தனது முதல் திரைப்படத்துக்காக `பத்வா` விதிக்கப்பட்ட பெண் இயக்குநர்..!

`சில விஷயங்கள் குறித்து தனது படத்தில் கூற விரும்பியதாகவும், அதனை தற்போது சாதித்துவிட்டதாகவும் ` பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 35 வயதான மேசலூன் ஹமவுட் என்ற பெண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

`இன் பெட்வீன்` திரைப்படத்தில் நடித்துள்ள சனா ஜம்மேலியா, ஷடென் கன்பெளரா மற்றும் மெளனா ஹவா.

பட மூலாதாரம், Yaniv Berman

படக்குறிப்பு, `இன் பெட்வீன்` திரைப்படத்தில் நடித்துள்ள சனா ஜம்மேலியா, ஷடென் கன்பெளரா மற்றும் மெளனா ஹவா.

தனது முதல் படத்திற்காக அவருக்கு பத்வா (இஸ்லாமிய சட்டம்) விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், கொலை மிரட்டல்களும் வந்துள்ளன.

இஸ்ரேலிலுள்ள டெல் அவிவ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் மூன்று இளம் அரபு பெண்கள் குறித்த இந்த திரைப்படம், பிரிட்டனில் இந்த மாதம் வெளியாக உள்ளது.

தங்களுடைய குடும்ப பாரம்பரிய கட்டுப்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு,சுதந்திரமாக வாழும் இடைப்பட்ட நாள்களில் தங்களின் சுய அடையாளங்களை கண்டெடுக்கும் மூன்று பெண்கள் குறித்த திரைப்படம் இது.

``உண்மையில் கூற வேண்டுமென்றால், இந்த கதையை எழுதும் போது நான் எந்த எதிர்பார்ப்பும் வைத்திருக்கவில்லை. ஆனால் இது இவ்வளவு பெரியதாக இருக்கும் எனவும் நான் நினைக்கவில்லை.`` என இயக்குநர் ஹமவுட் கூறுகிறார்.

``இந்த கதையில் உள்ள கதாபாத்திரங்களை எழுதும் போது, இவை எளிதில் கடந்து செல்லக் கூடியதாக இருக்காது என்பது எனக்கு தெரியும்.ஆனால் அதற்கு இவ்வளவு எதிர்வினை இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை.``

இரவு விடுதிகள்,போதை மருந்து, ஓரினச் சேர்க்கை குறித்த காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், Yaniv Berman

படக்குறிப்பு, இரவு விடுதிகள்,போதை மருந்து, ஓரினச் சேர்க்கை குறித்த காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.

அந்த திரைப்படத்தின் வரும் கதாபாத்திரங்கள் இவர்கள்தான்: முதலாவதாக, பாரம்பரியமிக்க திருமணத்தை எதிர்நோக்கியிருக்கும் இளம்பெண் நூர். ஆனால் அவரது மணமகன் போலி மதவாதி என்பது தெரியவருகிறது. இரண்டாவதாக, டி.ஜேவாக பணிபுரியும் கனவை கொண்டிருக்கும் சல்மா.தான் ஒரு திருநம்பி என்பதை தனது வீட்டில் சொல்ல முடியாமல் தவிப்பவர் அவர். மூன்றாவதாக, வழக்கறிஞரான லைலா. தன்னைப் போலவே தனது கணவர் தாராள மனம் கொண்டவராக, சுதந்திர உணர்வு கொண்டவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆனால் அதில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

`ஆத்திரமூட்டும் செயல்`

இரவு விடுதிகள், போதை மருந்து உபயோகப்படுத்துவது மற்றும் ஓரினச் சேர்க்கை ஆகியவை குறித்த காட்சிகள், இதற்கு முன்னர் எந்த பாலஸ்தீன திரைப்படங்களிலும் இடம்பெற்றதில்லை என்பதை இயக்குநர் ஒப்புக் கொண்டுள்ளார். தன் மீதும், தனது படத்தில் நடித்த நடிகைகள் மீதும் தீவிர பழமைவாதிகளிடமிருந்து எழுந்த வன்முறை மிரட்டல்கள் குறித்து ஆரம்பத்தில் பயந்தாலும், தற்போது தன் திரைப்படத்தின் பக்கம் உறுதியாக நிற்பதாக கூறுகிறார் இயக்குநர் ஹமவுட்.

``வலுவான எதிர்வினை வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். சில வழக்கமான விஷயங்களை தவிர்த்துவிட்டு, புதிய விஷயங்களை திரையில் காட்ட வேண்டியது அவசியம்.மக்கள் பார்க்க விரும்பும் ஒன்றை நாம் தொடர்ந்து உருவாக்கி வந்தால், அது கலை அல்ல. அது சினிமாவும் அல்ல``

தனது படத்தின் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ள இயக்குநர் மேசலூன் ஹமவுட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது படத்தின் பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டுள்ள இயக்குநர் மேசலூன் ஹமவுட்

``எனது சமூகத்தை முன்னேற்ற வேண்டிய வேலை எனக்கு இருப்பதாகவே நினைக்கிறேன். ஒரு கலைஞனுக்குரிய சாரம் என்பது மாற்றத்தை கொண்டு வருவதுதான்.``

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் பாலஸ்தீன பெற்றோர்களுக்கு பிறந்தவர் ஹமவுட். ஆனால் தற்போது இஸ்ரேலில் உள்ள ஜஃபா நகரில் வசித்து வருகிறார். 1982-ஆம் ஆண்டு பெய்ரூட் போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட `சென்ஸ் ஆஃப் மார்னிங்` என்ற இவரது முதல் குறும்படம், ஒரு சிறந்த அரசியல் படம் என்ற விமர்சனத்தை பெற்றது.

`இது வெட்கப்பட வேண்டிய ஒன்று`

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நூர் என்ற கதாபாத்திரம் பிறந்த வளர்ந்ததாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்,வடக்கு இஸ்ரேலில் உள்ள பழமைவாத அரபு நகரான `உம்-அல்-பாஹ்ம் பகுதியில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நகரின் மேயர்தான் தனது படத்திற்கு முதன் முதலாக தடை விதித்தவர் என ஹமவுட் தெரிவித்துள்ளார்.

`பாலஸ்தீனத்தில் உள்ள சினிமாவில் தற்போது வரை பல புதிய கதை வடிவங்கள் திரைப்படங்களாக எடுக்கப்படுவதில்லை` எனக்கூறும் அவர், தன்னுடைய படம் வெளியான போது, அது ஆவணப்படமா? அல்லது கற்பனை படமா? என பல குழப்பங்கள் இங்கு ஏற்படும் என நினைத்ததாக கூறியுள்ளார்.

``இது உண்மையான வாழ்க்கை குறித்த படம் என நினைத்து சிலர் பார்க்கலாம் என நினைக்கிறேன். ஆனால் எப்போது உள்ளூர் தலைவர்கள் இந்த படத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தார்களோ, அப்போதே திரையரங்குகளில் எனது படத்தை திரையிடாமல் தடை செய்தனர். மேலும் எனது படத்தை ஹராம் என கூறியதோடு, எனக்கு `பத்வா`-வும் விதித்தனர். அதன் பின்னர் எங்களுக்கு கொலை மிரட்டல்கள் வரத் துவங்கியது. கடந்த சில வாரங்களாக வரும் மிரட்டல்களை பார்க்கும் போது , சற்று அச்சமாகத்தான் உள்ளது.``என ஹமவுட் கூறுகிறார்.

இந்த படத்தில் சல்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சனா ஜம்மேலியா, பாலஸ்தீனத்தின் முதல் டி.ஜே ஆவார்.

பட மூலாதாரம், Yaniv Berman

படக்குறிப்பு, இந்த படத்தில் சல்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சனா ஜம்மேலியா, பாலஸ்தீனத்தின் முதல் டி.ஜே ஆவார்.

``உங்களுக்கு தெரியுமா.. இவற்றினால் என் படத்திற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. இந்த படத்தில் அப்படி என்னதான் தவறு இருக்கிறது என்பதை அறிவதற்காக பலர் எனது படத்தை பார்க்க வந்தனர். இதன் காரணமாக எனது படம் மாதக்கணக்கில் ஓடியது. ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து எனக்கு சிறந்த வரவேற்பு கிடைத்தது.``

இதற்கிடையில் `இஸ்ரேல் ஆஸ்கர்` என அழைக்கப்படும் `ஓஃபிர்` விருதுக்காக 12 பிரிவுகளில் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் `சிறந்த இளம் திறமையாளர்` என்ற பிரிவில் அவருக்கு விருதளிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அளித்த இசபெல்லா ஹப்பெர்ட், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று கதாபாத்திரங்களும் `தற்காலத்தின் கதாநாயகிகள்` என வர்ணித்தார்.

இந்த மூன்று கதாபாத்திரங்களும், தன்னையோ தனது தோழிகளையோ பிரதிபலிக்கவில்லை எனக் கூறும் மேசலூன் ஹமவுட், இந்த கதாபாத்திரங்கள் சமுதாயத்தில் இதுவரை பேசப்படாத விஷயங்களை பிரதிபலிக்கிறது என தெரிவிக்கிறார்.

`` இதுவரை கண்ணுக்கு தெரியாமல் இருக்கக் கூடிய பெண்கள், தங்களது குரலை எழுப்பியிருக்காத பெண்கள் ஆகியோரை இந்த மூன்று கதாபாத்திரங்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இறுதியாக, இந்த படம் குறித்து மக்கள் பேசத் துவங்கியுள்ளனர்.அதில் எனக்கு மகிழ்ச்சிதான்.`` என்கிறார் ஹமவுட்.

இந்த திரைப்படம் பிரிட்டனில் வரும் செப்டம்பர் 22-ஆம் தேதி வெளியாக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :