"இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் திட்டம்” - போலீஸ் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் திட்டம் - போலீஸார் தகவல்.

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் மற்றுமொரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக போலீஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று (ஞாயிறு) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் தேதிக்கு பின்னரான தேதியொன்றிலேயே இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹசீம் உயிருடன் இருந்த காலப் பகுதியிலேயே இந்த இரண்டாம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

போலீஸ் ஊடகப் பேச்சாளர்
படக்குறிப்பு, போலீஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன

இந்த இரண்டாவது குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்ட, ஒத்துழைப்புக்களை வழங்கிய, அதனை செயற்படுத்த முயற்சித்தவர்கள் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தற்போது திரட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு வெளிநாடொன்றில் வசிக்கும் சிலர் உதவிகள் வழங்கியிருந்தமையும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தெற்காசிய நாடொன்றின் மீது தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தை திட்டுவதற்கு இலங்கையை ஒரு தளமாக செயற்படுத்துவதற்கான திட்டமொன்று குறித்தும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் இஸ்லாமியவாத கொள்கைகளை தவறான வழியில் புரிந்துக்கொண்டு, பல அமைப்புக்களை உருவாக்கிய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுள் அவ்வாறான நபர்களும் இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

போலீஸ் ஊடகப் பேச்சாளர்

கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாத அமைப்புக்களுக்கு தலைமைத்துவம் வழங்கியவர்களும், நிதி உதவிகளை செய்தவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹரான் ஹசீம் உள்ளிட்ட குழுவினர் ஆரம்பகட்டத்தில் இரண்டாக பிளவுப்பட்டிருந்ததாக கூறப்பட்டதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு பிரிவினரை திசை திருப்பும் நோக்குடனேயே அந்த குழுவினர் இரண்டாக பிளவுப்பட்ட விதத்தில் செயற்பட்டுள்ளதாகவும், பின்னரான விசாரணைகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டத்தரணியொருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெளிவூட்டல்களை வழங்கினார்.

குறித்த சட்டத்தரணி தாக்குதலை நடத்தியவர்களும் நெருங்கி பழகியுள்ளதாகவும், சில அமைப்புகளுக்கு தலைமைத்துவம் வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலை நடத்தும் திட்டம் - போலீஸார் தகவல்.

பட மூலாதாரம், Getty Images

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் சரத்துக்களுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளமையினால், அவருக்கு பிணை வழங்குவதற்கான சாத்தியம் தற்போது கிடையாது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு நாளை மறுதினத்துடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 277 பேர் உயிரிழந்திருந்ததுடன், சுமார் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: