ரூ.94 லட்சம் மோசடி: மக்களை ஆவணங்களில் சாகடித்து பணம் சுருட்டியது எப்படி?

அரசு ஆணவங்களின் படி இறந்தவர்களின் ஒருவர்

பட மூலாதாரம், SHURAIH NIAZI

படக்குறிப்பு, அரசு ஆவணங்களில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட உயிருள்ளவர்களில் இவரும் ஒருவர்.
    • எழுதியவர், • ஷுரைஹ் நியாஸி
    • பதவி, • பி பி சி ஹிந்திக்காக, போபாலிலிருந்து

மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள கோர்கார் கிராமத்தில் வசிக்கும் அசோக் ஜாடவ், தனது வீட்டில் அனைத்து வகையான வேலைகளையும் செய்து வருவதைக் காணலாம், ஆனால் ஆவணங்களின் படி அவர் இறந்துவிட்டார்.

அரசு ஆவணங்களில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட உயிருள்ளவர்களில் இவரும் ஒருவர்.

ஷிவ்புரி மாவட்டத்தில் தலைமைச் செயல் அதிகாரி உம்ராவ் சிங் மராவி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், ஆவணப்படி இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு மற்றும் கருணைத் தொகை என்ற பெயரில் சுமார் 94 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் சவுத்ரியின் கூற்றுப்படி, இந்த வழக்கில் இரண்டு தலைமை நிர்வாக அதிகாரிகள், இரண்டு எழுத்தர்கள் மற்றும் ஒரு ஆபரேட்டர் ஈடுபட்டுள்ளனர்.

பணம் அனுப்பப்பட்ட பெரும்பாலான கணக்குகள் ஷிவ்புரி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி, 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடந்துள்ளது.

46 வயதான அசோக், கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 தொகை வராமல் நின்றபோது தான் ஆவணங்களின் படி தான் இறந்து விட்டது அவருக்கு தெரியவந்துள்ளது.

"உயிருடன் இருப்பதை நிரூபிப்பதே சவாலாக உள்ளது"

அரசு ஆணவங்களின் படி இறந்தவர்களின் ஒருவர்

பட மூலாதாரம், SHURAIH NIAZI

படக்குறிப்பு, சொற்பமான நிலத்தின் உரிமையாளரான அசோக், கூலித் தொழிலாளியாக இருக்கிறார்.

55 வயதான ரமேஷ் ராவத்துக்கும் இதே சம்பவம் நடந்தது.

அவருக்கும் ஒன்றரை வருடங்களாகப் பிரதமரின் விவசாயி நிதி கிடைக்கவில்லை. விசாரித்த போது அவரும் இறந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

சொற்பமான நிலத்தின் உரிமையாளரான அசோக், கூலித் தொழிலாளியாக இருக்கிறார்.

இவருக்கு மனைவி தவிர, இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது, ஆனால் மகன்கள் அவருடன் வாழ்கின்றனர்.

அதனால்தான் பிரதமரின் கிசான் சம்மான் நிதியில் இருந்து பெறப்பட்ட இந்தத் தொகை அவருக்கு மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் தொகை அவரது கணக்கில் வராததால், அது குறித்த தகவல்களைப் பெற பல்வேறு மட்டங்களில் முயன்றார்.

அப்போது அவர் இறந்துவிட்டதாக ஆவணங்கள் பதிவாகியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஜூலை மாதம், கலெக்டரிடம் மனு செய்தார்.

இந்த விண்ணப்பத்தில், கிராமத்தின் வேலைவாய்ப்பு உதவியாளர் கொரோனா காலத்தில் தன்னை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளார். தற்போது தான் உயிருடன் இருப்பதால் அந்த இறப்புச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஜூலை 4 ஆம் தேதியிட்ட அந்தக் கடிதத்திற்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது தன்னை உயிருடன் நிரூபிப்பதுதான் அசோக்கின் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.

அசோக் பிபிசி ஹிந்தியிடம் பேசியபோது, “என்னைப் பற்றிய தகவல் கிடைத்ததும், பஞ்சாயத்து அதிகாரிகளும் என்னைச் சந்திக்க வந்தனர், ஆனால் அவர்கள் என்னிடம் ஆதாரம் கேட்டனர். நான் அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தேன். இதைத் தவிர வேறு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை,” என்றார்.

மேலும் அவர், “இப்போது நான் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், நான் உயிருடன் இருப்பதாக அறிவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நான் கோரினேன். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை” என்றார்.

‘இன்று என்னை யாராவது கொன்றால் தண்டனை கிடைக்குமா?’

அரசு ஆவணங்களின் படி இறந்தர்கள்

பட மூலாதாரம், SHURAIH NIAZI

படக்குறிப்பு, தாதாராம் ஜாடவின் நிலையும் இதை ஒத்ததேயாகும். அவரும் கூலித் தொழிலாளி தான்.

தாதாராம் ஜாடவ் பிரதம மந்திரி வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடன் வாங்க நினைத்தார், அதைப் பற்றி அறிய பஞ்சாயத்து அலுவலகம் சென்றார். அப்போது, தான் இறந்து விட்டது அவருக்கே தெரியவந்துள்ளது.

தாதாராமுக்கு இரண்டு குழந்தைகள். இந்தக் கடன் தனது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பியிருந்த அவர், தற்போது உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் சவாலை எதிர்கொண்டுள்ளார். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

அவர் பிபிசி ஹிந்தியிடம், “நான் கலெக்டரின் மக்கள் குறைதீர் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு நான் எனது கருத்துகளை வெளிப்படுத்தினேன், என்னை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு கோரினேன், ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.” என்றார்.

"நான் ஆவணத்தின் படி இறந்துவிட்டவன். இன்று யாராவது என்னைக் கொன்றால் என்ன செய்வது? அவருக்கு தண்டனை கிடைக்குமா? இறந்தவர்களைக் கூட யாராவது கொல்ல முடியுமா?" என்ற கேள்வியை எழுப்புகிறார்.

"இப்போது நான் உயிர்ப்பிக்கப்பட வேண்டும்"

அரசு ஆவணங்களின்படி இறந்தவர்கள்

பட மூலாதாரம், SHURAIH NIAZI

படக்குறிப்பு, ஹேமந்த் ராவத்தும், தத்தாராம் ஜடாவும் இறந்து விட்டதாகச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

25 வயதான ஹேமந்த் ராவத்தும் இறந்து விட்டதாகச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

இதுபற்றி அவர் எப்போது அறிந்தார் என்று அவரிடம் கேட்டபோது, “இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது தந்தைக்கு பஞ்சாயத்து ஊழியர் ஒருவரிடமிருந்து போன் வந்தது. உங்கள் மகனும் மருமகளும் இறந்துவிட்டார்கள் என்று என் தந்தையிடம் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த என் தந்தை, ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டார்.” என்றார்.

அதன் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன, ஆனால் அவர்கள் இருவருக்கும் பிரசவத்திற்காக வந்த பணம் அவர்களின் கணக்கில் வராதபோது தான், அவர்கள் இறந்துவிட்டதாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்தனர்.

அவர் பிபிசி ஹிந்தியிடம், “இப்போது நான் எந்த அரசாங்க திட்டத்தின் பலனையும் பெறவில்லை. பணமெல்லாம் முடங்கியுள்ளது. நடந்த சேதம் மேலும் நிகழாமல் இருக்க இப்போது நான் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்குத் தான் காத்திருக்கிறேன்” என்றார்.

இதேபோல், இதே கிராமத்தைச் சேர்ந்த ஆஷாராம் மற்றும் ரமேஷ் ராவத் ஆகியோரும் ஆவணப்படி இறந்தவர்கள். தங்களது பிரச்சனைகள் குறையும் வகையில் தங்களை விரைவில் உயிருடன் இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்பதே தங்களது முயற்சி என்று இருவரும் தெரிவித்தனர்.

அரசு ஆவணங்களின்படி இறந்தவர்கள் உள்ள கிராம்

பட மூலாதாரம், SHURAIH NIAZI

படக்குறிப்பு, ஷிவ்புரி முழுவதிலும் இதுவரை 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் ?

கோர்காரில் மட்டும் இப்படி ஏழு பேர் இருக்கிறார்கள். ஷிவ்புரி முழுவதிலும் இதுவரை 26 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கோர்கார் தவிர, கப்ரானா, சூட், ஈட்மா மற்றும் கஜூரி போன்ற கிராமங்களில் வசிக்கும் இவர்களும் இறந்ததாக அரசு ஆவணங்களில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச அரசின் 'சம்பல்' மற்றும் 'மத்தியப் பிரதேச கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்' என்ற இரண்டு திட்டங்களின் கீழும் தான் இந்தக் குழுப்பம் ஏற்பட்டுள்ளது.

இவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் இறப்புக்கு, இறுதிச் சடங்கு உதவியாக, ஆறாயிரம் ரூபாயும், சாதாரண மரணம் ஏற்பட்டால், இரண்டு லட்ச ரூபாயும், விபத்தில் இறந்தால், நான்கு லட்ச ரூபாயும், கருணைத் தொகையாக வழங்கப்படுகிறது.

கோர்கார் ஊராட்சித் தலைவர் மல்கான் ஜாடவ் பிபிசி ஹிந்தியிடம், “இப்போது வெளிவரும் வரும் வழக்குகள் எனது பதவிக் காலத்திற்கு முந்தையவை. கடந்த ஆண்டுதான் நான் தலைவர் ஆனேன். எனது பகுதியைச் சேர்ந்த இந்த மக்கள் வருத்தமடைந்துள்ளனர், அவர்களை உயிருடன் இருப்பதாக அறிவிக்கும்படி என்னிடம் கேட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் மீது, மாவட்டம் மற்றும் ஊராட்சியில் புகார் அளித்தும், இதுவரை எதுவும் நடக்கவில்லை,'' என்றார்.

மல்கான் கூறும்போது, “அவர்களின் பிரச்னையை நிர்வாகம் விரைவில் தீர்க்க வேண்டும். இவர்களால் அரசின் எந்த ஒரு திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை.” என்றார்.

மாவட்ட நிர்வாகம் என்ன சொல்கிறது ?

மாவட்ட ஆட்சியர்

பட மூலாதாரம், SHURAIH NIAZI

படக்குறிப்பு, மாவட்ட மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் சவுத்ரியின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு தலைமை நிர்வாக அதிகாரிகள், இரண்டு எழுத்தர்கள் மற்றும் ஒரு ஆபரேட்டர் உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரவீந்திர குமார் சவுத்ரி கூறுகையில், ‘‘இதில் உயிருடன் இருப்பவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவர்களின் பெயரில் பணம் எடுக்கப்பட்டது. முன்னதாக இந்த விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தியபோது பல வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதன் பிறகு சிலர் கைது செய்யப்பட்டனர்.” என்றார்.

மாவட்ட மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் சவுத்ரியின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு தலைமை நிர்வாக அதிகாரிகள், இரண்டு எழுத்தர்கள் மற்றும் ஒரு ஆபரேட்டர் உள்ளனர்.

எனினும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

ஆட்சியர் கூறுகையில், ''இவர்கள், போலி இறப்புச் சான்றிதழ் தயாரித்து, போர்ட்டலில் பதிவேற்றம் செய்தனர். அவர்களிடம் அதிகாரப்பூர்வ ஐடி கிடைத்தது, அதன் மூலம் அவர்களின் நெருங்கியவர்களின் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்பட்டது.

அரசு திட்டப் பலன்கள் பெறாதவர்களுக்கு முன்பு போலவே வழங்கவும், இதுவரை ஏற்பட்ட இழப்பை குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்தில் இருந்து ஈடுகட்டவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

அப்போது மாவட்ட பஞ்சாயத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த ஷைலேந்திர பர்மாரின் வாழ்க்கை முறையை கவனித்தபோது, அவர் விலை உயர்ந்த கார்களில் பயணம் செய்வதும், மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்ததாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பங்குச்சந்தை மூலம் சம்பாதிப்பது தெரியவந்த நிலையில், விவரங்கள் வெளியானதில், உயிருடன் இருப்பவர்களை இறந்துவிட்டதாகக் காட்டிச் சம்பாதித்தது தெரியவந்தது. இப்போது அவர்கள் போலீஸ் காவலில் உள்ளனர்.

உள்ளூர் பத்திரிகையாளர் ரஞ்சித் குப்தா கூறும்போது, “யாருடைய பெயரில் பணம் எடுக்கப்பட்டதோ அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், அவ்வளவு கல்வியறிவு இல்லாதவர்கள். இங்குள்ள சிலருக்குத் தெரிய வந்தது, அதனால் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது, இல்லையெனில் யாருக்கும் தெரிந்திருக்காது," என்றார்.

இந்த வழக்கில் சிலரை போலீசார் கைது செய்து இன்னும் இது போல் எத்தனை வழக்குகள் உள்ளன என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களின் போராட்டம் இன்னும் தொடர்கிறது. அவர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: