பாலமேடு ஜல்லிக்கட்டு: திமில் குலுங்க இளைஞர்களோடு மல்லுகட்டிய கம்பீரக் காளைகள் - கள படங்கள்

மதுரை பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. இதில் 21 காளைகளை பிடித்த பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் முதலிடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது. அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடர்ந்து அடுத்த போட்டி ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது.பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் சீறிக்கொண்டு காளைகள் வருவதும் அவற்றைப் பிடிக்க மாடுபிடி வீரர்கள் களமாடியதும் நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பை கூட்டிக் கொண்டே இருந்தன.தலா ஒரு மணி நேர சுற்றில் 30 வீரர்கள் என்கிற கணக்கில் மொத்தம் ஏழு சுற்றுகளாக போட்டி நடந்தது.
இன்றைய போட்டியில் 729 காளைகள் போட்டியில் பங்கெடுத்தன. சரியாக மாலை 5 மணிக்கு போட்டி நிறைவடைந்தது.இதன் முடிவில் முதலிடம் பிடித்த வீரராக பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் அறிவிக்கப்பட்டார். நான்காவது சுற்றில் களத்துக்கு வந்த்து 21 காளைகளை பிடித்தார். 2020, 2021ஆம் ஆண்டுகளிலும் இவர் முதலிரண்டு இடங்களை பிடித்திருந்தார். இப்போது மூன்றாவது முறையாக வென்ற இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது.சிவகங்கை புலியூரைச் சேர்ந்த சூறாவளி என்ற காளைக்கு, சிறந்த காளைக்கான முதல் பரிசு வழங்கப்பட்டது. அதன் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இரண்டாமிடம் பிடித்த மாடுபிடி வீரராக குருவித்துறையைச் சேர்ந்த கார்த்திக் ராஜா அறிவிக்கப்பட்டார். இவர் 11 மாடுகளை பிடித்துள்ளார். இவருக்கு திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
மூன்றாம் இடம் பிடித்த வீரராக மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா தேர்வானார்.
முன்னதாக காலை 11.30 மணியளவில் விதிகளை மீறி சிலர் காளைகளை வாடிவாசலின் பின்பகுதியில் அவிழ்த்து விட முயன்றனர். அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். இந்த போட்டியில் ஆள் மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் இருவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


தமிழ்நாட்டையே ஜல்லிக்கட்டுப் போட்டியில் பரவசப்படுத்திய பாலமேடு ஜல்லிக்கட்டுப் படங்கள் இதோ.

பாலமேடு ஜல்லிக்கட்டில், தன் திமிலைப் பிடிக்கும் வீரர்களை எல்லாம், உதறிவிட்டு கம்பீர நடைபோடும் கட்டுடல் காளை.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தங்கள் காளைகளை அவிழ்த்துவிட காத்திருக்கும் காளை மாட்டு உரிமையாளர்கள்.

ஒருவரின் பிடியை உதறவிட்டு, மற்றொருவரின் பிடியிலிருந்து விடுபட துள்ளிக் குதிக்கும் வலிமையான காளை.

வாடிவாசலிலிருந்து வெளி வந்த காலை மின்னல் வேகத்தில் திமில் குலுங்க ஓடுகிறது. மறுபக்கம் காளைக்கு ஈடு கொடுத்து திமிலை அணைத்த படி ஒரு இளைஞரும் ஓடுகிறார்.

ஒரு காளை, ஒரு இளைஞர், திமிலோடு மோதி விளையாடி ஜல்லிக்கட்டுப் போட்டியை சூடேற்றிய தருணம்.

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு, பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டுகளிக்க வந்த பார்வையாளர்கள்.

வாடிவாசலில் இருந்து வந்தது தான் தெரியும், பிடிப்பது ஒருவரோ, இருவரோ, எவரையும் பார்க்காமல் துள்ளிக் குதித்தோடும் அற்புக் காளை.

பிடித்த பிடியை விடாத இளைஞர், பிடியை பிரிக்கும் நோக்கில் கண்ணில் வேகத்தோடு திமிறித் தெறித்தோடும் காளை.

வாடிவாசலிலிருந்து புறப்பட்ட காளை, மாடுபிடி வீரர்களை அருகில் கூட அண்ட விடாமல் அசால்ட் காட்டிய கம்பீரக் காளை.

பாலமேடு ஜல்லிக்கட்டில், வாடிவாசல் வழி களம் கண்டு இளைஞர்களைத் தெறிக்க விட, தங்கள் உரிமையாளர்களோடு காத்திருந்த காளைகள்.
பிற செய்திகள்:
- மாயாவதி போட்டியிடாத தேர்தல் களத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - என்ன பின்னணி?
- இலங்கையில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு மோசமாக நடத்தப்படுகிறார்களா?
- காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சொல்வது உண்மைதானா?
- யூடியூப் மூலம் 2021இல் அதிகம் பணம் சம்பாதித்த 10 பேர் யார்? எவ்வளவு வருமானம்?
- 'பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்' - ஆர்.எஸ்.எஸ்
- இந்திய ராணுவத்தினருக்கு டிஜிட்டல் பிரின்டிங் சீருடை அறிமுகம் - 10 முக்கிய தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்









