கொரோனா வைரஸ் இதுவரை: உலகில் 1.65 லட்சம் பேருக்கு தொற்று, 6,500 பேர் பலி Corona Global Latest Updates

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் உலகில் 146 நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை, சுமார் 1.65 லட்சம் பேருக்கு இந்த தொற்றியுள்ளது, இவர்களில் சுமார் 6,500 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு மரணம் நிகழ்வது இதுவே முதல்முறை,.
இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக மாறி உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சரி கொரோனா தொடர்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் நடந்த தகவல்களைப் பார்ப்போம்.

- இரானில் கடந்த 24 மணி நேரத்தில் 129 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இரானில் மொத்தம் 853 பேர் இறந்துள்ளனர்.
- 14,991பேர் இரானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா, இத்தாலிக்கு பிறகு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இரான் உள்ளது.
- ரோல்ஸ் ராய்ஸ், ஃபோர்டு மற்றும் ஹோண்டா போன்ற கார் நிறுவனங்களை சுவாச உதவிக் கருவியான வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள் தாயாரிக்கும்படி பிரிட்டன் அரசு கோரியுள்ளது. கொரோனா வைரஸின் தீவிரத்தால் மருத்துவ கருவிகள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு இந்தக் கோரிக்கையை விடுப்பதாக அரசு கூறுகிறது.
- மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பா முழுவதும் எல்லைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
- பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுடன் தனது எல்லையை மூட திட்டமிட்டுள்ளது ஜெர்மனி.
- ஆஸ்திரியாவில் ஐந்து பேருக்கு மேல் கூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸ் காரணமாக இப்போது வரை 6,065 பேர் இறந்துள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 3,085 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்.


- அமெரிக்காவில் 69 பேர் இப்போது வரை பலியாகி உள்ளனர்.
- ஸ்பெயினில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

பட மூலாதாரம், AND-ONE/getty images
- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 162,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் கொரோனா வைரஸை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உள்ள போதும், ஆசியப் பங்குச் சந்தைகள் இறங்கு முகமாகவே உள்ளன.
- தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 74 பேருக்கு கொரோனா இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் அங்கு இதுவரை 8,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் பலியாகி உள்ளனர்.
- கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீனாவில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் தொழிற்சாலைகளின் உற்பத்தி குறைந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.
- கொரோனா அச்சம் காரணமாக நியூயார்க் நகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. உணவகங்களும், மதுபான விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
- தனிமையை போக்க இத்தாலியில் பெண்கள் இணையம் மூலம் யோகா பயில தொடங்கி உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












