இலங்கை: அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை

இலங்கை கொடி

பட மூலாதாரம், Ishara S.KODIKARA/AFP/Getty Images

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக மற்றுமொரு நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி கையளித்துள்ளது.

மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையை அமைச்சர் பைசர் முஸ்தபா இல்லாது செய்துள்ளதாக நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழ்மட்டத்திலுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் உள்ளூராட்சி மன்றங்கள் உரிய வகையில் செயற்படுத்த அமைச்சர் பின்வாங்கியுள்ளதாகவும் அந்த பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் நாடு பாரிய ஜனநாயக பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னனி குறிப்பிட்டுள்ளது.

தேர்தலை தொடர்ந்தும் நடத்தாதுள்ளமையினால், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் தொடர்ந்து அந்த பதவியில் இருக்க தகுதியற்றவர் என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.

கடிதம்

இலங்கை நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி 6 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்ற நிலையில், 5 பேர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளனர்.

இதேவேளை, கூட்டு எதிரணியினால் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.

இதன்படி, அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு எதிராக இரு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :