"பாஜக அண்ணாமலை, போலீஸ் மீது தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்": காவல்துறை அறிக்கை

கோவை கார் வெடிப்பு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு போலீஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதற்கு பதிலாக அண்ணாமலையும் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு காவல் துறை தலைமையகத்தில் இருந்து வெளியான இந்த அறிக்கையில்,
அண்ணாமலை, "புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர், மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த வழக்கை தாமதமாக தேசியப் புலனாய்வு முகமைக்கு அனுப்பியதாக கூறுகிறார்.
இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வதும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (UAPA) சேர்க்கப்பட்டாலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008-ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அதிகாரி மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

- தமிழ்நாட்டில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தந்து தமிழ் பின்னுக்குத் தள்ளப்படுகிறதா?
- தமிழ்நாட்டில் தொடரும் சுடுகாட்டுப் பிரச்னைகள் - தீர்வு என்ன?
- இந்தியாவின் அனுமதியின்றி லட்சத்தீவு அருகே பயிற்சி நடத்திய அமெரிக்கக் கடற்படை
- தமிழ்நாடு மீனவர்கள் மீது நடுக்கடலில் இந்திய கடற்படை துப்பாக்கி சூடு: கேப்டன் விசாரணை

அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம் ஆனால், நடைமுறையில், ஒன்றிய அரசு, தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.
கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி அதன்பிறகு, வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விஷயத்தை விளக்கிய காவல் துறை அறிக்கை,
"சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமாகவே முன்வந்து தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம்.
ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே தமிழ்நாடு முதல்வர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தார்.
இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகளில் சில மாதங்கள் கழித்துக்கூட வழக்குகள் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டன. அதுவும் சில வழக்குகளில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்.ஐ.ஏ. விடம் ஒப்படைக்கப்பட்டன" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இது அபத்தம்'
அத்துடன் நில்லாமல், முன்கூட்டியே இந்திய உள்துறை அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து எச்சரித்ததாக அண்ணாமலை கூறியதையும் தமிழ்நாடு போலீஸ் தனது அறிக்கையில் மறுத்துள்ளதுடன், அண்ணாமலையின் கருத்து அபத்தம் என்றும் கூறியுள்ளது.
"திடீரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புது டெல்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாகப் புகார் கூறுகிறார். இது அபத்தமானது. ஏனென்றால், அவர் குறிப்பிடுவது. புது டில்லி உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கையே ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவில்லை.
அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததாகவும், காவல்துறை அதை அலட்சியப்படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை.
18 -10-2022 தேதியிட்ட வழக்கமான கற்றறிக்கை 21 ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இவர் சொல்வது போல் கோவையில் இந்த சம்பவத்தை சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருந்தால், தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைது செய்து, வீடுகளை சோதனையிட்டு வெடி பொருட்களை கைப்பற்றி இருக்கும். எனவே இது போன்ற உண்மையில்லாத, மிகைப்படுத்தப்பட்ட செய்திகளையும், வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி(யான அவர்) பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று தமிழில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை ட்வீட்
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் விரைவில் பதில் அளிக்கப்படும் என்றும், தமிழ்நாடு போலீஸ் டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி ஆகியோர் அறிவாலயத்தின் விரிவாக்கம் போல செயல்படுவதாகவும் ட்விட்டரில் ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. இது தொடர்பாக அடுத்தடுத்து தொடர் ட்வீட்டுகளை இட்ட அவர்,

பட மூலாதாரம், Twitter/Annamalai
போலீஸ் துறையின் உயர்மட்டத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மயமாக்கம் வேதனை தருவதாகவும், தங்களுடைய புகார் உயர் மட்டத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராகத்தான் என்றும், ஆனால், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாடு போலீஸ் துறையின் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். போலீசின் மன உறுதியைக் குலைப்பதாக தங்களைக் குற்றம்சாட்டாமல், எங்கே தவறு நடந்தது என்று தங்களைத் தாங்களே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். என்று கூறியுள்ளார் அவர்.
அனுமானமான செய்திகளை வெளியிடவேண்டாம் - ஆணையர்
இதனிடையே பத்திரிகையாளர்கள், உறுதிப்படுத்தப்படாத, அனுமானமான செய்திகளை வெளியிடுவதாக கூறிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், வதந்திகளையும், விசாரணையைப் பாதிக்கும் வகையிலான செய்திகளையும் வெளியிடவேண்டாம் என்று ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
"இந்த சம்பவம் தொடர்பில், பத்திரிகையாளர்கள் தங்கள் பத்திரிகைகளில், புலன்விசாரணை பற்றி, குற்றவாளிகளின் வாக்குமூலம் என்ற பெயரில், அனுமானமான, உறுதிப்படுத்தப்படாத செய்திகளை வெளியிட்டுவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் இந்த வழக்கு தொடர்பாக செய்திகளை வெளியிடும்போது, புலன் விசாரணையைப் பாதிக்காத வகையிலும், வதந்தி பரப்பாத வகையிலும்," வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









