ஆபாச நடிகை வழக்கு: ட்ரம்ப் தவறிழைத்தது எங்கே? 7 கேள்விகளில் எளிய விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் உடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ட்ரம்புடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறிய ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு 2016 பிரசாரத்தின்போது பணம் கொடுத்த விவகாரத்தை மையப்படுத்திய இந்த வழக்கின் பின்னணி குறித்த கீழ்க்காணும் 7 கேள்விகள் நமக்குப் புரிதலை வழங்கும்.
ட்ரம்ப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை (indictment) என்ன?
கடந்த வியாழக்கிழமை டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்த கிராண்ட் ஜூரி எனப்படும் மக்கள் பிரதிநிதிகள் குழு வாக்களித்தது.
இதன் பொருள் என்னவென்றால் குற்றம் இழைத்ததாக நம்பப்படும் நபருக்கு எதிராக வழக்கறிஞர்களால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
குற்றப்பத்திரிகை ஆவணத்தில் குற்றச்சாட்டு பற்றிய அடிப்படைத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ட்ரம்பின் வழக்கில் ஒன்று அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் குற்றங்களும் உள்ளன.
வழக்கறிஞரால் சுமத்தப்படும் வழக்கமான குற்றச்சாட்டுகளைப் போல் அல்லாமல், கிராண்ட் ஜூரியின் ரகசிய வாக்கெடுப்பு மூலம் indictment என்ற இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். டிரம்ப் வழக்கில் நியூயார்க்கின் மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கிராண்ட் ஜூரி என்பது ஒரு வழக்கில் சாட்சியங்களைக் கேட்டு, ஒரு நபர் மீது குற்றம் சாட்டப் போதுமான ஆதாரம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும் குடிமக்களின் குழு.
ட்ரம்ப் மீண்டும் கைதாக வாய்ப்புள்ளதா?

பட மூலாதாரம், Reuters
கைது செய்யப்படுவது என்பது எல்லா நேரங்களிலும் குற்றப்பத்திரிகையின் அடுத்த நடவடிக்கையாக இருப்பதில்லை.
ஆனால், வழக்கறிஞர்கள் ட்ரம்பின் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்ட பின்னர், பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், அடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
'பெர்ப் வாக்' என்றால் என்ன?
நியூயார்க் நீதிமன்றத்தில் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக, நீதிமன்றத்திற்கு வெளியே கேமரா மற்றும் மைக்குகளுடன் திரண்டிருக்கும் செய்தியாளர்களை அவர் கடந்து சென்றதையே அமெரிக்காவில் பெர்ப் வாக் என்று அழைக்கின்றனர்.
சில சந்தேக நபர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்படுவர், மற்றவர்கள் சுதந்திரமாக வர அனுமதிக்கப்படுவர்.
பெர்ப் வாக்கின்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட அந்த வழக்கின் மறக்க முடியாத தருணங்களாக இருக்கும்.
முன்னாள் ஹாலிவுட் பிரபலம் ஹார்வி வெய்ன்ஸ்டீன் இரண்டு பெண்கள் தொடர்பான பாலியல் வல்லுறவு மற்றும் தண்டனைக்குரிய பாலியல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவர் கைவிலங்குகளுடன் நியூயார்க் காவல்துறை கட்டடத்திற்குள் பெர்ப் வாக் வந்தார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மீடூ குற்றச்சாட்டு விவகாரத்தை ஒட்டிய முக்கிய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மற்றொரு பிரபலத்தின் பெர்ப் வாக், முன்னாள் ஐஎம்எஃப் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், பாலியல் வன்கொடுமை மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு அழைத்துவரப்பட்டது நடந்தது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் அவர் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் வியர்த்து களைத்துப்போய் காணப்படுவார். பின்னர் அவர் தன்னை கைவிலங்கிட்டு செய்தியாளர்கள் முன் அழைத்து வந்தது நியாயமற்ற செயல் எனப் புகார் செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
'’வழக்கில் தண்டிக்கப்படும்வரை நீங்கள் அப்பாவியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என்று தெரியாத போது மற்றவர்கள் முன் நீங்கள் குற்றவாளியாக அழைத்து வரப்படுகிறீர்கள்,’’ என்று 2013ஆம் ஆண்டு சிஎன்என் அமெரிக்க ஊடகத்திடம் டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் தெரிவித்தார்.
பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் வழக்கறிஞர்களால் கைவிடப்பட்டன. எனினும், ஐஎம்எஃப்-ல் தனது வேலையில் இருந்து அவர் விலகினார்.
ட்ரம்ப்பிற்கு நெருக்கமான சிலரும் பெர்ப் வாக் செய்துள்ளனர்.
விசாரணை எப்படி இருந்தது?
நீதிபதி முன்பு ட்ரம்ப் ஆஜரான போது, அவர் மீதான குற்றச்சாட்டுகள் முதன்முறையாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன.
விசாரணைக்குப் பிறகு, அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சொந்த ஜாமீன் என்பது நீதிமன்றத்திற்கு மீண்டும் விசாரணைக்கு வருவேன் என்று உறுதியளிப்பதை அடிப்படையாக வைத்து வழங்கப்படும்.
ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு என்ன?
ட்ரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு தன்னுடைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
பணம் கொடுத்தது சட்டவிரோதமானது அல்ல. ஆனால் கோஹனுக்கு பணத்தைச் செலுத்தியதை சட்டக் கட்டணமாக டிரம்ப் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தன்னுடைய கணக்கு விவரங்களில் டிரம்ப் பொய் சொல்வதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Reuters
மேலும், மாடல் கரேன் மெக்டௌகலுக்கும் கணிசமாக பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவரும் டிரம்புடன் தனக்கு தொடர்பு இருந்ததாகக் கூறியவர்.
மற்ற குற்றச்சாட்டுகள் என்ன?
2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி டிரம்ப் நிகழ்த்திய உரைக்குப் பிறகு அவரது ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். இந்தத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை ட்ரம்ப் எதிர்கொள்வாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ட்ரம்பின் ஃப்ளோரிடா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் மீதான விசாரணை தொடர்பான குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படலாம்.
ஜோ பைடனின் 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவை மாற்ற ஜார்ஜியாவில் உள்ள அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததற்காகவும் டிரம்ப் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
2024 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட முடியுமா?
இந்தக் குற்றப்பத்திரிகையோ அல்லது அதன் மீதான தண்டனையோ ட்ரம்ப் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்காது.
அமெரிக்க அரசமைப்பின்படி, ஒருவர் அதிபராக இருக்க அவர் குற்றமற்றவராக இருக்க வேண்டிய அவசியமில்லை.
"ஒரு குற்றத்திற்காக குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட வேட்பாளர், அதிபர் பதவிக்கு பிரசாரம் செய்வதையோ அல்லது அதிபராக பதவியில் இருப்பதையோ அமெரிக்க சட்டம் தடைசெய்யவில்லை.
சிறையில் இருந்தும்கூட ஒருவரால் பிரசாரம் செய்யவும் அதிபராகச் செயல்படவும் முடியும்" என்கிறார் பிபிசி வட அமெரிக்க நிருபர் அந்தோனி ஸர்ச்சர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












