வண்டலூரில் 'மாயமான சிங்கம்' - மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்று அக்டோபர் 3ம் தேதி முதல் அதிகாரிகளின் கண்களில் படாமல் 'காணாமல் போயுள்ளது'.
இந்த சிங்கம் எங்குள்ளது என்று குறிப்பாக தெரியவில்லை என்றாலும், பூங்காவின்னுள்ளேயே தான் இருக்கக் கூடும், வெளியே செல்ல வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து குழுக்கள், ட்ரோன்கள், கேமராக்கள் பயன்படுத்தி, சிங்கத்தை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுது.
இந்த நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு சிங்கம் தானாகவே திரும்பி வந்துள்ளது.
சிங்கம் மாயமானது எப்படி? அது திரும்பி வந்தது எப்படி?
ஐந்து வயதான 'ஷேர்யார்' என்ற சிங்கம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது. அது கர்நாடகாவில் உள்ள பன்னார்கெட்டா தேசிய பூங்காவிலிருந்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் சென்னை கொண்டு வரப்பட்டது.
அப்போது முதல் வண்டலூர் பூங்காவின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில், அக்டோபர் 3ம் தேதி முதல் அந்த சிங்கம் தனது இரவு நேர இருப்பிடத்துக்கு வரவில்லை என்பதை அதிகாரிகள் கவனித்தனர். எனவே சிங்கம் 'காணாமல் போனது' என்ற தகவல்கள் வெளிவர தொடங்கின.
சிங்கம் இரவு நேரங்களில் தனது இருப்பிடத்துக்கு வரவில்லை என்றாலும் சிங்கம் மாயமாகிவிட்டது என்ற செய்திகளை பூங்கா அதிகாரிகள் மறுத்தனர்.
ஷேர்யார் சிங்கம் வண்டலூரில் பாதுகாக்கப்பட்ட சிங்கம் சஃபாரிக்கு ஒதுக்கப்பட்ட நிலபரப்பில் உள்ளது என்றும் விரைவில் தானே இருப்பிடத்துக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சிங்கம் உயிரியல் பூங்காவை விட்டு வெளியே வர வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சஃபாரி பகுதி என்பது என்ன?
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் சஃபாரிக்கு என 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடம் முழுவதும் வேலி அமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட, செடிகளும் புதர்களும் அடர்ந்த பகுதியாகும்.
சிங்கத்துக்கு காட்டில் இருப்பது போன்று இயற்கையான சூழலை உருவாக்க இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இது போன்ற சிங்கம் சஃபாரி பகுதிகள் குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்கா உட்பட பல்வேறு பூங்காக்களிலும் உள்ளன.
பொதுவாக வனப்பகுதிகளில் குறிப்பிட்ட இடங்கள் வன உயிர் சஃபாரி இடங்களாக இருக்கும். இந்த இடங்களில் வன விலங்குகளை அதன் இயற்கையான வாழ்விடங்களில் பார்வையிடலாம். இந்தப் பகுதிக்குள் பொதுவாக உரிய அனுமதிப் பெற்று, வழிகாட்டுதல்களுடன் செல்லலாம்.
இந்தியாவில் வனப்பகுதி அல்லாத, சில மிருகக் காட்சி சாலைகளிலும், சிங்கம் சஃபாரிக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சிங்கங்கள் வரையறைக்குட்பட்ட இடங்களில், சுதந்திரமாக நடமாகக் கூடும். அவை கூண்டுக்குள் அடைக்கப்படாது. இந்த சிங்கங்களை பார்க்க விரும்பும் மக்கள், பிரத்யேக வாகனத்தைப் பயன்படுத்தி, அந்தப் பகுதிக்குள் சென்று பார்வையிடலாம். வண்டலூரில் இவ்வாறு 50 ஏக்கரில் சிங்கம் சஃபாரிக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
சிங்கம் ஏன் இரவு நேர இருப்பிடத்துக்கு திரும்பவில்லை?
சஃபாரிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சிங்கங்கள் சில நாட்கள் சுற்றி திரிவது அசாதாரணமானதோ, வழக்கத்துக்கு மாறானதோ அல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் ஷேர்யார் கடந்த சில நாட்களாக தனது இரவு நேர இருப்பிடத்துக்கு வராததால், சஃபாரி பகுதிக்குள் அது எங்கு உள்ளது என்று தேடி கண்டறியும் முயற்சியில் பூங்கா அதிகாரிகள் ஈடுபட்டனர்.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூரில் சிங்கம் சஃபாரி செல்ல, பொதுமக்களுக்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநர் ரிட்டோ சிரியக் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கம் மாயமாகவில்லை என்று தெரிவித்துள்ளார். சிங்கம் சஃபாரிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் "முழுவதும் வேலி அமைத்தும், சுற்றுச்சுவர் எழுப்பியும் பாதுகாக்கப்படும் இடமாகும். சிங்கம் அங்கிருந்து வெளியே தப்பி செல்ல வாய்ப்பில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், AAZP
சிங்கம் தற்போது எங்குள்ளது?
சிங்கம் அந்த பகுதிக்குள்ளேயே சுற்றி திரிந்துக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட பூங்கா இயக்குநர் , "அக்டோபர் 4ம் தேதி பூங்கா ஊழியர் ஒருவரும் இரண்டு பணியாளர்களும் ஷேர்யார் சிங்கத்தை சஃபாரி பகுதியினுள்ளே கண்டுள்ளனர். ஷேர்யார் இயல்பாகவும், அமைதியாகவும், ஆரோக்யமாகவும் காணப்பட்டது. ஆனால் ஊழியர்கள் அருகே செல்லும் முன், மீண்டும் அடர்ந்த பகுதிக்குள் சென்றுவிட்டது" என்றும் தெரிவித்தனர்.
அக்டோபர் 5ம் தேதி, ஷேர்யாரின் புதிய கால்தடங்கள் சஃபாரி பகுதியில் காணப்பட்டன. இது சிங்கம் இன்னும் சஃபாரி பகுதிக்குள் தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும் பூங்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) சிங்கம் தானாகவே உணவு உட்கொள்ளும் இடத்திற்கு வந்துள்ளது.
இதனால் நிம்மதியடைந்த பூங்கா அதிகாரிகள் சிங்கத்திற்கு உணவு வழங்கி அதை கூண்டில் அடைத்தனர்.
சிங்கம் எப்படி கண்டுபிடிக்கப்படும்?
ஷேர்யாரின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சஃபாரி பகுதி பகல் நேரத்தில் சாதாரண ட்ரோன்களாலும், இரவு நேரத்தில் தெர்மல் இமேஜிங் ட்ரோன்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதை தவிர 10 கேமரா வலைகள் நிறுவப்பட்டுள்ளன. சஃபாரி பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த கேமராக்களில் சிங்கம் தென்பட்டால், உடனடியாக புகைப்படம் எடுத்து அனுப்பப்படும்.
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனப் படைத் தலைவர்) ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி மற்றும் தலைமை வனவிலங்கு வார்டன் ராகேஷ் குமார் டோக்ரா ஆகியோர் சஃபாரி பகுதியை ஆய்வு செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
சிங்கம் ஏன் வெளியே சுற்றி திரிகிறது?
வண்டலூர் பூங்காவை பார்வையிட்ட மாநில வன உயிர் வாரிய கௌரவ உறுப்பினர் ஆண்டனி ரூபின் சிங்கம் இப்படி சுற்றி திரிவது வழக்கமானது தான் என்று பிபிசி தமிழிடம் கூறுகிறார். "கூண்டில் வைக்கப்பட்டிருந்த சிங்கம் சஃபாரி பகுதியில் வெளியே விடப்பட்டது. அது சிங்கத்துக்கு புதிய அனுபவமாக இருக்கும். வெளியே வந்திருக்கும் சிங்கம் தனது சுற்றுப்புறத்தை ஆராய்ந்து வருகிறது, இது மிகவும் வழக்கமான நிகழ்வு. இப்படி பல முறை கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளது," என்றார்.
சஃபாரி பகுதிகளில் விலங்குகளுக்கு உணவு வைக்கப்படாது என்பதால் இந்த சிங்கம் விரைவில் தனது இரவுநேர இருப்பிடத்துக்கு திரும்பும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். "நிர்ணயிக்கப்பட்ட சஃபாரி பகுதிகளில் சிங்கங்களுக்கு உணவு வைக்கப்படாது, அவற்றின் இரவு நேர இருப்பிடத்தில் தான் உணவு வைக்கப்படும். எனவே சிங்கக்கள் தாமாகவே மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் இருப்பிடங்களுக்கு திரும்பிவிடும். இந்த சிங்கம் வெளியே வந்து நான்கு நாட்கள் முடிந்துள்ளன. நான்கு நாட்களாக உணவில்லாமல் இருக்கக் கூடும் என்பது ஒரு கவலை" என்கிறார்.
"சஃபாரி பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரியும் மயில்கள், முயல்களை சாப்பிட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால் இந்த சிங்கம் இது வரை கையால் உணவளிக்கப்பட்டு பழக்கப்பட்டதாகும். எனவே இந்த சிங்கத்துக்கு வேட்டையாட தெரியாது." என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சிங்கம் வண்டலூர் வந்த பிறகு, இதை தத்தெடுத்து, இதன் பராமரிப்பு செலவுகளை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Antony Rubin
கடந்த காலங்களில் சஃபாரி பகுதிக்குள் சிங்கம் மாயமாகியுள்ளதா?
சிங்கம், அதுவும் இளம் சிங்கம் இது போன்று சஃபாரி பகுதிக்குள் சுற்றி திரிவது முதல் முறையல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வண்டலூர் பூங்காவில் சஃபாரி பகுதிக்குள் ஒரு சிங்கம் சுற்றி திரிந்துள்ளது. இது போன்ற தருணங்களில், சிங்கத்துக்கு பசி எடுக்கும் போது தானாக தனது இருப்பிடத்துக்கு திரும்பிவிடும் என்று பூங்கா இயக்குநர் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த சிங்கம் வேட்டையாடுமா?
அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்கா இயக்குநர் ரிட்டோ சிரியாக் பிபிசி தமிழிடம் பேசும் போது, "இந்த சிங்கம் வெள்ளிக்கிழமை உணவு உட்கொண்டது. பொதுவாக வன விலங்குகள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் உணவு சாப்பிடாமல் இருக்கும். பூங்கா பராமரிப்பில் இருப்பதால், இந்த சிங்கத்துக்கு பணியாளர்கள் தினமும் உணவு அளித்து வந்தனர். எனவே, தினமும் உணவு சாப்பிட்டு பழகிய சிங்கம், விரைவில் தனது இருப்பிடத்துக்கு வந்துவிடும் என்று நம்புகிறோம். சனிக்கிழமை எங்கள் பணியாளர்கள் சிங்கத்தை நேரில் பார்த்துள்ளனர். சஃபாரி பகுதியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை" என்று கூறினார்.

சிங்கம் வண்டலூர் பூங்காவை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளதா?
பூங்கா இயக்குநர் பிபிசி தமிழிடம் பேசுகையில், " கடந்த சில மாதங்களில் மூன்று நான்கு முறை இது போன்று சஃபாரி பகுதிக்குள் ஷேர்யார் சிங்கத்தை அனுமதித்திருக்கிறோம். சஃபாரி பகுதியில் இருக்கும் சிங்கங்கள் வழக்கமாக மாலை 4.30 மணிக்கு தங்கள் இரவு நேர இருப்பிடத்துக்கு வந்துவிடும். வயதான சிங்கங்கள் வெகுதூரம் செல்லாது. ஆனால் இளம் சிங்கங்களுக்கு தங்கள் சுற்றுப்புறத்தில் என்ன உள்ளது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும். எனவே அவை வெகுதூரம் செல்லக் கூடும்.
சனிக்கிழமை எங்கள் பணியாளர்கள் எந்தப் பகுதியில் சிங்கத்தை பார்த்தார்களோ, அதையொட்டிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். எனினும் வேறு இடங்களுக்கும் சென்றிருக்க வாய்ப்புண்டு.
சஃபாரி பகுதி என்பது மிகவும் பாதுகாப்பட்ட பகுதியாகும். அதை சுற்றிலும் 16 அடி உயரமுள்ள கம்பி வேலி மற்றும் சுற்றுச்சுவர் உள்ளது. பொதுவாக இந்த சுவரை தாண்டி விலங்குகள் வெளிவர இயலாது" என்று உறுதி அளித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு













