நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேர் கைது

பட மூலாதாரம், Getty Images
நாமக்கல் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு சிறுமிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இன்று மீட்டுள்ளனர்.
ராசிபுரம் பகுதியில் வசித்துவந்த இச்சிறுமிகள் எளிமையான கூலித்தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் தந்தை உயிரிழந்துவிட்டார். வாழ்வாதாரத்திற்காக தாய் கூலிவேலை செய்து வருகிறார்.
வறுமை மற்றும் பாதுகாப்பில்லாத சூழலில் வளர்ந்து வரும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது குறித்த தகவல் பெறப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ராசிபுரம் காவல்துறையினர் இன்று அவர்களின் வசிப்பிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
இதில் 8 மற்றும் 9ம் வகுப்பு படித்துவரும் சகோதரிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இச்சிறுமிகளை 10க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளதாக ஆய்வு செய்த அலுவலர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.
தற்போது வரை சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர் ரஞ்சிதப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 2 மணி நேர மின் தடை: ஸ்தம்பித்த மும்பை நகரம், விசாரிக்க மகராஷ்டிர முதல்வர் உத்தரவு

பட மூலாதாரம், Bcci / ipl
மும்பை நகரில் சுமார் இரண்டு மணி நேரமாக மின் தடை ஏற்பட்டது குறித்து விசாரிக்க மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மின் இணைப்பு க்ரிடில் ஏற்பட்ட பழுதால் இந்த மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மின் தடையால் உள்ளூர் ரயில் சேவை, இணைய வழி வகுப்புகள், தேர்வுகள் ஆகியன தடைப்பட்டன.
மேலும் மருத்துவமனைகளிலும் மின் தடை ஏற்பட்டது குறித்து பலர் சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்தனர்.
விமான நிலைய செயல்பாடுகளில் எந்த தடங்கலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை நகரில் தடையில்லா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவில் நகர் முழுவதும் மின் தடை இன்று ஏற்பட்டது.
இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தற்போது பகுதி பகுதியாக மின்சாரம் திரும்ப வரத் தொடங்கியுள்ளது.
மும்பைக்கு மின்சார விநியோகம் செய்யும் நிறுவனமான `பெஸ்ட்` நிறுவனம், டாடாவின் மின்சார உள் விநியோகத்தில் ஏற்பட்ட பழுதே இதற்கு காரணம் என ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
தோனியின் மகளுக்கு மிரட்டல்: 16 வயது குஜராத் சிறுவன் கைது

பட மூலாதாரம், Bcci / ipl
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்ததற்காக குஜராத் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
தோனியின் மனைவி சாக்ஷி தோனியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தோனியின் மகளுக்கு எதிராக மிகவும் மோசமான, அருவருக்கத்தக்க வகையில் பின்னூட்டமிட்ட, நம்னா கபாயா எனும் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்ச் (மேற்கு) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
அந்தப் பின்னூட்டம் குறித்து தோனியின் மனைவி சாக்ஷி தோனி தனது சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
ஜார்கண்ட் காவல்துறை அந்தச் சிறுவனின் விவரங்களை கண்டுபிடித்து தங்களிடம் தெரிவித்ததாகவும், விசாரணையின்போது அவர்தான் அவ்வாறு மோசமான பதிவை பின்னூட்டமாக இட்டார் என்று தெரிந்த பின்பு கைது செய்தோம் என்றும் குஜராத் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கு பிறகு அந்த பதின்ம வயது சிறுவன் தோனியின் மகளுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையில் அவ்வாறு பதிவிட்டிருந்தார்.

ஐதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான்

பட மூலாதாரம், IPL/TWITTER
ஐபிஎல் தொடரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ராகுல் டெவாட்டியா மற்றும் ரியான் பராக். 7.5 ஓவர்களில் 85 ரன்கள் சேகரித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளனர் இந்த இருவரும்.

சீனாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர நிதியுதவியின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், SRI LANKA PMO MEDIA
இலங்கைக்கு சீன அரசாங்கத்தினால் 600 மில்லியன் யுவான் நிதியுதவி, அவசரமாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாயில் 16.5 பில்லியன் ரூபாய் என இலங்கைக்கான சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
விரிவாகப் படிக்க: சீனாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அவசர நிதியுதவியின் பின்னணி என்ன?

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக எஸ்.ஏ.போப்தேவுக்கு ஜெகன்மோகன் கடிதம்

பட மூலாதாரம், FACEBOOK/YSJAGAN
ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான என்.வி. ரமணாவுக்கு எதிராக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
மாநில முதலமைச்சர் ஒருவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, இன்னொரு உச்ச நீதிமன்ற நீதிபதி மீது குற்றம்சாட்டி கடிதம் எழுதுவது இதுவே முதல் முறை.
விரிவாகப் படிக்க: உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் - ஆந்திராவில் அரசியல் புயல்

"பாலியல் தொழிலாளர்களுக்கும் சலுகைகள்"

பாலியல் தொழிலாளர்களை `முறைசாரா தொழிலாளர்கள்' என்று அங்கீகரிக்கவும், பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவுப்பொருட்களை பெறுவதற்கு தேவையான ஆவணங்களை அவர்களுக்கு வழங்கவும் வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்.எச்.ஆர்.சி) ஆலோசனை வழங்கியுள்ளது.
விரிவாகப் படிக்க: "பாலியல் தொழிலாளர்களுக்கும் சலுகைகள்" - தேசிய மனித உரிமைகள் ஆணையம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












