கொரோனா வைரஸ்: இலங்கையர் ஒருவர் பாதிப்பு - இதுதான் நிலவரம்

பட மூலாதாரம், Getty Images
கோவிட் - 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இத்தாலியின் பிரேஸியா பகுதியிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய வந்த நிலையிலேயே குறித்த இலங்கை பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த இலங்கை பெண் கடமையாற்றிய வீட்டின் உரிமையாளருக்கு முதலில் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாக கூறிய அவர், அதனைத் தொடர்ந்தே, இலங்கை பணிப் பெண்ணுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையின் ஹொரணை பகுதியைச் சேர்ந்த 46 வயதான பெண்ணொருவரே இந்த வைரஸ் தொற்றுக்கு இல்லாகியுள்ளார்.
குறித்த பெண் தற்போது இத்தாலியின் பிரேஸியா நகரிலுள்ள சிவிலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த பெண் சிகிச்சை பெற்று வரும் வைத்தியசாலையினால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும தெரிவித்தார்.
இதேவேளை, இத்தாலியிலுள்ள ஏனைய இலங்கையர்களுக்கு இந்த வைரஸ் தொற்றினால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தாம் இத்தாலியிலுள்ள இலங்கையர்கள் குறித்து தொடர்ந்தும் அவதானித்து வருவதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும கூறினார்.
இத்தாலியில் சுமார் 104000த்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
இவர்கள் தொடர்பில் இத்தாலியிலுள்ள தமது தூதரக அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













