ளியில் படிக்கும் காலத்தில் கற்பித்த ஆசிரியர்களையும் கல்லூரிக்கால ஆசிரியர்களையும் இன்றளவும் நினைவுகூர்வது சைலேந்திர பாபுவின் சிறப்பாக உள்ளது. அதிலும், ஆண்டுக்கொரு முறை குழித்துறை அரசு பள்ளியில் தன்னுடன் படித்த மாணவர்களை சந்திப்பதும் அவரது வழக்கமாக உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரி நடத்தும் `பழைய மாணவர்கள் சந்திப்பு' நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கேற்பது சைலேந்திர பாபுவின் வழக்கம். `தன்னுடைய ஐ.பி.எஸ் கனவுக்கு வேளாண் கல்லூரி எந்த வகையில் துணை நின்றது?' என்பதையும் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது 25 வயதில் காவல்துறையில் ஐ.பி.எஸ் ஆக தேர்வான பிறகு ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியராக இருந்த ராமசாமி என்பவரிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றபோது, அவர் உயிருடன் இல்லாததை வேதனையோடு பதிவு செய்துள்ளார். `என் அப்பாவிடம் கூறி ஆசிர்வாதம் வாங்குவதைவிடவும் அவரிடம் ஆசி பெறுவதை மிக முக்கியமான ஒன்றாகப் பார்த்தேன்' எனவும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். `காவல்துறையின் மீது ஈடுபாடு வருவதற்கு பள்ளியில் என்.சி.சி கொடுத்த ஊக்கமும் ஒரு காரணம்' என்கிறார் சைலேந்திர பாபு.
என்கவுன்டர் சர்ச்சை!
இந்திய காவல் பணியில் சேர்ந்த பிறகு கோபிச் செட்டிபாளையத்தில் ஏ.எஸ்.பியாக பணியைத் தொடங்கியவர், சேலம், தருமபுரி, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கோவை மாநகர ஆணையராக பணிபுரிந்த காலத்தில்தான் சிறுமி முஸ்கன் மற்றும் அவரது சகோதரர் ரித்திக் ஆகியோர் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தது.
இதில் தொடர்புடைய மோகன்ராஜ் என்ற குற்றவாளி மீது என்கவுன்ட்டர் நடந்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு கிளம்பினாலும், மனித உரிமை ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்றனர். இவர் சிறைத்துறையில் தலைவராக இருந்த காலகட்டத்தில் சிறைக் கைதிகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களையும் முன்னெடுத்தார்.
அதேநேரம், உடற்பயிற்சி மீது தீராத காதல் கொண்ட சைலேந்திர பாபு தினமும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆரோக்கியமான உணவுகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது, எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது எப்படி என இணையத்தில் தினமும் இவர் வெளியிடும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.
அதிலும், ` எந்த உணவையும் சாப்பிடலாம். ஆனால், அளவோடு சாப்பிட வேண்டும். நாம் சாப்பிட்ட பிறகும் பசி இருக்க வேண்டும்' என உணவு தொடர்பாக அறிவுரையும் வழங்குவார். தினமும் காலையில் மிக எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்வது இவரது வழக்கம். அந்த உணவுகளைப் பற்றிய அவரது சிறு குறிப்பும் வெகு பிரசித்தம்.
சூர்யாவின் ரோல் மாடல்!

பட மூலாதாரம், Surya FB
இதுதவிர, புத்தகங்களை எழுதுவதும் இவருக்குப் பிடித்தமான ஒன்றாக உள்ளது. `உனக்குள் ஒரு தலைவன்', `சிந்தித்த வேளையில்', `உங்களுக்கான 24 போர் விதிகள்', `அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும்', `உடலினை உறுதி செய்', `சாதிக்க ஆசைப்படு' உள்பட ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார்.
`Missing children' என்ற இவரது ஆராய்ச்சிக் கட்டுரைக்காக சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தையும் வழங்கியது. குடியரசுத் தலைவர் விருது, வீரதீர செயலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, கடமை உணர்வுக்கான தமிழ்நாடு அரசின் விருது என ஏராளமான விருதுகளையும் சைலேந்திர பாபு குவித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான `காக்க காக்க' படத்தின் போலீஸ் அதிகாரி வேடத்தில், சைலேந்திர பாபுவை மனதில் வைத்துக் கொண்டே நடித்ததாக பின்னாளில் நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார்.
ஏ.எஸ்.பியாக பணியைத் தொடங்கி சிறப்பு அதிரடிப்படைத் தலைவர், காவல்துறை ஆணையாளர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர், கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி, ரயில்வே டி.ஜி.பி எனப் பல பதவிகளை அலங்கரித்த சைலேந்திர பாபு, தமிழகத்தின் 30 வது டி.ஜி.பியாக பதவியேற்க இருக்கிறார்.
பிற செய்திகள்:
- சைலேந்திர பாபு ஐபிஎஸ்: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி கடந்து வந்த பாதை
- “கடன் வாங்கி நெய் உண்பது” போல் உள்ளதா மோதி அரசின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள்?
- 'இந்திய ஒன்றியம்' என்ற வார்த்தையால் எழுந்த சர்ச்சை: தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம்
- தவறான இந்திய வரைபடம்: ட்விட்டர் இந்தியா தலைமை நிர்வாகி உள்பட இருவர் மீது வழக்கு பதிவு
- சீனாவில் 100 ஆண்டுகளை நிறைவு செய்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இயங்குவது எப்படி?
- 'மேதகு' திரைப்படம் யாருக்கான பதிலடி? இயக்குநர் கிட்டு பேட்டி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












