சோழர் ஆட்சியில் வணிகர்கள் வெட்டிய ஏரிகள், குளங்கள் பற்றி தெரியுமா? கல்வெட்டு கூறும் அரிய தகவல்கள்

வணிகர்கள் வெட்டிய ஏரிகள்
படக்குறிப்பு, ஆலத்தூர் கல்வெட்டு
    • எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வணிகத்தில் லாபமே குறிக்கோள் என்றாலும் கூட, அதில் ஈட்டும் செல்வத்தைக் கொண்டு நற்காரியங்கள் பல செய்பவர்கள் உண்டு. அந்த வகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த வணிகர்கள் அல்லது வணிகர்கள் சேர்ந்த குழுக்கள் பல இடங்களில் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை உருவாக்கியிருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

வருமானத்தில் ஒரு பகுதியை அறப்பணிகள் செய்ய தனியே கணக்கு எழுதி, சேமித்து வைக்கும் வழக்கம் அன்றைய தமிழக வணிகர்களிடம் இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். சோழர்கள் ஆட்சியில் வணிகர்கள் செய்த அறச் செயல்கள் குறித்து இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

‘மடைத்தூண் சரி செய்தல் மற்றும் ஏரிக் கரையை உயர்த்துதல்’

வணிகர்கள் வெட்டிய ஏரிகள்
படக்குறிப்பு, பரிகம் கிராமக் கல்வெட்டு.

வணிகர்களால் உருவாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட நீர்நிலைகள் குறித்து பிபிசி தமிழிடம் இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம் விவரித்தார் .

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தில் உள்ள பிலிப்பட்டி ஊரில் முதலாம் இராஜராஜ சோழர் கால (கி.பி. 984) கல்வெட்டில் ஐநூற்றுவர்கள் மற்றும் வளஞ்சியர் முதலிய வணிகக் குழுவினர் ஊரணி மடைத் தூணில் பழுதை சரி செய்து கொடுத்தது பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

“முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியின் நான்காம் ஆண்டில் (கி.பி. 989) குளித்தலை வட்டத்தில் உள்ள நங்கவரம் என்ற ஊரில் உள்ள குளத்தில் ஓடம் பயன்படுத்துவதற்கும், ஏரியில் மண்ணெடுத்து கரையை பலப்படுத்துவதற்கும் வணிகர்கள் உதவி செய்துள்ளதை கல்வெட்டு வாசகங்கள் தெரிவிக்கின்றன” என்று கூறியதுடன் அதனை அவர் விளக்கவும் செய்தார்.

“‘உறையூர் கூற்றத்தில் உள்ள அறிஞ்சிகை சதிர்வேதி மங்கலத்து சபையோர்கள் குளத்தில் ஓடம் இயங்கவும், ஏரியில் 140 கூடை மண் வீதம் நான்கு நடை வண்டியில் நாள்தோறும் கரையில் கொட்டவும், ஓடத்திலிருந்து மண்ணை எடுத்து ஏரிக்கரையில் கொட்டும் வேலைக்கு 6 நபர்களுக்கும், ஓடம் பழுதாகாமல் பார்த்துக் கொள்கின்ற தச்சனுக்கும் நிலத்தை விற்று கொடுத்து ஊரின் நீர் நிலைகளையும் பாதுகாத்துள்ளனர் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது” என்கிறார் பன்னீர்செல்வம்.

‘குளங்களை உருவாக்கிய வணிகர்கள்’

வணிகர்கள் வெட்டிய ஏரிகள்
படக்குறிப்பு, இந்திய தொல்லியல் துறையின் தமிழ் கல்வெட்டுகள் துறைத் தலைவரும், துணை கண்காணிப்பாளருமான முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்.

வணிகர்கள், ஏரிகள் மட்டுமல்லாது பல குளங்களையும் வெட்டி, சீரமைத்து கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம்.

“அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் என்ற ஊரில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சியின் 23ஆம் ஆண்டு (கி.பி.1201) கல்வெட்டில் 'விக்கிரம சோழபுரத்து நகரத்தார்கள் கிடாரங் கொண்ட சோழப் பெருந்தெருவில் முன்னர் வெட்டி வைத்துள்ள இரண்டு குளங்களையும் ஊர் பொதுவானதாக மாற்றி அமைத்து கொடுத்தார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் ராஜேந்திர சோழரின் 7ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் காணப்படும் கல்வெட்டு (கி.பி. 1253), இராஜராஜ வளநாட்டில் உள்ள மீமலை நாட்டு உடையார் திருவிங்கோயிலுடைய நாயனார் கோவில் சிவ தொண்டர்கள் திருநீற்றுச் சோழபுரத்து வியாபாரி திட்டைச்சேரி உடையான் தேவன் பொன்னம்பல சிலைச்செட்டி என்பவர் தேவதான நிலத்தை சிவனின் கணக்கர் பெற்றுக் கொண்டுள்ளதைக் குறிப்பிடுகிறது” என்று கூறினார்.

மேலும், “‘திருவிங்கோயிலுடைய ஊரில் உள்ள வெட்டி பெருவழியில் குளம் மற்றும் கிணற்றையும் வெட்டி வைத்து பொது காரியம் செய்து கொடுத்துள்ளதையும் இவற்றை பாதுகாப்பவர்களுக்கும் ஜீவனத்திற்காக இறையிலி நிலம் ஒரு வேலி மற்றும் காசு 2100ஆம் கொடுத்துள்ளதாகவும் கல்வெட்டு செய்தி உள்ளது” என்று கூறினார் துணை கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் அருகே நன்னை என்ற ஊரின் ஏரியில் காணப்படும் தனிக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள மூன்றாம் ஜடா வர்மர் சுந்தரபாண்டியன் 18ஆம் ஆட்சியாண்டு (கி.பி.1321) கல்வெட்டில் வணிகர்கள் குளம் வெட்டி கொடுத்துள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“விருத்தாசலத்தில் கி.பி‌ 1714ஆம் ஆண்டு கல்வெட்டில் சென்னப்பட்டணம் பற்றிய செய்தி வந்துள்ளது. சென்னப்பட்டணம் ஆயிரம் நகரத்தாரில் பெரியந்தி மகரிஷி கோத்திரத்தைச் சார்ந்த ராகவ செட்டியார், இவருடைய குமாரர் தியாகப்ப செட்டியார், இவருடைய குமாரர் தியாகம், வெங்கப்படி செட்டியார் இவருடைய தம்பி காளத்திச் செட்டியார் ஆகியோர் திரவியம் (பொருள்) கொடுத்து மணிமுத்தா நதியில் படித்துறை ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளனர்.

இது இப்போதும் உபயோகத்தில் உள்ளது. இது பிற்காலத்தை சேர்ந்தது என்றாலும் வணிகர்கள் செய்த நற்பணிகளில் இதுவும் முக்கியமானது. இதுபோன்று வணிகர்களின் நற்பணிகள் குறித்த பல்வேறு கல்வெட்டுகள் தமிழக முழுவதும் இருக்கிறது” என்று கூறினார் முனைவர் வஞ்சியூர்.க.பன்னீர்செல்வம்.

வணிகர்கள் வெட்டிய ஏரிகள்
படக்குறிப்பு, பரிகம் கிராமத்தில் உள்ள கோவில்.

சோழர்கள் ஆட்சியில் வணிகர்கள்

சோழர்கள் ஆட்சியில் வாழ்ந்த வணிகர்கள் செய்த சமூக பணிகள் குறித்து விளக்கினார் விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பேராசிரியர் ரமேஷ்.

“கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள பரிகம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள பலகை கல்லில் முதலாம் இராஜ ராஜ சோழனின் கல்வெட்டு காணப்படுகிறது. இந்த கல்வெட்டின் முன்புறம் சிதைந்து உள்ளது என்ற போதிலும் பின்புற கல்வெட்டில் வார்த்தைகள் மிகத் தெளிவாக உள்ளன” என்று கூறிய அவர் அதைப் படித்துக் காட்டி அதன் பொருளை நமக்கு விளக்கினார்.

வணிகர்கள் வெட்டிய ஏரிகள்
படக்குறிப்பு, பரிகம் கிராமக் கல்வெட்டு.

“‘ஸ்வஸ்தி ஸ்ரீ தாமபாடியான நரசிங்க பேரில்…’ எனத் தொடங்கும் அந்த கல்வெட்டு ராஜ ராஜ சோழன் ஆட்சியின் 17ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது. கல்வெட்டின் பின்புறம் உள்ள செய்தியானது தாமப்படி என்ற பூர்வீக பெயரைக் கொண்ட நரசிங்க பேரிளமை நல்லூரில் (அதாவது தற்போதைய பரிகம் கிராமத்தில்) ஒலோக விடங்கன் கருணாகரன் என்று அழைக்கப்படும் திருவையோத்தி மயிலாட்டி என்ற வணிகன் ‘வீர சோழன் ஏரி’ என்று அழைக்கப்படும் சீலக பேரேரியை வெட்டி தந்துள்ளது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. (தற்போது பரிகம் கிராமத்தில் வடக்கே உள்ள ஏரி)

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தின் உள்ள ஏரியின் ஓடிப் பகுதிக்கு அருகில் உள்ள 1294ஆம் ஆண்டு விஜய நகர மன்னர் இரண்டாம் தேவ மஹாராயரின் கட்டளைப்படி ஆலத்துரை சேர்ந்த அகமுடையான் மகன் பள்ள கரையான் என்பவர் ஆலத்தூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர பாப்பு கால் ஓடை ஒன்றை வெட்டி சீரமைத்து தானமாக தந்ததை பற்றியும் இந்தக் கல்வெட்டு தெளிவாக விளக்குகின்றது. தற்பொழுதும் இந்த ஓடை வழியாகத் தான் தண்ணீர் வருகின்றது” என்று கூறினார் பேராசிரியர் ரமேஷ்.

தொடர்ந்து பேசிய அவர், “திருவிடைமருதூர் கோவிலில் 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ‘திருப்பாதாள கவறைசெட்டி.. திருநாவுக்கரையன் குளங்கல்ல…’ எனத் தொடங்கும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள திருநாவுக்கரசர் என்ற வணிகர் தான் குளம் தூர்வாரும் பணியைச் செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.

வணிகர்கள் குறித்த புறநானூற்றுப் பாடல்கள்

வணிகர்கள் வெட்டிய ஏரிகள்
படக்குறிப்பு, விழுப்புரம் பேரறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பேராசிரியர் ரமேஷ்.

சங்க காலத்தில் இருந்தே வணிகர்கள் ஏரி, குளங்களை வெட்டி சமூகத்திற்கு அர்ப்பணித்ததை பல்வேறு தமிழ் இலக்கியப் பாடல்கள் தெரிவிக்கின்றன என்று கூறிய பேராசிரியர் ரமேஷ், அதைப் பற்றி விவரித்தார்.

“அதில் புறநானூற்றில் 134வது பாடல் புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் என்பவரால் எழுதப்பட்டதாகும். இது கிமு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பாடலாகும்.

‘இம்மை செய்தது மறுமைக்கும் ஆம் எனும், அறவிலை வணிகன். ஆ அய் அல்லன்…’ எனத் தொடங்கும் அப்பாடல் வணிகர்களின் அறச்செயலை பற்றி தெரிவிக்கின்றது.

அதாவது 'இந்தப் பிறவியில் பிறருக்கு நலன் செய்தால் மேல் உலகில் அல்லது அடுத்த பிறப்பில் நன்மை கிடைக்கும் என எதிர்பார்த்து நன்மை செய்யும் வணிகன் அல்ல நான். நன்மை செய்வதே எமது அறம்’ என்று அந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளது. அக்காலத்தில் வணிகர்கள் நன்மை செய்வதை அறமாகவே உணர்ந்து வாழ்ந்ததையும் இந்த புறநானூற்று பாடல் தெரிவிக்கிறது.

சோழர், பாண்டியர் காலத்தில் வணிகர்கள் அறம் சார்ந்த பல்வேறு பணிகளையும் செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறது” என்கிறார் பேராசிரியர் ரமேஷ்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)