'ஒரே நாடு ஒரே தேர்தல்' - அனைத்து கட்சி கூட்டத்தை மு.க.ஸ்டாலின், மம்தா உள்ளிட்டோர் புறக்கணிப்பு

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதி தலைமையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குறித்து ஆலோசிக்க இன்று (புதன்கிழமை) மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்தைப் புறக்கணிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்.பி.க்கள் இருக்கும் கட்சியின் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இதுதொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோதி திட்டமிட்டுள்ளார்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பதை எதிர்க்கும் இடதுசாரிகள் பிரதமர் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்'
இந்தியாவில் 1967ஆம் ஆண்டுவரையில் பெரும்பாலும் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் (கேரளா விதிவிலக்கு) ஒரே நேரத்தில்தான் தேர்தல்கள் நடைபெற்றுவந்தன. ஆனால், 1967, 1968ஆம் ஆண்டுகளில் சில மாநில சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதாலும் 1970ல் நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதாலும் தேர்தல்கள் மாநிலங்களிலும் நாடாளுமன்றங்களிலும் மாறிமாறி நடைபெற ஆரம்பித்தன.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் முதல் மூன்று மக்களவையும் முழு காலமும் பதவியில் இருந்தன. நான்காவது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டது. ஐந்தாவது மக்களவையின் காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு, எட்டாவது, பத்தாவது, பதினான்காவது, பதினைந்தாவது மக்களவைகள் முழு பதவிக் காலமும் நீடித்தன. ஆறு, ஏழு, ஒன்பது, பதினொன்று, பன்னிரண்டு, பதிமூன்றாவது மக்களவைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டன. இப்படி நிகழ்ந்ததால், 'ஒரே நேரத்தில் தேர்தல்' என்ற நோக்கம் முழுக்கவுமே குலைந்துபோனது.
தற்போது இந்தியாவில், ஒரு சில ஆண்டுகளைத் தவிர, பிற ஆண்டுகளில் எல்லாம் 5-7 மாநிலங்களுக்குக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடக்கின்றன. 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒரிசா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது.
அதற்குப் பிறகு, அதே ஆண்டு செப்டம்பரிலிருந்து டிசம்பருக்குள் மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2015ல் தில்லி, பிகார் மாநிலங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 2016ல் தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கத்திற்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதைத் தவிர்த்து, உள்ளூராட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்களைக் கணக்கில் கொண்டால் ஒரே வருடத்தில் இந்தியாவில் பல முறை தேர்தல்கள் நடந்துகொண்டேயிருக்கின்றன.
விரிவாகப் படிக்க: 'ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவதற்குத் தேவை என்ன? அது எப்படி நடக்கும்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












