'அண்ணா, எம்ஜிஆர் பெயரை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்' - விஜய் பேசியது என்ன?

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, விஜய் உரையாற்றி முடித்த பிறகு செங்கோட்டையன் அவருக்கு செங்கோல் வழங்கினார்
    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்

ஈரோடு பெருந்துறையில் இன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்திற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பொதுக்கூட்டம் என்று கூறப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட தலைவர்கள் பேசுவதற்கு மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.

மக்கள் அமருவதற்கு நாற்காலிகளும் போடப்படவில்லை. பரப்புரை பேருந்தில் நின்று விஜய் பேசுவதை, தடுப்புகளுக்குள் நின்று மக்கள் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்தப் பொதுக் கூட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த தவெக தலைவர் விஜய் அங்கிருந்து கார் மூலம் பெருந்துறை நோக்கிச் சென்றார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் தவெக பொதுக்கூட்டம் என்பதால், கூட்ட நெரிசல் எதுவும் ஏற்படாத வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் 72 பிரிவுகளாகப் பிரித்து மக்கள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த 60 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

விஜய் பேசியது என்ன?

பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்குள் விஜய் நுழைவதற்கு முன்பாக தவெக நிர்வாகிகள் பேசினர். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, அதாவது பிற்பகல் 1 மணிக்குள் விஜய் தனது உரையை முடித்தார்.

அவர் பேசுகையில், "நீங்கள் எனக்கு தைரியம் கொடுத்திருக்கிறீர்கள். அதைப் பறிப்பதற்கு ஒரு கூட்டம் முயன்று கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்
படக்குறிப்பு, கோவை விமான நிலையம் வந்தடைந்த நடிகர் விஜய்

"பெரியார் நமது கொள்கைத் தலைவர், அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட அண்ணா மற்றும் எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்துக் கொண்டோம். அவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் சொத்து, அவர்களின் பெயர்களை எடுத்துக் கொள்ளக் கூடாது என யாரும் கூற முடியாது. பெரியாரின் பெயரை சொல்லிக் கொண்டு கொள்ளை அடிக்காதீர்கள்" என்றார்.

மேலும் அவர், "நாங்கள் யார் எதிரிகள் எனக் கூறிக் கொண்டு களத்திற்கு வந்துள்ளோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதிலும் இங்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் யார் களத்தில் இருக்கிறார்களோ அவர்களைத்தான் எதிர்ப்போம்" எனக் கூறினார்.

ஈரோடு மாவட்ட பிரச்னைகளைக் குறிப்பிட்ட அவர்," அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் மூன்று மாவட்ட மக்கள் பயனடைவார்கள். ஆனால் அதை ஏன் செய்வதில்லை. இவர்கள் அரசாங்கம் நடத்துகிறார்களா அல்லது கண்காட்சி நடத்துகிறார்களா எனத் தெரியவில்லை" என்றார்.

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்

"திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஈரோட்டின் மஞ்சளுக்கும் மஞ்சள் விவசாயத்திற்கும் திமுக இதுவரை எதுவும் செய்யவில்லை " என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய விஜய், "எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்றார்கள். அதையே நானும் கூறுகிறேன். திமுக தீய சக்தி, தவெக தூய சக்தி. தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் இடையில்தான் போட்டி. மக்கள் சக்தியான தவெக-வால்தான் திமுகவை வீழ்த்த முடியும்.

செங்கோட்டையன் நம்முடைய கட்சியில் இணைந்திருப்பது நமக்கு பலம். அவரைப் போல மேலும் பலர் நமது கட்சியில் சேரவுள்ளார்கள். அவர்களுக்கு உரிய அங்கிகாரம் கொடுக்கப்படும்" என்று குறிப்பிட்டார்.

விஜய் உரையாற்றி முடித்த பிறகு செங்கோட்டையன் அவருக்கு செங்கோல் வழங்கினார்.

பொதுக் கூட்டத்திற்கு 84 நிபந்தனைகள்

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்துக்குப் பின்பு, தமிழகத்தில் பொதுக் கூட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் விஜய் பங்கேற்கவில்லை. உள்ளரங்கங்களில் நடந்த கட்சி நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்றார்.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதியன்று புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விஜய் பேசினார். ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படவில்லை.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின், இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் என்ற பகுதியில் நடந்த தவெக பொதுக் கூட்டத்தில்தான் விஜய் பங்கேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்திற்கு அனுமதியளிப்பதற்கு காவல்துறை 84 நிபந்தனைகளை விதித்திருந்தது. இன்று காலை 11 மணிக்குத் துவங்கி பிற்பகல் 1 மணியளவில் இந்தக் கூட்டம் நிறைவுபெற்றது.

பொதுக்கூட்டம் நடைபெற்ற இந்த இடம், கோவை–சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியை ஒட்டியே அமைந்துள்ளது. கொங்கு குறுப்பு நாட்டு படைத்தலை வேளாளர் சங்கம் என்ற அமைப்புக்குச் சொந்தமான விஜயமங்கலம் ஸ்ரீவிஜயபுரி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் இந்தப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்
படக்குறிப்பு, பெண்களுக்குத் தனி இடங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், ''கரூர் துயர சம்பவத்துக்குப் பின்பு விஜய் பங்கேற்கும் முதல் திறந்தவெளி நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதல் கவனத்துடன் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. 60 ஏக்கர் பரப்பளவில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்குமே நெரிசல் ஏற்படாத வகையில் பல்வேறு நுழைவாயில்களும் வெளியில் செல்வதற்கான வழிகளும் போதியளவில் அமைக்கப்பட்டுள்ளன'' என்றார்.

''குடிநீர் வசதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, வரும் மக்கள் அனைவருக்குமே குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படவுள்ளது. அது தவிர்த்து 20 இடங்களில் குடிநீர்த் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. திடலின் வெளிப்பகுதிகளில் குடிநீர் லாரிகள் நிறுத்தப்பட்டு, ஒவ்வோர் இடத்திலும் 20 பேர் தண்ணீர் குடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது'' என்றும் தெரிவித்தார்.

35 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு: 1800 போலீசார் பாதுகாப்பு

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்

பொதுக் கூட்டத்தில் நிர்வாகிகள் 10 ஆயிரம் பேரும், பொது மக்கள் 25 ஆயிரம் பேரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்து, 2500 போலீசார் பாதுகாப்பு வழங்கக் கோரியிருப்பதாக அருண்ராஜ் கூறியிருந்தார்.

பொதுக்கூட்டம் நடந்த பகுதியில், இரும்புத் தடுப்புகளால் 72 பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் நடுப்பகுதியில் இடைவெளி விட்டு அங்கு பேருந்தில் நின்று விஜய் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக பிரத்தியேக மேடை எதுவும் அமைக்கப்படவில்லை. அதேபோன்று பொதுமக்கள் அமர்வதற்கு எங்குமே நாற்காலிகள் போடப்படவில்லை. மொத்தமுள்ள 72 தடுப்புகள் இருக்கின்ற பகுதிகள் ஒவ்வொன்றிலும் 500 பேர் நிற்க இடம் இருப்பினும் 400 பேரை மட்டுமே நிறுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.

ஈரோடு, தமிழ்நாடு, தமிழக வெற்றிக் கழகம், தவெக, விஜய், செங்கோட்டையன்

பொதுக் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தகவல் தெரிவித்த ஈரோடு மாவட்ட போலீஸ் அதிகாரிகள், மொத்தம் 1800 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு வழங்குவதற்காக 2 லட்சம் அரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

தவெகவினர் அளித்த தகவலின்படி, கூட்டத்தைக் கண்காணிப்பதற்காக 60 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதோடு, டிரோன் கேமராக்களை வைத்துக் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

மொத்தம் 58 மருத்துவர்களும், மருத்துவ உதவியாளர்களுடன் 14 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. பொதுக் கூட்டத்துக்கு வருவோரை உள்ளே அனுமதிப்பதற்குப் பிரதான வாயில் உள்பட 14 வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், ''எந்த வகையிலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். கூட்ட நெரிசல் எங்கேயும் ஏற்படாதவாறு விரிவான இடத்தில் இந்தப் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் வேறு கட்சிகளில் இருந்து யார் யார் சேர்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார்.

பொதுக் கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்து வரவேண்டாம்; முதியவர்கள், கர்ப்பிணிகள் வரவேண்டாம் என்று ஏற்கெனவே கட்சித் தலைமை அறிவித்திருப்பது குறித்து நினைவூட்டி பேசிய தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ், ''தலைவர் சொன்னதை அனைவரும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அவர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி வாயிலாக நேரலைகளில் தலைவர் விஜய் பேசுவதைப் பார்க்கலாம்'' என்று தெரிவித்திருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு