நரேந்திர மோதி அரசாங்கம் பெட்ரோல் விலையை குறைக்க மறுப்பது ஏன்? - Petrol Diesel price

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அலோக் ஜோஷி
- பதவி, பிபிசி இந்தி சேவைக்காக
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்தும் எண்ணெய் விலை இந்தியாவில் குறையவில்லை.
குறையும் என்று நம்பிய மக்களின் நம்பிக்கையை மீண்டும் பொய்யாக்கி இருக்கிறது இந்திய அரசு.
அது மட்டுமல்லாமல், இந்திய அரசு நிச்சயம் எரிபொருள் விலையைக் குறைக்கும், சுமை குறையும் என எதிர்பார்த்துக் காத்திருக்க, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை இந்திய அரசு உயர்த்தி உள்ளது.
கொரோனாவால் உலகமே அச்சத்தில் இருக்கிறது. இது பொருளாதாரத்திலும் வியத்தகு அளவில் தாக்கம் செலுத்தி இருக்கிறது. உணவகங்கள், தங்குமிடங்கள் மட்டும் மூடவில்லை பெரும்பாலான விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை குறைப்பு என்பது அத்தியாவசியமானதாக முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது உள்ளது.
இந்திய பொருளாதாரமும் கணிசமான அளவுக்கு சரிந்து உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் 5 சதவீதத்திற்கும் கீழே உள்ளது.
கொரோனா எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாத அளவுக்கு உள்ளது. இது பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கமும் முழுமையாகக் கணிக்க முடியவில்லை.
கொரோனாவும், கச்சா எண்ணெய் விலையும்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பொருளாதாரம் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்பது உண்மையில் வரவேற்கத்தக்கச் செய்திதான். இந்த ஆண்டு தொடக்கத்தில் முன்பே கச்சா எண்ணெய்யின் விலை 45 சதவீதம் வரை குறைந்தது. ஜனவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்தே எண்ணெய் விலை சரிவை நோக்கி செல்ல தொடங்கியது.
செளதி அரேபியா - ரஷ்யா முரண்
சௌதிதான் சர்வதேச அளவில் அதிகமாகக் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு. எண்ணெய் கூட்டமைப்பான ஓபெக்கிலும் அது பெரியளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒபெக் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளில் மிகவும் செல்வாக்கான நாடு ரஷ்யா.
இவர்களுக்கு இடையேயான முரண்தான் சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைந்ததற்குக் காரணம்.
சில சமயங்களில் ஒபெக் கூட்டமைப்பில் உள்ள நாடுகளும், அதில் இல்லாத நாடுகளும் இணைந்து பணியாற்றும். அது ஒபெக் + என அழைக்கப்படும்.
எண்ணெய் விலை குறையாமல் இருக்க எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்த முன்பு முடிவு செய்திருந்தது ஒபெக் +, இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தமானது இந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் காலாவதியாகிறது.
இந்த சூழலில் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தப் போவதாகவும் கூறியது.
இதனால் எரிச்சல் அடைந்த செளதி எண்ணெய் உற்பத்தியை மட்டும் குறைக்கப் போவதில்லை, விலையையும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குக் குறைக்கப் போவதாகக் கூறியது.
இந்தியாவிற்கு இது நல்ல வாய்ப்பு ஆனால்…
உலகின் இரு முக்கிய எண்ணெய் தயாரிப்பு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. இரண்டாவது காரணம் கொரோனா குறித்த அச்சம் உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது மேலும் எண்ணெய்க்கான தேவை குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இது இந்தியாவுக்கு அருமையான ஒரு வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும் ஏனென்றால் இந்தியா 80 சதவீத எண்ணெய்யை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.
கடந்த 2018 -19 நிதியாண்டில் இந்தியா 112 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
தற்போதைய நிதியாண்டில் ஜனவரி வரை 87.7 பில்லியன் டாலர்களை இதுவரை இந்தியா செலவு செய்துள்ளது.
கிரெடிட் சேவை வழங்கும் கேர் (CARE) முகமை, கச்சா எண்ணெய் விலையில் ஒரு டாலர் இறங்கினாலும், எண்ணெய் இறக்குமதியில் இந்தியாவால் ரூபாய்.10700 கோடிகளை சேமிக்க முடியும் என்கிறது. எனவே 30 டாலர் குறைந்தால், இந்திய அரசுக்கு சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும். மற்றொரு ஆய்வறிக்கைபடி, எண்ணெய் விலையில் 10 டாலர் குறைந்தால், அது இந்திய பொருளாதாரத்துக்கு 15 பில்லியன் டாலர்கள் வருவாயாக இருக்கும். அது இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் அரை சதவீதமாகும்.
மேலும் எண்ணெய் விலையில் 10 டாலர்கள் குறைந்தால், அது இந்தியாவின் பண வீக்க விகிதத்தை 0.3 சதவீதம் வரை குறைக்கும்.
அதுமட்டுமல்ல குறைந்த விலையில் கச்சா எண்ணெய் என்றால் அதன் பொருள், பெட்ரோல், எரிவாயு, மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலையும் குறையும். இது பொது மக்களுக்கு விலை குறைந்த பெட்ரோல் அல்லது காஸ் சிலிண்டர் என்பதும் மட்டுமே நின்றுவிடுவதில்லை.
கச்சா எண்ணெய் விலை குறைந்தால் யாருக்கு நன்மை?
பல தொழிற்சாலைகள் கச்சா எண்ணெய்யிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை மூலப் பொருட்களாகப் பயன்படுத்துகின்றன. பல தொழிற்சாலைகள் டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயுவை பயன்படுத்துகின்றன.

பட மூலாதாரம், Getty Images
தொழிற்சாலைகளுக்கு வரும் பொருட்களைக் கொண்டு செல்ல டிரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன அதற்கான செலவு டீசல் விலையை வைத்து நிர்ணயிக்கப்படும்.
மூலப்பொருட்கள் மற்றும் போக்குவரத்துக்கான செலவு குறைந்தால், நிறுவனங்கள் அதன் தயாரிப்பு பொருட்களின் விலையை குறைத்து அதற்கான தேவையை அதிகரிக்கும்.
மேலும் வாடிக்கையாளர்களும் தங்களின் பணத்தை தாராளமாகச் செலவு செய்து பொருட்களை வாங்குவர். அப்படிதான் வர்த்தக சுழற்சி நடைபெறும்.
இம்மாதிரியான ஒரு சூழலின் விளைவாக 2016ஆம் ஆண்டு இந்திய அரசுக்கு அதிக வரி வருவாய் கிட்டியது.
எனவேதான் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையும் என அனைவரும் நம்புகின்றனர்.
நம்பிக்கையைச் சிதைத்த அரசாங்கம்

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அரசாங்கம் அனைத்து நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது. அரசு தனது பழைய தந்திரத்தைப் பயன்படுத்தி உள்ளது மற்றும் கலால் வரியையும் லிட்டருக்கு மூன்று ரூபாய் அளவுக்கு ஏற்றிவிட்டது.
இப்போது நிதிநிலைக்கு இந்த கலால் வரி அத்தியாவசியமானது என்று கூறி உள்ள அரசு, இந்த கலால் வரி உயர்வால் திரட்டப்படும் நிதியானது வளர்ச்சிக்காகவும், உள்கட்டமைப்பாகவும் பயன்படுத்தப்படும் என அரசு கூறி உள்ளது.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கலால் வரி உயர்வானது மாநில அரசின் நிதி வருவாயை அதிகரிக்காது. உள்கட்டமைப்பு செஸ் மற்றும் சிறப்பு கலால் வரி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த வருவாய் மாநில அரசுக்கு வராது.

பட மூலாதாரம், Getty Images
இந்த மொத்த வருவாயும் மத்திய அரசின் கருவூலத்திற்கு மட்டுமே செல்லும்.
சர்வதேச அளவில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லையென்றால் அரசு என்ன செய்திருக்கும் என்று நீங்கள் கேட்க விரும்பலாம்.
அதேவேளையில், சர்வதேச அளவில் எண்ணெய் விலை குறைய ஆரம்பித்தவுடன், எப்படி இந்த தேவையான செலவினங்கள் குறித்த சிந்தனை அரசுக்கு வந்தது?
தனது பேராசையைக் கட்டுப்படுத்தி, எண்ணெய் விலை குறைவால் கிடைத்த லாபங்களை, மிச்சப்படும் பணத்தை மக்களுக்கும், சிறு மற்றும் பெரும் தொழிற்சாலைகளுக்கு அளித்திருந்தால், பல ஆண்டுகளாக நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அது முடுக்கிவிடுவதாக இருந்திருக்கும்.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: புதிய உச்சத்தை தொட்ட மரணங்கள், ட்ரோன்கள் வைத்து கண்காணிப்பு - 10 தகவல்கள்
- கைலாசாவில் கொரோனா வைரஸா? - நித்யானந்தா கூறுவது என்ன?
- இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - களநிலவரம்
- அபாயத்தில் 40 கோடி மக்கள் - உலகத்தை தாக்க இருக்கும் மற்றொரு பேரபாயம்
- விஜய், அஜித் ரசிகர்கள் இணைந்து டிரண்டாக்கும் 'நண்பர் அஜித்' ஹேஷ்டாக்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












