இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் தகர்த்துவிட்டதா?

டி20 உலகக் கோப்பை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Indranil MUKHERJEE / AFP via Getty Images

படக்குறிப்பு, ஜிம்பாப்வே அணியின் விக்கெட் வீழ்த்தப்பட்டதைக் கொண்டாடும் ஷிம்ரான் ஹெட்மையர் மற்றும் அகேல் ஹொசைன்.
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மும்பை வான்கடே மைதானத்தில் திங்கட்கிழமை ( பிப்ரவரி 23 ) நடைபெற்ற ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி வீரர்கள் விளாசிய அதிகப்படியான சிக்ஸர்களும், பவுண்டரிகளும் மைதானத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்வித்தன.

வெஸ்ட் இண்டீஸின் ஆட்டத்தை ரசித்தவர்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இருந்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் விளாசிய ஒவ்வொரு பந்தும் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு கடினமான பாதையை உருவாக்கும் என்பதை அவர்கள் எண்ணி இருக்க மாட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்களை எடுத்தது. இது டி20 ஆடவர் உலகக்கோப்பை வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். 2007ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இலங்கை 6 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்திருப்பது டி20 கிரிக்கெட்டின் அதிகபட்ச ரன்களாக நீடிக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது கடினமாகிவிட்டது.

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1 நிலவரம்

சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-இல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் உள்ளன.

நான்கு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தியா மற்றும் ஜிம்பாப்வே தோல்வியடைந்துள்ளன.

வெஸ்ட் இண்டீஸ் அணி 5.35 என்ற நிகர ரன் ரேட்டுடன் (NRR) அந்தக் குழுவில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது, அதன் நிகர ரன் ரேட் 3.80 ஆகும்.

இந்தியா -3.80 என்ற நிகர ரன் விகிதத்துடன் மூன்றாவது இடத்திலும், ஜிம்பாப்வே -5.35 நிகர ரன் விகிதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் முன்னுள்ள சவால்

டி20 உலகக் கோப்பை, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே

பட மூலாதாரம், Nikhil Patil/Getty Images

படக்குறிப்பு, ஷிம்ரான் ஹெட்மயர் 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்தார்.

சூப்பர் 8 சுற்றில் குரூப் ஒன்றில் இந்தியாவுக்கு தற்போதுள்ள ரன் ரேட் அதன் பாதையை மிகவும் கடினமாக்கியுள்ளது.

இந்தியா அடுத்தடுத்து விளையாடும் இரண்டு ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளையும் வெற்றி பெறுவது மட்டும் போதாது. மற்ற காரணிகளும் சாதகமாக இருந்தால் மட்டுமே இந்தியாவால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, "ஆமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்தால் மட்டுமே இந்தியா அரையிறுதிக்கு வர முடியும். ஆனால் தென்னாப்பிரிக்கா தோற்றால், ஜிம்பாப்வே தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டிய நிலை ஏற்படும்" என்று கூறுகிறார்.

"ஏனென்றால், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு அதில் எந்த வாய்ப்பும் இல்லை, ஏனெனில் இந்தியா நிகர ரன் விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இந்த தொடரில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக செயல்பட்டாலும், தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவது அவர்களுக்கு கடினமானதாக இருக்கும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் நம்புகின்றனர்.

அதேநேரத்தில், வெஸ்ட் இண்டீஸின் தற்போதைய ஆட்டத்தை கருத்தில் கொண்டால், தென்னாப்பிரிக்கா அவர்களைத் தோற்கடிப்பது எளிதானதல்ல. இந்தத் தொடர் முழுவதும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி ஸ்காட்லாந்தை 35 ரன் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 30 ரன் வித்தியாசத்திலும், நேபாளத்தை 9 விக்கெட் வித்தியாசத்திலும், இத்தாலியை 42 ரன் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயை 107 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்துள்ளனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"வெஸ்ட் இண்டீஸ் அனைவருக்கும் மிகவும் வலுவான செய்தியை அனுப்புகிறது" என்று கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்லே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

விளையாட்டுப்பிரிவு பத்திரிகையாளர் விக்ராந்த் குப்தா, "இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்கா வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தினால், இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆனால் மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெல்லும் நிலை வந்தால், இந்தியா நிகர ரன் விகிதத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும், அதனால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எனவே, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தால், இந்தியா வெளியேறும் ஆபத்து இன்னும் அதிகரிக்கும். இதன்மூலம், மீதமுள்ள இரண்டு சூப்பர்-8 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றாலும், மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தனது முதல் சூப்பர் 8 போட்டியில், இந்தியா தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் விளைவாக இந்தியாவின் நிகர ரன் ரேட் -3.80 ஆக உள்ளது. இந்த மிகப்பெரிய தோல்வி இந்திய அணியை ஒரு நெருக்கடியான நிலையில் தள்ளியுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதியில் இந்தியா இடம் பெறுவதை உறுதி செய்ய முடியாது. தனது குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகள் ஆடும் போட்டிகளின் முடிவைப் பொருத்தே இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இறுதியாகும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு