வாழ்வோம், வாழ விடுவோம் - இலங்கை இனமோதல் குறித்து அஷ்வின் உருக்கம்!

பட மூலாதாரம், Getty Images
இலங்கையிலுள்ள கண்டி மாவட்டத்தில் இன மோதல்கள் வெடித்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான அஷ்வின் ரவிச்சந்திரன் சமூக ஊடகம் வாயிலாக இலங்கை வாழ் மக்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கை நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் தனக்கு வேதனை அளிப்பதாகவும், இப்படி ஒரு அழகான நாட்டில் வேறுபட்ட நம்பிக்கைகளுடன் வாழும் அன்பான மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை விரைவில் தீரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு ஒன்றாக வாழ்வோம் வாழ விடுவோம் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அஷ்வின், இலங்கையில் சகஜநிலை மீண்டும் திரும்புவதற்கு தான் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னர், இலங்கையில் இனமோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அந்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் மஹில ஜயவர்த்தன ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கண்டியை பார்வையிடப்போகும் ஐ.நா மூத்த அதிகாரி
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவு தலைவர் ஜெஃப்ரி ஃபெல்ட்மேன் இன்று மாலை 4 மணியளவில் இலங்கைக்கு வரவிருக்கிறார். இலங்கையில் இன மோதல் காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு இலங்கைக்கு வரும் முதல் உயர்மட்ட ராஜீய அதிகாரி ஃபெல்ட்மேன். இவர் இன மோதல் நிகழ்ந்த கண்டி மாவட்டத்தை பார்வையிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கண்டியில் தற்போது நிலைமை எப்படி உள்ளது?
பாதுகாப்பு படைகளின் தகவலின்படி, கடந்த 12 மணிநேரத்தில் மிகப்பெரிய வன்முறை நிகழ்வுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், கண்டியில் அமலிலிருந்த அவசர நிலை சுமார் 10 மணியளவில் விலக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அமல்படுத்தப்படும் என்றும் இலங்கையில் இருக்கும் பிபிசி செய்தியாளர் அஸாம் அமீன் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












