"நாங்கள் நலமாக இருக்கிறோம்": தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்
தாய்லாந்து குகையில் சிக்கி உள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் நலமோடு இருப்பது இரு காணொளி மூலம் தெரியவந்துள்ளது. அந்த காணொளியில், சிறுவர்கள் தாங்கள் நலமுடன் இருப்பதாக கூறுகிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சிரித்துக்கொண்டே அறிமுகம் செய்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
என்ன இருக்கிறது அந்த காணொளியில்
இந்த காணொளியை தாய்லாந்து கப்பற்படை தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
முக்குளிப்பவர்களுடன் அமர்ந்திருக்கும் அந்த சிறுவர்கள், தாய்லாந்து முறையில் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்கிறார்கள் .
இன்னொரு காணொளியில் அந்த சிறுவர்கள் எவ்வளவு விரைவாக உணவு வந்து சேரும் என்று கேட்கிறார்கள்.
தாய்லாந்து சீல் கப்பற்படையை சேர்ந்த இரண்டு முக்குளிப்பவர்கள் அந்த சிறுவர்களுடன் அன்மர்ந்திருக்கிறார்கள்.
தாய்லாந்து குகை ஒன்றில் காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளர் ஒருவருக்கும் பத்து நாட்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும், உணவும் வழங்கப்பட்டுள்ளன.

காணாமல் போன 12 சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தேடுதல் பணிக்கு பிறகு 13 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.
"சிறுவர்களை மீட்பதில் அவசரம் காட்டப்போவதில்லை. அவர்களை வெளியேற்றுவதில் ஆபத்தற்ற முறையை கையாளுவோம்" என சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர்களை பழைய நிலைக்கு கொண்டுவரவும் அவர்களின் உடல்நலத்தை பரிசோதிக்கவும் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் உட்பட முக்குளிப்பவர்கள் 7 பேர் சிறுவர்களுடன் இருப்பதாகவும் சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், குகையில் நீர் மட்டம் அதிகரிப்பதால் ஒன்று அந்த சிறுவர்கள் நீருக்கடியில் நீந்தக் கற்கவேண்டும் அல்லது நீர் வடியும் வரை சில மாதங்கள் அங்கேயே காத்திருக்கவேண்டும் என்று தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மீட்புப் பணிக் குழுவினர் உயரும் நீர் மட்டத்தில் போராடி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு உணவும் மருந்தும் கொண்டு சென்றனர். இன்னும் குறைந்தது நான்கு மாதங்களுக்கு அவர்களுக்கு அங்கேயே உணவு சப்ளை செய்யப்படும் என்று ராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக, காணாமல் போன சிறுவர்கள் குறித்த செய்தி நாட்டையே உலுக்கியது; மேலும் அந்நாட்டு மக்கள் அவர்களை காப்பாற்ற மிகப்பெரியளவில் ஆதரவுக் கரம் நீட்டினர்.
அதிகரித்த நீரின் அளவு மற்றும் சேற்றின் காரணமாக தேடுதல் பணி தாமதமடைந்தது.
11-16 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவர்கள் தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க ஜூன் 23 அன்று உள்ளே சென்றனர்.
12 சிறுவர்களும் மூ-பா அல்லது காட்டுப்பன்றி என அழைக்கப்படும் கால்பந்து குழுவை சேர்ந்தவர்கள்.
அவர்களுடன் சென்ற 25 வயது துணை பயிற்சியாளர் இரண்டு வருடத்திற்கு முன்பும், அந்த சிறுவர்களை அந்த குகைக்கு அழைத்து சென்றிருந்தார்.
அந்த குழுவின் தலைமை பயிற்சியாளர், அந்த சிறுவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தொழில்முறை கால்பந்து வீரர்களாக வேண்டும் என்று விரும்பியதாகவும், அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுச் செல்ல மாட்டார்கள் என்று நம்புவதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

"அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் இந்த பணி இன்னும் நிறைவு பெறவில்லை" என சியாங் ராய் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
"எங்களது பணி, சிறுவர்களை தேடுவது, மீட்பது மற்றும் அழைத்து வருவது. இதுவரை நாங்கள் அவர்களை கண்டறிந்துள்ளோம். அடுத்த பணி அவர்களை குகையில் இருந்து வெளியே கொண்டு வந்து வீட்டிற்கு அனுப்புவது" என ஆளுநர் தெரிவித்தார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
குகையிலிருந்து நீரை வற்ற வைத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளே அனுப்பி சிறுவர்களின் உடல் நலத்தை சோதனை செய்யப்போவதாக தெரிவித்த ஆளுநர், சிறுவர்களின் உடல் நலம் அவர்களை வெளியே கொண்டு வரும் அளவிற்கு வலிமையாக இருந்தால் குகையிலிருந்து வெளியே கொண்டு வரப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும், "சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வரை அவர்களை கண்காணிப்போம்" என்றும் ஆளுநர் தெரிவித்தார்.
மீட்புப் பணியில் பிரிட்டன் வல்லுநர்கள்
தாய்லாந்து குகையில் கடந்த ஒன்பது நாட்களாக சிக்கித் தவிக்கும் தாய்லாந்தை சேர்ந்த 12 இளம் கால்பந்து வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரின் குரல் முதல் முறையாக கேட்கப்பட்டுள்ளதாக பிரிட்டனை சேர்ந்த குகை மீட்பு வீரரான ஜான் வொலந்தன் கூறியுள்ளார்.
குகையிலுள்ள சிறுவர்களிடம், "நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள்?" என்று கேட்டதற்கு, "பதின் மூன்று பேர்" என்று பதிலளித்தனர்.
அதாவது, இதன் மூலம் கடந்த ஒன்பது நாட்களாக குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை மீட்கும் பணியில் உதவுவதற்கு பிரிட்டனை சேர்ந்த குகை மீட்பு வீரர்கள் ஜான் வொலந்தன், ரிச்சர்ட் ஸ்டாண்டின் மற்றும் குகை வல்லுநரான ராபர்ட் ஹார்ப்பர் ஆகியோரை தாய்லாந்து மீட்புக் குழு அழைத்தது.

பட மூலாதாரம், AFP
மூன்று பேர் கொண்ட இந்த குழுவினர் சிறுவர்கள் குகையில் காணாமல் போன மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு தாய்லாந்திற்கு வந்தனர். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,000திற்கும் மேற்பட்டோர் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரிட்டனின் குகை மீட்பு கழகம், தங்களது அமைப்பை சேர்ந்த குகை மீட்பு மற்றும் முக்குளித்தல் வீரர்கள் இதுவரை பல்வேறு குகைகளை ஆய்வுசெய்துள்ளதாக கூறியுள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரிட்டனின் கோடைகால நேரத்தின்படி சுமார் 16:30 மணியளவில், 12 சிறுவர்கள், அவர்களின் பயிற்சியாளர் குகையிலுள்ள ஒரு உலர்ந்த காற்று நிறைந்த பகுதியில் இருக்கும் செய்தி கிடைக்கத் தொடங்கியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"சிறிது நேரத்தில், எங்களது குகை மீட்பு வீரர்களிடமிருந்து, குகையில் தொலைந்துபோன சிறுவர்கள் உயிருடன் இருக்கும் உற்சாகரமான செய்தி கிடைத்தது."
பிரிட்டனை சேர்ந்த குகை மீட்பு வீரர்கள் ஜான் வொலந்தன், ரிச்சர்ட் ஸ்டாண்டின் ஆகியோர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு பிரிட்டனின் குகை மீட்பு கழகம் மறுத்துள்ளது.

சரி, இந்த குகையில் சிக்கியுள்ள 12 வீரர்களையும் அவர்களது பயிற்சியாளரையும் எந்தெந்த வழிகளில் மீட்கலாம்?

இரண்டுவழிகள் இருக்கிறது என்கிறாகள் மீட்புத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். அதாவது, முக்குளித்தல் (Diving), துளையிடுதல் முறை (Drilling) ஆகிய வழிகளில் குகையில் சிக்கி உள்ளவர்களை மீட்கலாம்.
முக்குளித்தல்
அமெரிக்க குகை மீட்பு ஆணையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அன்மர் மிர்ஸா, "முக்குளித்தல் முறையில் அந்த குகையில் சிக்கி உள்ளவர்களை விரைவில் மீட்டுவிடலாம். ஆனால், அது ஆபாத்தானதும் கூட" என்கிறார்.
தாய்லாந்து கப்பற்படையை சேர்ந்த முக்குளிப்பவர்கள், பிரிட்டன் குகை சிக்கியவர்களை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற மூன்று பேர் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் என பலர் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்கள் மட்டுமல்லாமல், சீனா, மியான்மர், லாவோஸ் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மீட்பு பணியில் பங்கெடுத்துள்ளார்கள்.

பட மூலாதாரம், AFP/ROYAL THAI NAVY
மிகவும் திறமைவாய்ந்த தொழில்முறை முக்குளிப்பவர்களுக்கு, குகையில் சிக்கி உள்ளவர்களை நெருங்க இன்னும் பல மணி நேரம் தேவை. இதற்கிடையே அந்த குகையில் உள்ள நீரையும் வெளியேற்ற வேண்டும்.
இந்த முறை மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமானது என்கிரார் சர்வதேச ஆழ்கடல் குகை மீட்பு அமைப்பை சேர்ந்த எட் சோரின்சன். மேலும் அவர், "இந்த முறையை கடைசி வாய்ப்பாகதான் பயன்படுத்த வேண்டும்" என்கிறார்.

பட மூலாதாரம், AFP/ROYAL THAI NAVY
அடர்த்தியான இருட்டில் சிக்கி உள்ளவர்கள் பயத்தில் தங்களை தாங்களே மாய்த்துக் கொள்ளவும் சில சமயம் முக்குளித்து மீட்பவர்களை கொல்லவும் வாய்ப்பு உள்ளது என்கிறார் எட்.
துளையிடும் முறை
இதுபோன்று குகையில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் இன்னொரு வழி, 'துளையிடுதல்'. அதாவது குகையை துளையிட்டு தண்ணீரை வெளியே இறைத்து அவர்களை மீட்கலாம்.

பட மூலாதாரம், EPA
ஆனால், இதற்கும் அதிக நேரம் பிடிக்கும். துளையிடும் இயந்திரங்களை குகையில் மேல் பொருத்த அதற்கான கட்டுமான அமைப்பை முதலில் ஏற்படுத்த வேண்டும்.
அமெரிக்க குகை மீட்பு ஆணையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அன்மர் மிர்ஸா, "இது முறை மேலோட்டமாக சுலபமானது போல தோன்றினாலும், உண்மையில் இது மிகவும் கடினமான ஒரு வழி" என்கிறார்.
"நாம் குகையில் துளையிடுவதற்கு முன்பு, அந்த குகை குறித்து முழுமையான புரிதல் வேண்டும். அந்த குகை குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறாக இல்லாமல், துளையிட தொடங்குவோமானால், தவறான இடத்தில் துளையிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் மிர்ஸா.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














