கொரோனா வைரஸ் புதிய வடிவம்: பிரிட்டனுடன் தொடர்பில் இருக்கும் உலக சுகாதார நிறுவனம்

இங்கிலாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒரு பெண்.

பட மூலாதாரம், Reuters

கோவிட்-19 நோய்க்கு காரணமாகும் நாவல் கொரோனா வைரஸில் புதிய வடிவம் பிரிட்டனில் புதிதாக ஏராளமான தொற்றுக்குக் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விஷயத்தில் பிரிட்டன் அதிகாரிகளோடு தாங்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாவல் கொரோனா வைரசின் ஆரம்ப வடிவத்தை விடவும் இந்த புதிய வடிவம் மிக விரைவாகப் பரவுகிறது. ஆனால், பழைய வடிவத்தைவிட இது அதிக மரணத்தை விளைவிப்பதாக இது இல்லை.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் மட்டுமில்லாமல், இந்த புதுவகை திரிபு நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணப்படுவதாக பிபிசியிடம் தெரிவித்தது உலக சுகாதார நிறுவனம்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும்போது இந்த புதிய திரிபு வைரஸ் வித்தியாசமாக எதிர்வினையாற்றுவதாக கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வேகமாகப் பரவும் இந்த வைரஸ் திரிபைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஐக்கிய ராஜ்ஜியத்தில், குறிப்பாக லண்டன் உள்ளிட்ட தென்கிழக்கு இங்கிலாந்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்கள் ஜனவரி 1ம் தேதி வரை தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது நெதர்லாந்து. பெல்ஜியம், இத்தாலி ஆகிய நாடுகளிலும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அயர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவையும் இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளது ஸ்பெயின்.

இம்மாத தொடக்கத்தில் நெதர்லாந்தில் எடுக்கப்பட்ட மாதிரிகள், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதே வகை புதிய திரிபு இருப்பதைக் காட்டியதை அடுத்தே, நெதர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் நடவடிக்கை

வேகமாகப் பரவும் இந்த புதுவகை வைரஸ் திரிபு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அவசரமாக ஞாயிற்றுக்கிழமை தனது கூட்டு கண்காணிப்பு குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநர் (டைரக்டர் ஜெனரல் ஆஃப் மெடிகல் சர்வீஸஸ்) திங்கள் கிழமை இது தொடர்பாக விவாதிப்பதற்கு ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது.

இந்த உலகத் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே புதிய வகை திரிபுகளை சிறப்பு வல்லுநர்கள் கண்காணித்தே வருகிறார்கள் என்று பிபிசியிடம் தெரிவித்தார் உலக சுகாதார நிறுவன கொள்ளை நோயியல் வல்லுநர் மரியா வான் கெர்கோவே.

இந்த புதுவகை திரிபு குறித்து என்ன தெரியும்?

லண்டன் ஆக்ஸ்போர்டு தெருவில் கிறிஸ்துமசுக்கு முன்பாக பொருள்களை வாங்குவதற்கு முக கவசத்தோடு செல்லும் மக்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லண்டன் ஆக்ஸ்போர்டு தெருவில் கிறிஸ்துமசுக்கு முன்பாக பொருள்களை வாங்குவதற்கு முக கவசத்தோடு செல்லும் மக்கள்.

இந்த புதுவகை திரிபு தொடர்பாக நடக்கும் ஆய்வுகளில் கிடைக்கும் தகவல்களை பிரிட்டன் பகிர்ந்து வருவதாகவும், இந்த புதிய வகை வைரஸ் திரிபு குறித்து, அதன் பண்புகள், தாக்கங்கள் குறித்து தங்களுக்குத் தெரியத் தெரிய அவற்றை தாங்கள் உறுப்பு நாடுகளுடனும், பொது மக்களுடனும் பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

உறுதியாக கூறமுடியாத நிலை இருந்தாலும், இந்த புதிய திரிபு பழையதைவிட 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியதாக இருக்கலாம் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

2px presentational grey line

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :