இந்தியா - பாகிஸ்தான் மோதிய இறுதிப்போட்டிகளில் அதிக முறை வென்றது யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தினேஷ் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆசிய கோப்பை போட்டிகள், 1984 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஒருமுறை கூட இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பைனலில் நேரடியாக மோதியதில்லை. இந்திய அணி எட்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியோ இரு முறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் மோதும் நடப்பு ஆசிய கோப்பை பைனல், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆசிய கோப்பை தவிர்த்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பல்வேறு தொடர்களின் பைனலில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான 3 கிளாசிக் பைனல் ஆட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1985 பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் கோப்பை

பட மூலாதாரம், Getty Images
1983 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வலுவான அணியாக உருவெடுத்தது.
1985-ல் நடைபெற்ற பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியே சந்திக்காமல், சுனில் காவஸ்கர் தலைமையிலான இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா, பைனலில் மீண்டும் ஜாவித் மியான்டட் தலைமையிலான அணியை எதிர்கொண்டது. இந்தியா–பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டத்தை காண்பதற்காக 35,296 ரசிகர்கள் கூடினர்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மியான்டட், இந்திய அணியை பந்துவீச பணித்தார். அபாரமாக ஓபனிங் ஸ்பெல் வீசிய நட்சத்திர வீரர் கபில்தேவ், மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் டாப் ஆர்டரை தகர்த்தார்.
மிடில் ஓவர்களில் கறாரான லெங்த்தில் பந்துவீசிய தமிழத்தை சேர்ந்த லெக் ஸ்பின்னர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன், 35 ரன்கள் மட்டுமே கொடுத்து மியான்டட் உள்பட மூன்று விக்கெட்டுகளை பறித்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 176 ரன்கள் மட்டும் எடுத்தது.
ஶ்ரீகாந்த்– ரவி சாஸ்திரி ஜோடி, இந்திய அணிக்கு பிரமாதமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இம்ரான் கானின் ஓபனிங் ஓவர்கள் எச்சரிக்கையுடன் விளையாடிய ஶ்ரீகாந்த், பின்னர் தனது வழக்கமான அதிரடியை காட்டினார்.
தொடக்கத்தில் இருந்தே ஆமை வேகத்தில் ரன் சேர்த்த ரவி சாஸ்திரி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் (63*) அடித்தார். 77 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 67 ரன்கள் குவித்த ஶ்ரீகாந்த், இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். தொடர் நாயகன் விருதை கைப்பற்றிய ரவி சாஸ்திரி காரை பரிசாக பெற்றார்.
ஆஸ்ட்ரல் – ஆசிய கோப்பை பைனல்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிளாசிக் ஒருநாள் ஆட்டங்களில் ஒன்றாக இது மதிப்பிடப்படுகிறது. 40 ஆண்டுகளை கடந்த பிறகும் இன்றும் ரசிகர்களின் மனங்கவர்ந்த ஆட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், பந்துவீச்சை தேர்வுசெய்தார்.
ஶ்ரீகாந்த்–காவஸ்கர் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 117 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஶ்ரீகாந்த், 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்தார். ஶ்ரீகாந்த் ஆட்டமிழந்த பிறகு வெங்சர்க்காருடன் இணைந்து காவஸ்கர் ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்.
அன்றைய இளம் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், அடுத்தடுத்து வெங்சர்க்கார்(50), கீர்த்தி ஆசாத்(0) விக்கெட்டுகளை கைப்பற்ற, இந்தியாவின் மிடில் ஆர்டர் ஆட்டங்கண்டது.
இம்ரான் கான் பந்தில் க்ளீன் போல்டாகிய காவஸ்கர்(92) சதத்தை தவறிவிட்டார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில், அதிகபட்சமாக வாசிம் அக்ரம் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மதன் லால், சேத்தன் சர்மாவின் கட்டுக்கோப்பான மித வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், பாகிஸ்தான் டாப் ஆர்டர் தடுமாறியது.
முடாசர் நாசர்(5), ரமிஸ் ராஜா(10) விரைவில் வெளியேற, இதுபோன்ற நெருக்கடியான சமயங்களில் தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிக்கொணரும் மியான்டட் போராட்டத்தை தொடங்கினார். தொடக்க வீரர் மொஷின் கான், அப்துல் காதிருடன் பார்ட்னர்ஷிப்களை அமைத்த அவர், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை உயிர்ப்புடன் நகர்த்தி சென்றார்.
கடைசி பந்தில் பாகிஸ்தான் திரில் வெற்றி

பட மூலாதாரம், Getty Images
கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்துவீசும் பொறுப்பை சேத்தன் சர்மாவிடம் வழங்கினார் கபில்தேவ். முதல் பந்தில் வாசிம் அக்ரம் ரன் அவுட்டான நிலையில், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் மியான்டட். பவுண்டரிக்கு செல்ல வேண்டிய மூன்றாவது பந்தை, விக்கெட் கீப்பர் ரோஜர் பின்னி திறமையாக தடுக்க, ஒரு ரன் மட்டும் கிடைத்தது.
அடுத்த பந்தில் ஜுல்கர்னைன் (0) க்ளீன் பவுல்டாக, கடைசி விக்கெட்டாக தௌசீஃப் அஹமது களமிறங்கினார். ஐந்தாவது பந்தில் எளிதாக கிடைத்த ரன் அவுட் வாய்ப்பை முகமது அசாருதீன் தவறவிட, கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 4 தேவைப்பட்டது.
இந்தியாவின் வெற்றிக்கு 1 விக்கெட் தேவைப்பட்ட நிலையில், சேத்தன் வீசிய யார்க்கர் ஃபுல் டாஸாக மாற, கடைசி பந்தில் சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு திரில் வெற்றியை மியான்டட் பரிசளித்தார்.
ஆட்ட நாயகன் விருதை மியான்டட்டும் தொடர் நாயகன் விருதை காவஸ்கரும் பெற்றனர்.
2017 சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images
சமீப காலத்திய இந்தியா–பாகிஸ்தான் மோதலில், இரு நாட்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டமாக இதை குறிப்பிடலாம்.
ஐசிசி தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி, வலிமையான இந்தியாவை பைனலில் 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அனைத்து வடிவிலான போட்டிக்கும் கேப்டனான பிறகு கோலி எதிர்கொண்ட முதல் ஐசிசி தொடர் இது என்பதால் கவனம் பெற்றது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற பைனலில் டாஸ் வென்ற கோலி, பாகிஸ்தானை பேட் செய்யும்படி கேட்டுக்கொண்டார். அன்று, இளம் அதிரடி பேட்டராக கருதப்பட்ட ஃபகார் ஜமானுக்கு அன்றைய நாள் சிறப்பாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். 1 ரன்னில் ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பியவர், 3 ரன்னில் பும்ராவின் நோ பாலில் கேட்ச் ஆனதால் மீண்டும் தப்பித்தார்.
மற்றொரு தொடக்க பேட்டர் அசார் அலி, பாரம்பரிய பாணியில் பேட்டிங்கை முன்னெடுக்க, எதற்கும் அஞ்சாத ஜமான் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை (அஸ்வின், ஜடேஜா) மிரட்டினார். ஜமான் ஆட்டமிழந்த பின் பாபர் ஆஸம்(46), முகமது ஹபீஸ்(57) கைகொடுக்க பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்களை குவித்தது.
இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், பாண்ட்யா மட்டும் கட்டுப்பாட்டுடன் வீசினர். இந்திய அணி 13 வைடுகளையும் 3 நோ பால்களையும் வீசியது.

பட மூலாதாரம், Getty Images
மிகப்பெரிய இலக்கை விரட்ட தொடங்கிய இந்தியாவுக்கு முகமது ஆமிரின் இடக்கை வேகப்பந்து வீச்சு சோதனையை கொடுத்தது.
'ஹிட்மேன்' ரோஹித்தை 3 பந்துகளில் எல்பிடபிள்யூ செய்த அவர், கோலி, தவான் ஆகியோரையும் பெவிலியன் அனுப்பினார். 5 ரன்னில் கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் அசார் அலி தவறவிட, அதைப் பயன்படுத்திக்கொள்ளாமல் அடுத்த இரண்டாவது பந்திலேயே பாயிண்ட் திசையில் ஷதாப் கானிடம் கேட்ச் கொடுத்து கோலி நடையைக்கட்டினார்.
அனுபவ வீரர்கள் யுவராஜ் சிங், தோனி 4 பந்துகள் இடைவெளியில் விக்கெட்டை இழக்க, ஆல்ரவுண்டர் பாண்ட்யா தன்னால் இயன்றவரை போராடினார். 76(43) ரன்கள் குவித்த அவர் ரன் அவுட்டாக இந்திய அணி 117 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா கடைசி 4 விக்கெட்டுகளை 25 பந்துகளில் 5 ரன்களுக்குள் இழந்தது.
1992 உலகக்கோப்பை, 2009 டி20 உலகக்கோப்பைக்கு பிறகு ஐசிசி கோப்பையை பாகிஸ்தான் வென்றது. முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ஜமானும் தொடர் நாயகனாக ஹசன் அலியும் தேர்வானார்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












