டி 20 உலகக் கோப்பை இலங்கை Vs வங்கதேசம்: அசலங்கா, ராஜபக்ச அதிரடியால் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை

அசலங்கா

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் வீரர்கள் அசலங்கா மற்றும் பானுகா ராஜபக்ச ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.

அசலங்கா 50 பந்துகளில் 84 ரன்களும் ராஜபக்ஸ 31 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தனர்.

15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்து தடுமாறிய இலங்கை அணி அடுத்த 5 ஓவர்களில் அதிரடியாக ரன்களைக் குவித்தது.

முன்னதாக வங்கதேசம் இருபது ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 171 ரன்களைக் குவித்தது.

வங்கதேசத்தின் முஷ்ஃபிகுர் ரஹீம், தொடக்க வீரர் முகமது நயீம் ஆகியோர் அரைச் சதம் அடித்து கணிசமான ரன் குவிப்புக்கு உதவினார்கள். அதிரடியாக ஆடிய முஷ்ஃபிகுர் ரஹீம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஆறாவது ஓவரில் லஹிரு குமாரவின் பந்துவீச்சில் மிட் ஆஃப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது லஹிரு குமாரவுக்கும் லிட்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தள்ளிவிட்டதால் நடுவர் வந்து இருவரையும் விலக்கிவிட்டார்.

அடுத்து ஆட வந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் 10 ரன்களில் வெளியேற நயீமுடன் முஷ்பிகுர் ரஹீம் இணைசேர்ந்தார். இருவரும் இணைந்து இலங்கையின் பந்துவீச்சை நிதானமாகக் கையாண்டு படிப்படியாக ரன்களைக் குவித்தனர்.

ரஹீம்

பட மூலாதாரம், Getty Images

இந்த இணை 17 -ஆவது ஓவர் வரை களத்தில் இருந்தது அப்போது அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 129.

இதன் பிறகு முஷ்பிகுர் அதிரடியாக ஆடினார். கடைசி நான்கு ஓவர்களில் 43 ரன்களைக் குவித்த வங்கதேசம் இலங்கைக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :