தாடியை மழிப்பது தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய ஃபத்வா

இந்தியாவின் முன்னணி இஸ்லாமிய மதப் பள்ளிகளில் ஒன்று எனக் கருதப்படும் தாருல் உலூம் தியோபந்த், விடுத்துள்ள ஃபத்வா எனப்படும் மத அறிவுறுத்தல் ஒன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சவரக்கடையில் தாடியை மழித்துக் கொள்ளும் ஒருவர்

பட மூலாதாரம், Getty

படக்குறிப்பு, சவரக்கடையில் தாடியை மழித்துக் கொள்ளும் ஒருவர்

முடிதிருத்தும் நிலையங்களை வைத்துள்ளவர்கள் தமது கடைகளுக்கு வரும் இஸ்லாமியர்கள் தாடியை மழிக்கச் சொன்னால் அதைச் செய்யலாமா, இஸ்லாமியர்கள் தாடியை மழிக்கலாமா என்பது குறித்து விளக்க வேண்டும் என உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் நாவிதர்கள், அந்த மதப் பள்ளியின் அறிஞர்களிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு தாருல் உலூம் தியோபந்த் இஸ்லாமியர்கள் தாடி வைத்திருக்க வேண்டும் அதை மழிக்க்க் கூடாது என்று கூறியதை அடுத்து, அந்த அறிவுறுத்தலை பலர் தமது சலூன்களில் ஒட்டிவைத்துள்ளனர்.

"ஃபத்வா கட்டளை இல்லை"

தாருல் உலூம் தியோபந்த் போன்ற முஸ்லிம் மதப் பள்ளிகளால் விடுக்கப்படும் ஃபத்வா என்பது மதத் தீர்ப்பே என்றும் அது மதக் கட்டளை இல்லை என தமிழகத்தின் மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ஜவாஹிருல்லா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மத விஷயங்கள் தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, அப்படியான அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறுவது வழக்கமான ஒன்றே என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் அதேவேளை ஒரே விஷயம் அல்லது சந்தேகங்களுக்கு பல மதப்பள்ளிகள் மாறுபடும் விதத்திலும் தீர்ப்புகள் அளித்துள்ளன என்று குறிப்பிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லா, தாடி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது இஸ்லாத்தின் ஒரு வழிமுறையே தவிர கட்டாயம் அல்ல என்றும் கூறினார்.