தமிழ் சினிமா: திறக்கப்பட்ட திரையரங்குகள் - தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ்?

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலான ஊரடங்கால் தமிகத்தில் மூடப்பட்ட திரையரங்குகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திரையரங்குகளும் மூடப்பட்டன.
திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் திரையரங்கங்களைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கங்களை நவம்பர் 10ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அக்டோபர் 30ஆம் தேதியன்று தமிழக அரசு அனுமதி அளித்தது.
தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து எட்டு மாதங்களுக்குப் பின்னர் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.
இன்று புதிய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ஓர் அறிக்கை வெளியானது.

அதில் "வி.பி.எஃப் சம்பந்தமாக அனைத்து தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புது திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு திரையரங்குகளைத் திறக்க அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
பல கட்டமாகப் பேச்சு வார்த்தை நடத்தியும் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் மீண்டும் தயாரிப்பாளர்களோடு கலந்தாலோசித்ததில், நல்ல தீர்வு ஏற்படும் வரை புது படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே திரையிட்ட திரைப்படங்களான ஓ மை கடவுளே, தாராள பிரபு போன்ற படங்களும், Hit, My Spy போன்ற ஆங்கில படங்களும் வெளியாகியுள்ளன.

- கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் கோவிட்-19 பாதிப்பு எவ்வளவு?
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
- கொரோனா சானிடைசர் தரமானதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?
- கொரோனா வைரஸ்: குணமடைய சிலருக்கு தாமதம் ஆவது ஏன்?

'புதிய திரைப்படங்களுக்கு வி.பி.எஃப் கட்டணம் 100% தள்ளுபடி '
கியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் விபிஎஃப் கட்டணத்தில்100 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அனைத்து புதிய திரைப்படங்களுக்கும் நவம்பர் மாதம் முழுவதும் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த விபிஎஃப் கட்டண தள்ளுபடி காரணமாகத் தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளிவரும் என்று நம்புகிறோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபின் இந்த அறிக்கையால், ஏற்கனவே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படங்களான இரண்டாம் குத்து, களத்தில் சந்திப்போம், எம்.ஜி.ஆர் மகன் போன்ற படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் எண்ணிக்கை குறைவு
தமிழகத்தில் இன்று பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்பட்டன. எட்டு மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டதால் ரசிகர்கள் பலர் ஆன்லைனில் படங்களைப் பதிவு செய்திருந்தனர்.

உள்ளே வரும் ரசிகர்களுக்குத் தமிழக அரசு சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
முகக் கவசம் அணிதல், சேனிடைசர் கொண்டு கைகளைச் சுத்தம் செய்தல், உடல் வெப்ப அளவீடு போன்றவற்றை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழக அரசு அறிவுறுத்திய 50 சதவீத இருக்கைகளுடன் தனி நபர் இடைவெளியை பின்பற்றி அமரவைக்கப்படுகின்றனர்.
கொரோனா காரணமாகத் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












