சசிகலா நடராஜன்: நிழல், நிஜமானது

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவின் மிக துணிச்சலான மற்றும் சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளில் ஒருவராக திகழ்ந்த காலஞ்சென்ற தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் தோழியாகவும், உற்ற துணையாகவும் விளங்கியவர் சசிகலா நடராஜன். அவருக்கு வயது 60.

சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகுமா?

பட மூலாதாரம், KASHIF MASOOD

படக்குறிப்பு, சசிகலா நடராஜன்: நிழல், நிஜமாகுமா?

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த சசிகலா, கள்ளர் என்னும் பலம் பொருந்திய பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து எம். நடராஜனை மணந்தார். 1980-களில், சசிகலா ஒரு வீடியோ கடையை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது

ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டத்தின் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்த நடராஜன், அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரான சந்திரலேகாவுடன் கொண்டிருந்த நட்பின் மூலம் அவரிடம் தனது மனைவி சசிகலாவை அறிமுகம் செய்து வைத்தார்.

சந்திரலேகா, அப்போது அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசிகலாவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இப்படித் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் வந்த சசிகலா, வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்துள்ளார். பின்னர் ஜெயல்லிதா கலந்து கொண்ட அதிமுக பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வீடியோ பதிவு செய்யும் வேலையும் அவருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. பின்னாட்களில், இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர்.

தனது அரசியல் குருவான எம்ஜிஆருடன் ஜெயலலிதா
படக்குறிப்பு, தனது அரசியல் குருவான எம்ஜிஆருடன் ஜெயலலிதா

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் ஜெயலலிதா பிரிவு என்ற அணியை ஜெயலலிதா தலைமை தாங்கி வந்த காலத்தில், சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீடான வேதா இல்லத்தில் சசிகலா நிரந்தரமாக குடியேறினார். சில காலத்திலேயே ஜெயலலிதாவுக்கும், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பால், நடராஜன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடை அணுகுவதிலிருந்து தடை செய்யப்பட்டாலும், சசிகலா மட்டும் ஜெயலலிதாவின் தோழியாக, ஜெயலலிதாவின் வீட்டிலேயே இருந்து வந்தார்.

''சசிகலா எனது சகோதரி போன்றவர். அவரிடம் எனது மனதில் உள்ள பல விஷயங்களையும் நான் பகிர்ந்து கொள்வேன். என் தாய் இப்போது உயிரோடு இருந்தால் என்னை எவ்வாறு பார்த்து கொள்வாரோ, அவ்வாறு சசிகலா என்னை பார்த்துக் கொள்கிறார்.'' என்று சசிகலா குறித்து ஒரு முறை ஊடகங்களிடம் பேசிய போது ஜெயலலிதா தெரிவித்தார்.

சசிகலாவின் உறவினர்கள் பலரும் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். சசிகலாவின் அக்கா மகன் டி .டி வி. தினகரன் அதிமுகவின் செல்வாக்கு மிகுந்த நாடாளுமன்ற உறுப்பினராக வலம் வந்தார்.

ஜெயலலிதாவுடன் சசிகலா

பட மூலாதாரம், IMRAN QURESHI

படக்குறிப்பு, தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதாவுடன் சசிகலா

டி .டி வி. தினகரன் மூலமாகவே தற்போதைய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்தது.

சசிகலா மீதான குற்றச்சாட்டுகள்

சசிகலாவின் மற்றும் அவரது உறவினர்களின் தலையீடுகள் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகமாக இருந்ததாக அரசு அதிகாரிகள், அதிமுகவினர் மற்றும் ஊடகங்களில் பலமுறை புகார் எழுந்ததுண்டு.

தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, அவர்களுக்கு தண்டனை விதித்து பெங்களூரு விசாரணை நீதிமன்றம் 2014-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. தற்போது அந்த வழக்கின் மேல்முறையீடு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, சசிகலா

பட மூலாதாரம், Image copyright

படக்குறிப்பு, எப்போதும் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்த சசிகலா

அதிமுக ஆட்சியின் போது ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோரைப் பங்குதாரர்களாகக் கொண்ட ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான டான்சி (தமிழ்நாடு சிறுதொழில் கழகம்) நிலத்தை வாங்கியது மிகப் பெரிய சர்ச்சையை உருவாக்கியதோடு, ஜெயலலிதாவுக்கு தண்டனையையும் பெற்றுத் தந்தது. பின்னர் அந்த வழக்கை அவர் உச்சநீதிமன்றத்தில் வென்றார்.

சசிகலாவுக்கு வேண்டாதவர்களாகிவிட்ட பல அதிமுக தலைவர்கள் அதற்கு பிறகு கட்சியில் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுவதுண்டு.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா

கடந்த 1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற மற்றும் நாடளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தபோது, கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார். ஆனால், அவர்கள் கட்சியை விட்டு விலக்கப்படவில்லை.

கடந்த 2011 டிசம்பர் 11-ஆம் தேதியன்று, யாரும் எதிர்பாராத வகையில், தனக்கும், தனது ஆட்சிக்கு எதிராக சசிகலாவின் குடும்பத்தினர் சில முயற்சிகளில் ஈடுபடுவதாகக் தெரிவித்த ஜெயலலிதா, சசிகலாவை தனது போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து வெளியேற்றினார்.

சசிகலா உள்பட பத்துக்கும் மேற்பட்ட அவரது குடும்பத்தினரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

சசிகலா

பட மூலாதாரம், IMRAN QURESHI

படக்குறிப்பு, 2011-இல் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் சசிகலா

அதற்குப் பிறகு அவரது அண்ணன் திவாகரன் கைது செய்யப்பட்டார். வி. மகாதேவனது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது வீட்டில் சோதனைகளும் நடத்தப்பட்டன.

பின்னர், அதற்கு மூன்று மாதங்களுக்கு பின்னர், சசிகலா வெளியிட்ட அறிக்கையில், தனது உறவினர்கள் என்றும் நண்பர்கள் என்றும் கூறிக்கொண்டு, சிலர் ஜெயலலிதாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டது மிகப்பெரிய துரோகம் என்றும், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர்கள் தனக்குத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதனை ஏற்றுக் கொண்டு மீண்டும் , தனது தோழி சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதாக ஜெயலலிதா அறிவித்தார். தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டு , அவரை அதிமுகவிலிருந்து நீக்கி, ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்வதாக தெரிவித்த ஜெயலலிதா

அதே நேரத்தில், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்பட, அவரது உறவினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், கட்சித் தொண்டர்கள் அவர்களோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.