ஆன்லைன் வேலை, தினசரி ஆயிரம் சம்பளம் என்று ஆசை காட்டி பல கோடி ரூபாய் மோசடி நடந்தது எப்படி?

சைபர் குற்றம், பண மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் மற்றொரு பெண்ணும் இதே முறையில் ஏமாற்றப்பட்டுள்ளார். இருவரும் போலீசை அணுகியிருக்கிறார்.
    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசி தெலுகுக்காக

ஆன்லைனில் வேலை, வீட்டிலிருந்த படியே தினசரி பல ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்கிற வாசகங்கள் நடுத்தர மக்களை எப்போதுமே கவரக்கூடியது. குடும்பத் தேவைகளுக்காக கூடுதல் பணம் சம்பாதிக்கும் ஆசையில் பலரும் இதுபோன்ற பகுதி நேர வேலை வாய்ப்புகளை நாடுகின்றனர்.

குடும்பத் தலைவிகள் பலரும் கூட வீட்டிலிருந்தபடியே பணம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற விளம்பரங்களை நம்பிவிடுகின்றனர். அதுபோன்று, உணவகங்களுக்கு மதிப்புரை எழுதினால் பணம் தருவதாகக் கூறி ஒரு கும்பல் கோடிக்கணக்கில் மோசடி செய்திருக்கும் சம்பவம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்திருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இதுவரை இந்த மோசடியில் சுமார் நூறு பேர் பல கோடி ரூபாயை இழந்திருப்பதாக விசாகப்பட்டினம் போலீசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் அடங்குவர்.

சைபர் குற்றம், பண மோசடி

பட மூலாதாரம், Getty Images

மோசடி தொடங்கியது எப்படி?

மோகிதா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புத்தகங்கள் படிப்பதும், அவற்றுக்கு மதிப்புரை எழுதுவதும் அவருக்குப் பழக்கம். இதை அவரது சமூக ஊடக கணக்குகளில் பகிர்வார். இதைக் கவனித்த சைபர் கிரைம் குற்றவாளிகள், பகுதி நேர வேலை தருவாதாகக் கூறி அவருக்கு ஒரு சுட்டியை அனுப்பியுள்ளனர்.

"நான் அதைக் கிளிக் செய்தபோது, அது என்னை ஒரு வாட்ஸ்அப் குழுவிற்கு அழைத்துச் சென்றது. அந்தக் குழுவில் ஒரு பெண் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, ஹோட்டல் மதிப்புரை எழுதினால் ஒரு ரிவியூவுக்கு ரூ.150 தருவதாகச் சொன்னார். ஏற்கனவே மதிப்புரை எழுதிப் பழகியிருந்ததால் நானும் அதனை ஏற்றுக் கொண்டேன். ஒரு நாளைக்கு 25 விமர்சனங்கள் எழுத வேண்டும் என்றார். அதற்கும் சம்மதித்தேன்," என்று மோஹிதா பிபிசியிடம் கூறினார்.

இந்த சைபர் கிரிமினல்களின் வலையில் தான் எப்படிச் சிக்கினார் என்பதை அவர் பிபிசியிடம் விளக்கினார்.

“அவர்கள் சொன்ன ஹோட்டல்களுக்கு மதிப்புரை எழுதியதற்கு முதல் நாளே சுமார் ரூ.800 கிடைத்தது. நான் அதனை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டேன். பிறகு அடுத்த நாள் இன்னும் கொஞ்சம் பணம் வந்தது. ஆறு நாட்கள் வரை ரிவ்யூக்களுக்குப் பணம் கொடுத்தார்கள். அதன்பிறகு, அவர்கள் என்னிடம் ‘நீங்கள் ரூ.1000 செலுத்தினால், நாங்கள் உங்களை வேறு குழுவிற்கு அழைத்துச் சென்று, உங்களை அதிக ரிவ்யூக்களை எழுத வைப்போம். நீங்கள் அதிக பணம் சம்பாதிக்கலாம்,’ என்று கூறினர். அந்தத் தொகையைச் செலுத்தினால் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனக்கும் அதிக பணம் கிடைத்தது,'' என்றார் மோகிதா.

சைபர் கிரைம்

பட மூலாதாரம், Getty Images

‘சிறப்புக் குழுவில் சேர பணம் செலுத்த வேண்டும்’

இவ்வாறு விமர்சனங்களை எழுதிப் பணம் சம்பாதிக்கும் போது, அந்தத் தொகையை எடுத்துக்கொள்ள திரையில் ஒரு பட்டன் தோன்றும். நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம், நம் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையும் இது காட்டும்.

மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் மோகிதாவை அழைத்தார்.

அவர், ‘நீங்கள் எழுதும் விமர்சனங்களைப் பார்த்தோம். மிக நன்றாக எழுதுகிறீர்கள். இவ்வளவு சிறப்பாக எழுதுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களை VIP குழுவில் சேர்க்கிறோம். உங்களிடமிருந்து நல்ல மதிப்புரைகளைப் பெறுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அங்கும் அதிக பணம் கிடைக்கும். அது பத்து பேர் மட்டுமே கொண்ட ‘ப்ரீபெய்டு’ குழு. பணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே அங்கு பணி வழங்கப்படும்,’ என்றார். இந்தக் குழுவில் இருந்து யார் விலகினாலும் பணம் கிடைக்காது என்று அந்த பெண் தன்னிடம் கூறியதாக மோகிதா தெரிவித்தார்.

“நான் அந்தக் குழுவில் சேர ரூ. 50,000 கொடுத்தேன். நான் கொடுத்த பணமும், அவர்கள் கொடுத்த பணமும் சேர்ந்து எனது கணக்கில் ரூ. 60,000 இருப்பதாகக் காட்டியது. அதைத் திரும்பப் பெற, திரையின் மேற்புறத்தில் உள்ள பட்டனை அழுத்திய போது அது வேலை செய்யவில்லை,” என்றார் மோகிதா.

சைபர் குற்றம், பண மோசடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'அந்தக் குழுவில் சேர ரூ. 50,000 கொடுத்தேன். நான் கொடுத்த பணமும், அவர்கள் கொடுத்த பணமும் சேர்ந்து எனது கணக்கில் ரூ. 60,000 இருப்பதாகக் காட்டியது,' என்கிறார் பாதிக்கப்பட்டப் பெண்

‘பணத்தை எடுக்க மீண்டும் பணம் செலுத்த வேண்டும்’

இந்த மோசடியில், பணத்தை திரும்பப் பெறுவதற்கான பட்டன் ‘welfare button’ என்று அழைக்கப்படுகிறது.

மோகிதா கூறுகையில், “எத்தனை முறை அதை அழுத்தியும் பலனில்லை. இதுபற்றி குரூப் மேனேஜரிடம் கூறியபோது, அந்த பட்டன் வேலை செய்ய இன்னும் சில பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றார். அதை முடித்த பிறகும் என்னால் பணத்தை எடுக்க முடியவில்லை. ‘எனது கணக்கில் பணம் சேருவதை இது காட்டுகிறது. ஆனால் பணத்தை ஏன் எடுக்க முடியவில்லை?’ என்று கேட்டபோது, ‘ஏதோ பிரச்னை இருக்கிறது போல் தெரிகிறது, இன்னும் கொஞ்சம் பணம் செலுத்தினால் மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம் என்றனர். நான் சந்தேகமடைந்து பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டேன். நான் இந்த பணிகளில் இருந்து வெளியேறுகிறேன் என்று அவர்களிடம் கூறினேன்,” என்கிறார் மோஹிதா.

எனினும், இந்தக் குழுவில் இருந்து வெளியேற குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக மோகிதா கூறுகிறார்.

“அந்தக் குழுவின் உறுப்பினர்கள் என்னை அழைக்கத் தொடங்கினர். ‘நீங்கள் வெளியேறினால் எங்களுக்குப் பணம் கிடைக்காது. இந்தக் குழுவில் இதுவரை லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளோம். உங்களால் எங்களுக்கு அந்த பணம் கிடைக்காமல் போய்விடும். நீங்கள் வாபஸ் வாங்கினால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்,’ என்றெல்லாம் மிரட்டுவது போல் கூறினர். நான் இந்தக் குழுவிடம் ரூ. 8.5 லட்சத்தை இழந்திருக்கிறேன். நான் முற்றிலும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவல்துறையை அணுகினேன்,” என்கிறார் மோகிதா.

ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் மற்றொரு பெண்ணும் இதே முறையில் ஏமாற்றப்பட்டுள்ளார். இருவரும் போலீசை அணுகியிருக்கிறார்.

சைபர் குற்றம், பண மோசடி

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, டெலிகிராமில் உள்ள ஒரு சைபர் மோசடிக் குழு

‘பல கோடி மோசடி நடந்திருக்கிறது’

இதுவரை, ஹோட்டல் ரிவ்யூ என்ற பெயரில் மக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இருவரை விசாகப்பட்டினம் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் மீது இரண்டு பெண்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

ஹோட்டல் மதிப்புரைகள் மற்றும் டாஸ்க் கேம்கள் என்ற பெயரில் சைபர் மோசடிகள் தொடர்பாக விசாகப்பட்டினத்தில் 2022ல் 66 வழக்குகளும், 2023ல் 72 வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்தக் குற்றங்களில் 2022ல் ரூ. 2 கோடியும், 2023ல் ரூ. 9 கோடியும் மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

மதிப்புரை எழுதினால் ரூ. 150 தருகிறோம் என்று ஆரம்பித்து, பிறகு டெலிகிராம் குழுவிற்கு அழைத்துச் சென்று, பெரிய பணிகள் என்ற பெயரில் வலையில் சிக்கவைக்கப்படுகிறார்கள். ரூ. 2,000-த்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக வரை இவர்கள் வசூலிப்பதாக விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் திரிவிக்ரம வர்மா தெரிவிக்கிறார்.

மோசடி மூலம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெறப்படும் பணம் பிட்காயின்களாக மாற்றப்படுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தக் குற்றத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரித்தபோது அவர்கள் மலேசியாவில் இருந்து இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது என்று திரிவிக்ரம வர்மா கூறினார்.

சைபர் குற்றம், பண மோசடி

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, ஹோட்டல் விமர்சனங்கள் மற்றும் டாஸ்க் கேம்கள் என்ற பெயரில் சைபர் மோசடிகள் தொடர்பாக விசாகப்பட்டினத்தில் 2022ல் 66 வழக்குகளும், 2023ல் 72 வழக்குகளும் பதிவாகியுள்ளன

‘தினமும் ரூ.20,000 கட்டச் சொன்னார்கள்’

ஹோட்டல் மதிப்புரை என்ற பெயரில் நடக்கும் இந்த சைபர் குற்றங்கள் பற்றிப் பேச விசாகபட்டினம் சைபர் கிரைம் காவல் ஆய்வாளார் பவானி பிரசாத்தின் அலுவலகத்திற்கு பிபிசி குழு சென்றது. அப்போது அவர் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். பிபிசியும் அவருடன் பேசியது.

“என் பெயர் பாலாஜி. நான் ஒரு ஹார்ட்வேர் எஞ்சினியர். பகுதி நேர வேலை வேண்டுமானால் கிளிக் செய்யும்படி எனது தொலைபேசியில் நிறைய இணைப்புகள் வருகின்றன. ஒரு நாள் நான் ஒரு இணைப்பைக் கிளிக் செய்தேன். இது என்னை ஒரு குழுவிற்குக் கொண்டு சென்றத். அதில், ‘ஹோட்டல்களை மதிப்பிடுவதற்கான இணைப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் அவர்களுக்கு மதிப்பீடுகளை வழங்கினால் புள்ளிகளைப் பெறுவீர்கள். அந்த புள்ளிகள் பணமாக மாற்றப்படும்’ என்று கூறியிருந்தது. அதன் பிறகு ஒரு செயலி கொடுக்கப்பட்டது. அந்தச் செயலியில் ரேட்டிங் கொடுத்ததற்கு எனக்கு ரூ. 800 வந்தது. மேலும் பணம் வேண்டுமென்றால் ரூ.10,000 டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறினர். ரூ.10,000 டெபாசிட் செய்தால் ரூ.15,000 சேர்த்து ரூ.5,000 தந்தார்கள்” என்று பாலாஜி பிபிசியிடம் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “அதன் பிறகு ஒரு நாளைக்கு ரூ.20,000 கொடுத்தால், அதறகான டாஸ்க்குகள் கொடுத்து ரூ.30,000 வழங்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிற்கும் என்னை அழைத்துச் சென்று மொத்தம் ரூ.5 லட்சம் வசூலித்தார்கள். முன்பு எனது கணக்கில் கிடைத்த பணத்தை எடுக்க வாய்ப்பு இருந்தது. அதன் பிறகு அது நிறுத்தப்பட்டது. சந்தேகம் ஏற்பட்டதால், பணத்தை செலுத்துவதை நிறுத்திவிட்டு, சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய வந்தேன்,'' என்றார் பாலாஜி.

சைபர் குற்றம், பண மோசடி

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, 'ஒவ்வொரு குழுவிற்கும் அழைத்துச் சென்று மொத்தம் ரூ.5 லட்சம் வசூலித்தார்கள்,' என்கிறார் பாதிக்கப்பட்ட ஒருவர்.

ஜி.எஸ்.டி பெயரிலும் மோசடி

இந்தச் சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி, இனி இந்தப் பணிகளை செய்ய முடியாது என்று கூறி குழுவிலிருந்து வெளியேற நினைப்பவர்கள், ஜி.எஸ்.டி என்ற பெயரில் ஏமாற்றப்படுவதாக காவல் ஆய்வாளர் பவானி பிரசாத் தெரிவித்தார்.

“உங்களால் பணம் எடுக்க முடியாமல் போனதற்குக் காரணம், நீங்கள் ஒரு பணியில் தவறான பட்டனை அழுத்தியதால் தான். அதனால்தான் பணத்தை எடுக்க முடியவில்லை. அதை சரி செய்வோம். நீங்கள் உங்கள் பணத்தை திரும்பப் பெறலாம். ஆனால் 30% ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்கிறார்கள். இதையும் உண்மை என நம்பி ரூ.93 லட்சம் ஏமாந்த ஒருவர் ஜி.எஸ்.டி செலுத்தத் தயாராக இருந்திருக்கிறார். ஆனால் சில காரணங்களால் சந்தேகமடைந்து எங்களிடம் வந்தார்,”என்று அவர் மேலும் கூறினார்.

சைபர் குற்றம், பண மோசடி

பட மூலாதாரம், HYDERABAD CITY POLICE

படக்குறிப்பு, இந்தச் சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி, இனி இந்தப் பணிகளை செய்ய முடியாது என்று கூறி குழுவிலிருந்து வெளியேற நினைப்பவர்கள், ஜி.எஸ்.டி என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள்

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

இந்த மோசடிகளில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என காவல் ஆய்வாளர் பவானி பிரசாத் விளக்கினார்:

  • தொலைபேசியில் வரும் அனைத்து இணைப்பையும் திறக்கக் கூடாது.
  • யாராவது கேம்ஸ், டாஸ்க் என்ற பெயரில் பணம் கொடுப்பதாகக் கூறினால், அது மோசடிதான்.
  • நீங்கள் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு மாற்றப்பட்டால், அது ஒரு பொறி என்பதை உணர வேண்டும்.
  • ரீசார்ஜ், அப்கிரேட் என்ற பெயரில் உங்களைக் குழுக்களில் சேர்த்து, அதற்குப் பணம் கட்டச் சொன்னால் அது மோசடி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
  • முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து குழுவில் சேரும் இணைப்புகள் வந்தால் அதைத் திறக்க வேண்டாம்.
  • ஏதேனும் ஒரு நிறுவனத்தின் பெயரில் உங்களுக்கு வேலை வாய்ப்புச் செய்தி வந்தால், அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தகவலைச் சரிபாருங்கள்.

விசாகப்பட்டினத்தில் தினசரி சுமார் 30 சைபர் கிரைம் வழக்குகள் வந்தால், அவற்றில் 6 முதல் 8 வழக்குகள் ஹோட்டல் மதிப்புரை என்ற பெயரில் நடந்த மோசடி வழக்குகள் என்று பவானி பிரசாத் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: