சௌதி அரேபியாவில் முதல் போட்டியிலேயே மெஸ்ஸியுடன் மோதும் ரொனால்டோ

ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

கால்பந்து ஜாம்பவன்களான லியோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கால்பந்து களத்தில் நேரடியாகச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சௌதி அரேபியாவில் இந்தப் போட்டி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லியோனல் மெஸ்ஸி தற்போது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் எனப்படும பிஎஸ்ஜி அணியில் இடம்பெற்றிருக்கிறார். அதேபோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சௌதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இவ்விரு அணிகளும் வரும் 19-ஆம் தேதி சௌதி அரேபிய தலைநர் ரியாத்தில் நடைபெறும் நட்பு ஆட்டத்தில் மோதிக் கொள்ள இருக்கின்றன. மன்னர் பஹத் அரங்கில் இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது.

அரை நூற்றாண்டு பழமையான, பிரான்ஸின் மிகவும் பணக்கார கிளப்பான பிஎஸ்ஜியை 2011-ஆண்டில் கத்தார் விலைக்கு வாங்கியது. உலகக் கோப்பையை வென்ற மெஸ்ஸி இந்த அணியில் ஆடுவதற்கான பயிற்சியை கடந்த வாரம் தொடங்கிவிட்டார்.

வரும் 17-ஆம் தேதி பயிற்சியை தொடருவதற்காக கத்தார் தலைநகர் தோகாவுக்கு மெஸ்ஸி உள்ளிட்ட பிஎஸ்ஜி அணி செல்கிறது. அதன் பிறகு ரியாத்துக்கு சென்று நட்பு ரீதியிலான போட்டிகளில் அந்த அணி ஆடவுள்ளது. 

அல் நாசர் தவிர அல்ஹிலால் அணியைச் சேர்ந்த வீரர்களும் மெஸ்ஸியின் பிஎஸ்ஜி அணி மோதும் குழுவில் இருப்பார்கள் தெரிகிறது.

அடுத்த மாதம் பிப்ரவரியில் 38 வயதாக இருக்கும் ரொனால்டோ, 2025 வரை அல்-நாசர் கிளப்பில் ஆடுவதற்காக ஒப்ந்தம் செய்து கொண்டிருக்கிறார். இதற்காக அவருக்கு ஆண்டுக்கு 1770 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கத்தார் உலகக் கோப்பையை நடத்தியதைப் போல 2030-ஆம் ஆண்டில் சௌதி அரேபியா உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு முயற்சி செய்து வருகிறது. ஆப்பிரிக்க ஆசிய ஐரோப்பிய கால்பந்து சங்கங்களை ஒருங்கிணைக்கும் வகையில் சௌதி அரேபியா, கிரீஸ், எகிப்து ஆகிய நாடுகள் இணைந்து இந்தப் போட்டியை நடத்துவதற்கான பேச்சுகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகவே உள்நாட்டில் கால்பந்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை சௌதி அரேபியா மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

மெஸ்ஸி - ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

ரொனால்டோ - மெஸ்ஸி மோதல்

கிறிஸ்டியானோ ரொனால்டோவும் லியோனல் மெஸ்ஸியும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இருவரில் யார் மிகச் சிறந்த வீரர் என்ற விவாதம் நெடுங்காலமாகவே நீடித்து வருகிறது. 

ஸ்பெயினில் மெஸ்ஸி பார்சிலோனாவுக்காகவும், ரொனால்டோ ரியல் மாட்ரிட்டிற்காகவும் ஆடிய ஒன்பது அவர்களுக்கு இடையேயான போட்டி வளர்ந்தது.சமூக ஊடகங்களில் பெருகிய காலகட்டத்தில் இது மிகப்பெரும் விவாதமாக எழுந்திருக்கிறது.

ரியாத் நகரை தலைமையிடமாகக் கொண்ட அல் ஹிலால் மற்றும் அல் நாசர் ஆகியவை சௌதி அரேபியாவின் இரண்டு வெற்றிகரமான அணிகள்.

பிஎஸ்ஜி அணி ஐரோப்பிய குளிர் காலத்தில் கத்தாரில் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. 

ரொனால்டோவுக்கு ஒரு உள்ளூர் போட்டியில் ஆடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவர் ஆடப்போகும் முதல் போட்டியே மெஸ்ஸிக்கு எதிரானதாகத்தான் இருக்கும்.

மெஸ்ஸி - ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

சௌதி அரேபியாவின் உத்தி என்ன?

சௌதி அரேபியா விளையாட்டு நிகழ்வுகளில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது. தனியாகப் பிரிந்த LIV கோல்ஃப் தொடருக்கு நிதி ஆதரவு அளித்தது. உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை, ஃபார்முலா ஒன் கிராண்ட்ப்ரீ ஆகியவற்றையும் நடத்துகிறது.

அதே நேரத்தில் பிரீமியர் லீக் கிளப்பான நியூகேஸில் யுனைடெட்டை கையகப்படுத்த சௌதி அரேபிய பொது பொது முதலீட்டு நிதியம் நிதி உதவி அளித்தது.

விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டும் சௌதி அரேபியாவும் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. பெண்ணுரிமை பேசுவோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது உள்ளிட்ட சீர்திருத்தங்கள், பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானின் நிர்வாகத்தின் கீழ் நடந்தாலும், குற்றச்சாட்டுகளும் நீடித்திருக்கின்றன.

2018 இல் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய பட்டத்து இளவரசர் உத்தரவிட்டார் என்று மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகள் நம்புகின்றன. இந்தக் குற்றச்சாட்டை முகமது பின் சல்மான் தொடர்ந்து மறுக்கிறார்.

மெஸ்ஸி - ரொனால்டோ

பட மூலாதாரம், Getty Images

செளதியின் தொலைநோக்குத் திட்டம்

கத்தாரில் உலகக்கோப்பை நடந்தேறிய போது, உலக கால்பந்து கூட்டமைப்பு (FIFA) தலைவர் இன்ஃபான்டினோவுடன் செளதி பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஒன்றாக பலமுறை தென்பட்டார். 2016-ல் வெளியிடப்பட்ட அவரது தொலைநோக்குத் திட்டம் 2030-ல் விளையாட்டுத் துறைக்கு பிரதான இடம் தரப்பட்டுள்ளது. 

அதன் பிறகு, செளதி அரேபியாவின் விளையாட்டு உலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடிந்தது. 

2030-ம் ஆண்டிற்குள் விளையாட்டில் மக்களின் பங்களிப்பை 40 சதவீதமாக உயர்த்துவது, சர்வதேச அரங்கில் சவுதி விளையாட்டு வீரர்களின் செயல்பாட்டை மேம்படுத்துவது, விளையாட்டு சார்ந்த பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவது ஆகிய 3 முக்கிய நோக்கங்களை இந்த தொலைநோக்குத் திட்டம் கொண்டுள்ளது. 

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பேசிய வீடியோ ஒன்றை கால்பந்து பத்திரிகையாளரான யூரி லெவி பகிர்ந்திருக்கிறார்.

அந்த வீடியோவில், ரொனால்டோவின் செளதி அரேபிய வருகை மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி என்று பட்டத்து இளவரசர் கூறியிருக்கிறார். அரபு பிராந்தியம் புதிய ஐரோப்பாவாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: