இலங்கை குண்டு வெடிப்பு: 'சஹ்ரான் ஹாஷிமின் மடிக்கணினி அமெரிக்கா வசம் இல்லை' - மறுக்கும் போலீஸ்

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொகமது சஹ்ரான் ஹாஷிமின் மடிக்கணினி, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ-இன் பொறுப்பில் உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மடிக்கணினி இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலேயே உள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அம்பாறை பகுதியிலிருந்து சஹ்ரான் பயன்படுத்திய மடிக்கணின் கண்டெடுக்கப்பட்டிருந்ததுடன், அந்த மடிக்கணினியிலிருந்து விசாரணைகளுக்கு தேவையான முக்கிய சாட்சியங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
போலீஸ் தலைமையகத்தில் நேற்று, வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 293 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவர்களில் 115 பேரிடம் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எஞ்சியுள்ள 178 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ருவன் குணசேகர கூறினார்.
கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள் மற்றும் பயங்கரவாத பயிற்சிகளை பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோர் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

பயங்கரவாத சம்பவங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் என சந்தேகிக்கப்படும் 41 பேருக்கு சொந்தமான சுமார் 100 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வங்கிக் கணக்குகளில் சுமார் 134 மில்லியன் இலங்கை ரூபாய்க்கும் அதிக தொகை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத குழுக்கள் வசம் காணப்பட்ட சுமார் 20 மில்லியன் ரூபாய் பணத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.
அதேபோன்று பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோருக்கு சொந்தமான 6 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சஹ்ரானின் மனைவி ரகசிய வாக்குமூலம்
சஹ்ரானின் மனைவியான அப்துல்லா காதர் ஃபாத்திமா, நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சுமார் இரண்டு மணி நேரம் ரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவலில் உள்ள இவரிடம் இதற்கு முன்னர் இரண்டு முறை ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












