தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள் மார்ச் 31வரை மூடல்

பட மூலாதாரம், ARUN SANKAR/getty Images
கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், டாஸ்மாக் பார்கள், வணிக வளாகங்கள் போன்றவை நாளை முதல் மார்ச் 31 வரை மூடப்பட்டிருக்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்லத் திட்டமிட வேண்டாம் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டாலும், 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வழக்கம் போல நடத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், The India Today Group/getty Images
கொரோனா பரவலை கட்டுப்படுத்த, டாஸ்மாக் பார்கள், விளையாட்டு மையங்கள் மூடப்படவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்வலம், கோடைகால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவற்றை நடத்த அனுமதி இல்லை என்றும் சுற்றுலா விடுதிகள் மூடப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

- கொரோனா வைரஸ்: முடங்கிய நியூயார்க் நகரம், அமெரிக்காவில் 69 பேர் பலி - சில தகவல்கள்
- Pandemic என்றால் என்ன? ஏன் கொரோனா வைரஸை அப்படி சொல்கிறார்கள்?
- கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?
- கொரோனா வைரஸ்: டெல்லியில் 50க்கு மேற்பட்டோர் கூடத் தடை
- கொரோனா தொற்றிலிருந்து உங்களை காத்து கொள்வது எப்படி?

மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து தமிழகத்தில் நுழைவோருக்கு தெர்மல் ஸ்க்ரீன் சோதனை செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் முன்பே திட்டமிட்ட நிகழ்வுகளைத் தவிர புதிய நிகழ்வுகளை நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், உயிரியல் பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மூடப்படவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எல்லா தொழிற்சாலைகள் மற்றும்தனியார் நிறுவனங்களிலும் கை கழுவுவதை பற்றியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தனியார் நிறுவனங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல கொரோனா குறித்த வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








