ரணில் விக்ரமசிங்க: இலங்கையில் பௌத்த முன்னுரிமையை தவிர்ப்பதற்காக ஜனாதிபதிக்கான கொடியை தடை செய்தாரா?

ரணில்

பட மூலாதாரம், PMD

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்று பதவியேற்றார்.

இலங்கையின் பொது மக்கள் வாக்குகளினால் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், நாட்டை விட்டு தப்பிச் சென்று, சிங்கப்பூரிலிருந்து கடந்த 14ம் தேதி தனது பதவி விலகலை அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த 15ம் தேதி பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க, பதவி பிரமானம் செய்துக்கொண்டார்.

ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (20) நடத்தப்பட்டது.

இதில் பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க, 134 வாக்குகளை பெற்று, இலங்கையில் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட காலப் பகுதியில் வெளியிட்ட சில அறிவிப்புகள் இன்றும் பலருக்கு கேள்விகளை ஏற்படுத்தி வருகின்றது.

ஜனாதிபதிகளின் அடையாளமான கொடிகள்

இலங்கை நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள், தங்களது அடையாளங்களை வெளிப்படுத்துவதற்காக தமக்கு விருப்பமான கொடிகளை பயன்படுத்த முடியும்.

இதன்படி, நாட்டை ஆட்சி செய்த ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தமக்கு தேவையான விதத்தில், தமக்கான கொடிகளை வடிவமைத்துக்கொண்டார்கள்.

இலங்கையின் முதலாவது ஜனாதிபதியான வில்லியம் கோப்பல்லாவ தனக்கான கொடியாக இலங்கை அரசாங்கத்தின் இலட்சிணை மற்றும் ''ஸ்ரீலங்கா" என சிங்கள மொழியில் எழுதப்பட்ட கொடியை தனது கொடியாக பயன்படுத்தியுள்ளார்.

அதன் பின்னரான காலத்தில் 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் ஊடாக கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில், தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிகள் தமக்கான கொடிகளை வடிவமைத்துக் கொண்டார்கள்.

முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஜே.ஆர்.ஜெயவர்தன 1978ம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

அதேபோன்று, அதன்பின்னரான காலத்தில் ரணசிங்க பிரேமதாஸ, டீ.பி.விஜேதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தமக்கான கொடிகளை வடிவமைத்துக்கொண்டனர்.

இவ்வாறு இலங்கையை ஆட்சி செய்த அனைத்து ஜனாதிபதிகளும், தமது கொடிகளில் பௌத்த சின்னங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

அரச இலை, பௌத்த மதத்திற்கான நிறங்கள், தாமரை பூ உள்ளிட்ட பௌத்த சிங்கள இனத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரணில்

பட மூலாதாரம், PMD

இலங்கையில் பல இனங்கள், பல மதங்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் வாழ்கின்ற போதிலும், இதுவரை ஆட்சி செய்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாட்டின் அரச தலைவன் சிங்கள, பௌத்த மக்களை மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆட்சி செய்தமை, அவர்களது கொடிகளின் ஊடாக வெளிப்படுத்தப்படுகின்றது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பௌத்த மதத்துக்கு முன்னுரிமை

''இலங்கை குடியரசில் பௌத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, அதற்கிணங்க 10ம், 14(1)(உ)ஆம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளையில், பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தலும் வேண்டும்" என அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி, பௌத்த மதத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், இதுவரை ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதிகள் தமது கடமைகளை நிறைவேற்றியிருந்தார்கள் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், நாட்டில் தேசிய கொடி மாத்திரமே இருக்க வேண்டும் எனவும், ஜனாதிபதிக்கான கொடி இனி தேவையில்லை எனவும் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட உடன், ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்தார்.

ரணில்

பட மூலாதாரம், PMD

இதன்படி, ஜனாதிபதிக்கான கொடியை அமைக்காத முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவின் பெயர் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

ஜனாதிபதிக்கான கொடியை ரணில் விக்ரமசிங்க கைவிட்டதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை. நாட்டில் மதசார்பற்ற ஒரு கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எண்ணமாக இருக்கலாம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

நாட்டிற்கு ஒரு கொடி மாத்திரமே என கூறிய அவர், தேசிய கொடியை மாத்திரமே இனி பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பையும் அவர் விடுத்தார்.

இலங்கையின் தேசிய கொடியில் அனைத்து இனங்களையும், அனைத்து மதங்களையும் பிரதிபலிக்கும் அடையாளங்கள் காணப்படுகிறது.

அத்துடன், நாட்டின் ஜனாதிபதியை அதிமேதகு என விழிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஏன் நாடாளுமன்றத்தில் சத்திய பிரமானம் செய்தார்?

ரணில்

பட மூலாதாரம், PMD

''நான் 45 வருடங்கள் இந்த நாடாளுமன்றத்தில் எனது வாழ்க்கையை செலவிட்டிருக்கின்றேன். எனது வாழ்க்கை இந்த நாடாளுமன்றத்திலேயே இருக்கின்றது. இந்த நாடாளுமன்றத்தினால் இந்த கௌரவம் எனக்கு வழங்கப்பட்டமையை இட்டு நான் நன்றியை கூறிக் கொள்ள வேண்டும். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, உங்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை இருக்கின்றது. இந்த நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் எனது சத்திய பிரமான நிகழ்வை நடத்துவதற்கு எனக்கு அனுமதி தாருங்கள். சபைக்குள் இல்லை. சபைக்கு வெளியில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதியாக சத்திய பிரமானம் செய்ய அனுமதி தாருங்கள்." என ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட தருணத்தில் கூறியிருந்தார்.

தனது வாழ்க்கையில் 45 வருடங்களை நாடாளுமன்றத்திலேயே செலவிட்டதாகவும், தனது வாழ்க்கை நாடாளுமன்றத்திலேயே இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் முன்னைய நாடாளுமன்றத்திலேயே (தற்போது ஜனாதிபதி செயலகம்) சத்திய பிரமானம் செய்துக்கொண்டார்.

அதன் பின்னர் ஆட்சி செய்த ஜனாதிபதிகள், ஒவ்வொரு இடங்களில் தமது சத்திய பிரமானங்களை செய்துக்கொண்டனர்.

இறுதியாக கோட்டாபய ராஜபக்ஸ, அநுராதபுரம் ருவன்வெலிசாய பௌத்த விகாரையிலேயே, ஜனாதிபதியாக சத்திய பிரமானம் செய்துக்கொண்;டார்.

படிப்படியாக மாற்றம் பெற்ற ஜனாதிபதிகளின் பதவி பிரமான நிகழ்வுகள் இடம்பெறும் இடங்கள், இறுதியில் பௌத்த விகாரையை தெரிவு செய்யும் அளவிற்கு, சிங்கள பௌத்த ஆதிக்கம் அதிகரித்தது.

சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே தான் பதவிக்கு வந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி பிரமான நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதத்தில், பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை பலரும் எதிர்த்திருந்தனர்.

இந்த பௌத்த மயமாக்கத்தின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, அனைவருக்கும் ஒரு சமமான அந்தஸ்தை வழங்கும் நோக்கில் கூட ரணில் விக்ரமசிங்க, தனது பதவி பிரமானத்தை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கலாம் என்கின்றார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

எனினும், ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, முதல் முதலில் கொழும்பு கங்காராமை பௌத்த விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டமை, பௌத்த மதத்திற்கான அங்கீகாரத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்பதாகவே பார்க்கப்படுகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :