தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் கடற்படை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்
கடந்த 2008 -ஆம் ஆண்டு கொழும்பு நகரில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசனாயக்க உற்பட 6 கடற்படை அதிகாரிகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதை நிருபிக்க தேவையான ஆதாரங்கள் இருப்பதாக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தனக்கு பிணை வழங்குமாறு கோரி சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு ஏடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டது.
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பின் வழக்கறிஞர் கருத்து தெரிவித்த போது, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் கடத்தப்பட்டது முதல் அவர்களை காணாமல் போகும் வரை இடம்பெற்ற நிகழ்வுகளில் இந்த சந்தேக நபர்களுக்குத் தொடர்புள்ளதாகத் தெரிவித்தார்.
இப்போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் அதன் மூலம் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த அரச தரப்பு வழக்கறிஞர் மேலும் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுமென்றும் எச்சரித்தார்.
எனவே சந்தேக சபர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பாக தான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் கூறினார் அரச தரப்பின் வழக்கறிஞர்.
கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அரச தரப்பிற்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்தார்.
இதன்படி பிணை மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 தேதி வரை ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிவிக்குமாறு அரச தரப்பின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













