சச்சினின் ஓய்வுக்குப்பின் இந்திய கிரிக்கெட்டின் நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
அதிரடி ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பழைய பிம்பத்தைக் கழற்றி, புத்தம் புதிதாக உருவெடுத்துள்ளது இந்திய அணி.
2013, நவம்பர் 16-ஆம் தேதி - உணர்வுகள் கிளறப்பட்ட நாள். மும்பையின் கம்பீரமான வான்கடே விளையாட்டு அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. ஒவ்வொருவரும் "சச்சின்… சச்சின்…" என கத்திக் கொண்டிருந்தனர்.
அவரின் 200-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அது. அவரது ஒப்பற்ற கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி இன்னிங்ஸ். சச்சினுக்கு பிரியாவிடை அளிக்கப் போகும் அந்தத் தருணங்களை உணர யாரும் விரும்பவில்லை.
24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நம்மை கவர்ந்த சச்சின், இந்தப் போட்டிக்காக கடைசி முறையாக மைதானத்தில் நடந்து செல்ல உள்ளார்.
சச்சின் பேட்டிங் செய்வதைப் பார்பது அதுவே கடைசி முறை. அது ஒரு மறக்க முடியாத நாள்.

பட மூலாதாரம், AFP
ஓய்வு பெற்ற சில நாட்களில் தனது சிறப்பான நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார் சச்சின். தனது எதிர்கால திட்டங்கள் பற்றியும் அவர் பேசினார்.
"இந்த 24 வருட கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு பல பொன்னான நினைவுகளை அளித்துள்ளது. கிரிக்கெட் உலகில் அதிக விரும்பப்பட்ட கோப்பையை எனது நாட்டுக்காக வெல்ல விரும்பினேன். அதாவது, உலகக் கோப்பை. என் கனவு நினைவேறியது. என் வாழ்க்கையின் புது இன்னிங்சை நான் தொடங்க உள்ளேன்" என்று கூறினார் சச்சின்
அளவில்லா அன்பினால் என்னை ஆசிர்வதித்த அனைவருக்கும் நான் என் பங்களிப்பை தர வேண்டிய நேரமிது என்றார் சச்சின்.
அவர் ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும், ஒவ்வொரு சர்வதேச போட்டிகளிலும் 'சச்சின் சச்சின்' என்ற மந்திரத்தை நாம் கேட்க முடியும்.
அது தான் இவ்வாறான எண்ணம் என் மனதில் தோன்ற காரணம் - இந்த நான்கு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்துள்ளதா?
சச்சின்.. ஓர் அழகான கனவு
இந்தக் கேள்விக்கான பதில் அவ்வளவு எளிமையானதல்ல. வாழும் தலைசிறந்த விளையாட்டு வீரரான சச்சின், அவரின் கிரிக்கெட் வாழ்க்கை, அதற்கு அவர் அளித்த பங்களிப்பு குறித்து பல கிரிக்கெட் வீரர்களிடம் பேச முயற்சித்த போது அவர்கள் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.
கிரிக்கெட் ஒரு மதம் என்றால், அதன் கடவுள் சச்சின் என்பது பலரின் கருத்து.
கடந்த 90களில், நம்பிக்கையின் விளிம்பாக திகழ்ந்தார் சச்சின்.
அவர், டி.வி தலைமுறையின் முதல் சூப்பர் ஸ்டார் ஆவார்.
இந்திய பொருளாதாரம் உலகமயமாக்குதலுக்கு திறந்த பிறகு, இந்திய சமுதாயம் படிப்படியாக மாறியது.
அதனையடுத்து, இளைஞர்களின் ஆசைகளும் விருப்பங்களும் தீவிரமாக மாற்றியமைக்கப்பட்டது. அவர்களின் எண்ணங்களும் விரிவடைந்தன. சச்சினின் பேட் மற்றும் அவர் விளையாடிய விதம் அந்தத் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்தது.

பட மூலாதாரம், Getty Images
இளைஞர்கள் கனவு காணுவதற்கான வாய்ப்பை உருவாக்கினார் சச்சின். கனவுகளை துணிந்து பின்தொடரக் கற்றுத்தந்தார்.
இந்தியர்கள், சச்சினை அவ்வளவு விரும்பினர். ஆனால், சச்சின் ஓய்வு பெற்ற பின்பு, அடுத்து யார், என்ன என்ற கேள்வி எழுந்தது.
சச்சின் ஓய்வு பெற்ற பிறகான நான்கு ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் அதிமுக்கியமான ஆண்டுகளாகும். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்லாது இரண்டு தரவரிசையிலும் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.
இந்த புது கிரிக்கெட் அணியிடமிருந்து வித்தியாசமான அணுகுமுறையை ரசிகர்கள் அனுபவித்தனர். இந்த மாற்றத்திற்கான விதைகள் 2007ம் ஆண்டே விதைக்கப்பட்டது. டி 20 போட்டிகளின் வடிவம், கிரிக்கெட் இயங்கும் முறையை மாற்றியமைத்தது. இந்த விளையாட்டிலிருந்து விலகிச் செல்ல இருந்த ரசிகர்களை புதிய வடிவம் மீண்டும் கவர்ந்தது. ஆனால் இது சற்று சவாலானதாக இருந்தது.
ஓய்வு பெற்ற நேரம்…
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டென்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் ட்ராவிட், வி.வி.எஸ், லட்சுமன் மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் டி 20 போட்டிகளில் இருந்து விலகி இருந்தனர்.
இந்நிலையில், மகேந்திர சிங் தோனி வழிநடத்திய இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் தோனியின் படை வெற்றியைக் கைப்பற்றியது. டி 20 வடிவத்தில் நடந்த முதல் உலகப் போட்டியிலேயே உலக சாம்பியன்கள் பட்டத்தை வென்றது இந்திய அணி.
இந்திய கிரிக்கெட் அணி மாறி, புது அணி பிறந்தது. இந்திய இளைஞர்கள் புது ஹீரோக்களைப் பெற்றனர்.

பட மூலாதாரம், Getty Images
2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, டிராவிட், லட்சுமன் மற்றும் சேவாக் ஆகியோர் ஓய்வு பெற, இந்திய கிரிக்கெட் அணியின் சோதனைக் காலமாக அது இருந்தது.
ஆனால், இந்த புதிய வடிவிலான கிரிக்கெட்டை புரிந்து கொண்டு டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார் சச்சின். பின்பு, டி 20 போட்டிகளில் விளையாடுவதை நிறுத்த முடிவெடுத்த சச்சின், அதனைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சச்சின் அதிலிருந்து பிரியா விடைப் பெற்றார்.
இப்படியான தொடர் ஓய்வுகளால் சிக்கித் தவிக்காமல், தோனியின் தலைமையிலான புதிய இந்திய அணி பல போட்டிகளில் வெற்றி பெற்று வந்தது.
இந்திய அணியின் பயணம்
ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றிப் பெற்ற இந்திய அணி அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறியது. நியூசிலாந்து மற்றும் தென் அஃபிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.
உள்நாட்டில் நடத்தப்பட்ட போட்டிகளில் அற்புதமான வெற்றி விகித்தத்தைப் பெற்ற இந்திய அணி, வெளிநாடுகளில் மிகவும் மோசமாக விளையாடிது. இதனால், புதிய இந்திய அணி கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது.
2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது, இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அமைந்தது. ஐ.சி.சி யின் இறுதிப் போட்டியில் ,இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், GETTY IMAGES/ISHARA S. KODIKARA
ஆனால் 2014ம் ஆண்டு இந்திய அணிக்கு வெற்றிகரமானதாக அமையவில்லை. ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை தனது பெருமையை நிலைநாட்டிக் கொண்டது.
ஆனால் இந்த தோல்விகள் இந்திய அணியை எந்த விதத்திலும் முடக்கிவிடவில்லை. படிப்படியாக இந்திய அணி தனது விளையாட்டுகளில் ஆக்ரோஷத்தைக் காட்டத் தொடங்கியது. விளைவுகளில் கவனம் செலுத்தாமல், விளையாட்டு முறையை நம்பியது இந்த அணி.
இப்படியான அணுகுமுறையால் நம் சொந்த மண்ணிலேயே இலங்கை மற்றும் மேற்கிந்திய நாடுகளை வீழ்த்தியது இந்திய அணி.
பல வெற்றிகளை பெற்றுக் கொண்டிருந்த வேலையில், டெஸ்ட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெற போவதாக திடீரென அறிவித்தார் மகேந்திர சிங் டோனி.
இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார் விராட் கோலி.
இளம் வீரர்களின் எழுச்சி
ஐ.பி.எல் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடியது அனைத்து இந்திய வீரர்களுக்கும் நம்பிக்கை அளித்தது. உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடிய நம் வீரர்களுக்கு இது ஒரு மேடை அமைத்துக் கொடுத்தது.
2014ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் விராட் கோலி தனது தலைமையை வெளிப்படுத்தினார். ஆசியக் கோப்பை மற்றும் டி 20 உலகக் கோப்பைப் போட்டிகளில் திறமையாக விளையாடியதையடுத்து கேப்டன் பதவிக்கு முன்னேறினார் கோலி.
இந்த புதிய இந்திய அணியில் கங்குலி உள்ளிட்ட ஐந்து அதீத ஆட்டக்காரர்கள் இல்லை. நாம் மிகவும் விரும்பிய சச்சினும் இல்லை. இருப்பினும், இந்த அணி பல அற்புதங்களை நிகழ்த்தியது.

பட மூலாதாரம், GETTY IMAGES/JIM WATSON
பேட்டிங்கை மட்டுமே நம்பி இருந்த இந்திய அணியின் காலம் மாறி, புபுதிய உருவை எடுத்தது இந்திய அணி.
இந்த அணி தனித்துவமான சமநிலையை பெற்றுள்ளது. ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ரஹானே, டோனி என்ற பேட்டிங் தரவரிசை அணிக்கு வலு சேர்க்கிறது. ஒவ்வொருவரும் தனித்தனியே வலிமையான விளையாட்டுத் திறனை கொண்டவர்கள்.
ஹார்திக் பாண்டியா அருமையான ஆல்ரவுண்டர். ரவிச்சந்திர அஷ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் தோற்கடிக்க முடியாத சுழற்பந்து வீச்சாளர்கள். புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பூம்ரா ஆகியோர் மாறுபட்ட பந்துவீச்சுத் திறமைகளைக் கொண்டவர்கள்.
தனிப்பட்ட வீர்ரை மட்டுமே நம்பி இல்லாமல், பலதரப்பட்ட திறமைகளை நம்பி இருப்பது அணியை முழுமையாக்குகிறது.
சச்சின்,கோலி: ஒரு ஒப்பீடு
கிரிக்கெட் விளையாட்டு உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ளார் டென்டுல்கர். ஆனால் அவரின் சாதனைப் பதிவுகளுக்கு சவாலிடுகிறார் விராட் கோலி. கடுமையான நிலைகளிலும் விளையாடி பல ரன்களை குவித்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கோலி.
தற்போதுள்ள கோலியின் பேட்டிங் திறமைகளைப் பார்க்கும் போது சச்சினின் பதிவுளை அவர் முறியடிப்பார் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

பட மூலாதாரம், GETTY IMAGES/INDRANIL MUKHERJEE
விராட் ரன் எண்ணிக்கையை பார்பதில்லை. தன்னைக் காயப்படுத்திக் கொள்ளாமல், இதே நிலையில் விளையாடினால் சச்சினின் பதிவுகளை கட்டாயம் கோலி முறியடிப்பார் என டி 20 உலகக் கோப்பைத் தொடக்கத்தில் குழு நிர்வாகியாக இருந்த லால்சந்த் ராஜ்புத் கூறியுள்ளார்.
இதுவரை விளையாடிய இன்னிங்சில், 345 போட்டிகளில் சராசரி ரன்களை விட அதிகமாகவே எடுத்துள்ளார் கோலி. ஒரு நாள் போட்டிகளில் 32 சதங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
ஆனால் கோலியையும் சச்சினையும் ஒப்பிடுவது சரியானதாக இருக்காது.
புது நம்பிக்கை, புதிய திசைகள்:
கடந்த சில ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் பல விதங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. 1971ல் வெளிநாட்டில் நடந்த முதல் தொடரில் அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
1983ம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அடுத்த தலைமுறையினரை கிரிக்கெட் குறித்து கணவு காண வைத்தது இந்த வெற்றி.

பட மூலாதாரம், Getty Images/PUNIT PARANJPE
2011ம் ஆண்டில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான 15 பேரின் உழைப்பை உண்மையாக்கி உலகக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா.
தற்போது கோலி தலைமையிலான இந்த இளம் வீரர்கள் அடங்கிய அணி பயமறியாதது. அவர்களால் எதையும் சாதிக்க முடியும்.
சச்சின் ஓய்வு பெற்ற 4 ஆண்டுகளில், இந்திய கிரிக்கெட் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
தற்போதுள்ள இந்திய அணி ஆக்ரோஷமானது. விளையாட்டு உத்தி அறிந்தது. கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தப் போகும் நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வரைபடத்தைப் பார்க்கும்போது, வருங்காலத்தில் கிரிக்கெட் உலகை இந்த அணி ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















