காணி உரிமை போராட்டத்துக்கு கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆதரவு
இலங்கையின் வடக்கே தங்களின் காணி உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு மாகாணத்திலிருந்து முஸ்லிம்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

மூன்று வாரங்களுக்கும் மேலாக போராட்டததில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாசலில் நண்பகல் ஜும்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு அண்மித்த பகுதியில் இந்த ஆர்பாட்டம் இடம் பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் காணி உரிமையை வலியுறுத்தும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
காணி உரிமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணியை மீள கையளிப்பது தொடர்பாக அரசாங்கமும் ஜனாதிபதியும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு பகுதியில் விமானப்படை முகாம் அமைந்துள்ள தங்கள் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென கோரி காணி உரிமையாளர்கள் விமானப் படை முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
84 குடும்பங்களுக்கு சொந்தமான இக் காணிகள் கடந்த 31ஆம் தேதி விடுவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது ஏமாற்றமாகி விட்டதாக காணி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் உரிமை கோரும் காணி வன இலாகாவிற்குரியது என இலங்கை விமானப்படை கூறுகின்றது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












