முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக்குக்கு பிணை
நம்பிக்கை துரோகம் மற்றும் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக், கோலாலம்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Reuters
அவரைக் காண நீதிமன்றத்தில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், தான் குற்றவாளி இல்லை என்றார். தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க நீதிமன்றமே சரியான இடம் எனத் தெரிவித்தார்.
அவர் மீதான விசாரணை அடுத்த ஃபிப்ரவரி மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நஜிப் பதவியில் இருந்தபோது பில்லியன் கணக்கான டாலர்கள் அரசு முதலீட்டு நிதியில் இருந்து காணாமல் போனது தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் நிதி மோசடி குற்றத்தை அவர் மறுத்துள்ளார்.

பட மூலாதாரம், EPA
முன்னதாக திங்களன்று நீண்ட கார் அணிவகுப்போடு வீட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட அவர் கைது செய்யப்பட்டதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான முடிவால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட நஜிப், 1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பில்லியன்கணக்கான டாலர்கள் காணாமல்போனது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்தார். இதனால், நாட்டை விட்டு வெளியேற அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
270 மில்லியன் டாலருக்கு மேலான மதிப்புடைய ஆடம்பரப் பொருட்களை புலனாய்வாளர்கள் நஜிப் வீட்டிலிருந்து கைப்பற்றியுள்ளனர்.
இவற்றில் நஜிப்பின் மனைவிக்கு சொந்தமான 12 ஆயிரத்திற்கு மேலான ஆபரணங்களும் அடங்குகின்றன.
"வுல்ஃப் ஆப் வால் ஸ்டீட்" (Wolf of Wall Street) என்ற ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படத்தை தயாரித்த ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர், நஜிப்பின் வளர்ப்பு மகன் ஆகியோரை புலனாய்வாளர்கள் விசாரித்துள்ளனர்.
ஊழல் மோசடி
இந்த பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்களை நஜிப் தொடாந்து மறுத்து வந்துள்ளார்.
அவர் பிரதமாராக இருந்தபோது, இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து மலேசிய அதிகாரிகளால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் பல நாடுகளில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவை விட்டு வெளியேற அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரை நிதி முனையமாக மாற்றி, தொலைநோக்கு முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு, 1MDB எனப்படும் அரசு முதலீட்டு நிதியம் 2009ம் ஆண்டு நஜிப்பால் உருவாக்கப்பட்டது.
ஆனால், 2015ம் ஆண்டு தொடக்கத்தில், சுமார் 11 பில்லியன் டாலர் தொகையை வங்கிகளுக்கும், கடன் பத்திரதாரர்களுக்கும் கொடுக்க தவறிய இந்த நிதியம் தொடர்பாக எதிர்மறையான விமர்சனங்கள் வர தொடங்கின.
ஆவணங்களில் புலனாய்வு மேற்கொண்டதில் இந்த நிதியத்தில் இருந்து நஜிப்பின் தனிப்பட்ட வங்கி கணக்குக்கு பல லட்சக்கணக்கான டாலர் சென்றுள்ளதென குற்றஞ்சாட்டப்படுவதாக அப்போது வால் ஸ்டீட் ஜர்னல் செய்தி வெளியிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












