எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடு: செங்கோட்டையன் பேசியது என்ன? முழு விவரம்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். இதற்காக, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடுவை அவர் விதித்துள்ளார்.
செங்கோட்டையன் விதித்துள்ள காலக்கெடு அதிமுக, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அதுதொடர்பாக அடுத்தடுத்து பல தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
பன்னீர்செல்வம் வரவேற்பு
அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறிய கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.கவை தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை கட்சிக்காக செங்கோட்டையன் உழைத்து வருகிறார். பல்வேறு பிரச்னைகள் வந்தபோதும் இயக்கத்தையும் அனைத்து மக்களையும் அரவணைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்" எனக் கூறினார்.
"அ.தி.மு.க ஒருங்கிணைக்கப்பட்டால் தான் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலரும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்" எனக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், "அதற்காகத் தான் நாங்களும் போராடி வருகிறோம். அ.தி.மு.க உள்ள சக்திகள் பிரிந்திருப்பதால் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறோம். அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும்" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், UGC
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "கடந்த நான்கைந்து ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் அ.தி.மு.கவில் நீடித்து வருகிறது. இது தொண்டர்கள் இயக்கம். இங்கிருந்து யாராலும் தொண்டர்களை வெளியேற்ற முடியாது. கட்சி ஒன்றிணைய வேண்டும் என யார் கூறினாலும் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்போம்" எனத் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து
செங்கோட்டையனின் பேட்டி குறித்து பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
"இது அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரம். இதில் நான் கருத்து கூறுவது சரியானதாக இருக்காது. அவர்கள் இதுவரை ஒன்றாக இருந்தனர். அவர்கள், தங்களின் கருத்தைப் பேசுகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க ஆட்சியை அகற்ற முடியும்" எனக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடுவை செங்கோட்டையன் விதித்துள்ளது குறித்துப் பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "கெடு விதித்துள்ளது குறித்துக் கேட்டபோது, அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனக் கூறுவது நல்ல விஷயம்" எனத் தெரிவித்தார்.
'பா.ஜ.க கூட்டணியில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?' எனக் கேட்டபோது, "அரசியலில் எதுவும் நிரந்தரமாக இருக்காது. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. கடைசி ஒரு மாதத்தில் கூட மாற்றம் வரலாம். ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும் நடக்கும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

பட மூலாதாரம், Nainar Nagenthran/Facebook
'10 நாள் கெடு' - கே.ஏ.செங்கோட்டையன் பேசியது என்ன?
சில நாட்களுக்கு முன்பாக கோபிச்செட்டிப்பாளையத்தில் அ.தி.மு.கவின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன் தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 5ஆம் தேதி தொண்டர்கள் மத்தியில் மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்தார். கோபிச்செட்டிப்பாளையம் கரட்டூரில் உள்ள அ.தி.மு.க.. அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அவரது பேச்சை ஒளிபரப்ப அலுவலகத்துக்கு வெளியே பெரிய திரை வைக்கப்பட்டது. நேரம் செல்லச்செல்ல ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்கே குவிந்தனர்.
இந்தக் கூட்டத்திற்காக தனது இல்லத்திலிருந்து புறப்பட்டவர், கோபி நகர எல்லைக்கு வந்தவுடன் ஒரு திறந்த வெளி ஜீப்பில் ஏறி ஊர்வலமாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்தார். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஜீப்பில் பயணம் செய்து அலுவலகத்தை வந்தடைந்தார்.
எம்.ஜி.ஆர். 1972ல் அ.தி.மு.கவைத் துவங்கினார். முதலில் குள்ளம்பாளையத்தில் கிளைக் கழகச் செயலாளராகப் பணியாற்றத் துவங்கினேன். 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்டு 237,000 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார். 1975ல் கோவையில் கட்சியின் பொதுக் குழு நடைபெற்றது. அதில் அரங்கநாயகம் தலைவராகவும் திருப்பூர் மணிமாறன் செயலாளராகவும் என்னைப் பொருளாளராகவும் நியமித்தார்கள். அதை நாங்கள் நன்றாகச் செயல்படுத்தியத்தை சத்யா ஸ்டுடியோவுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். பாராட்டினார். 1977ல் நான் கோபிச்செட்டிப்பாளையத்தில் போட்டியிட்டபோது, நீ சத்யமங்கலத்தில் நில் என்றார் எம்.ஜி.ஆர். எனக்கு சத்தியமங்கலம் புதிய தொகுதி என்றேன். என் பெயரைச் சொல் வெற்றிபெறுவாய் என்று சொன்னார்.
அந்த இயக்கத்திலிருந்து எஸ்டிஎஸ் போன்றவர்கள் வெளியேறும்போது, அவர்களது இல்லத்திற்கே சென்று, தமிழ்நாட்டைக் காப்பாற்ற நான் இந்த இயக்கத்தை நடத்துகிறேன். என்னோடு வாருங்கள் என்று அழைப்பார். அவரது 10 ஆண்டு காலக ஆட்சிக்குப் பிறகு எம்.ஜி.ஆர். மறைந்த பிறகு, கட்சியைப் பொறுப்பேற்குமாறு ஜெயலலிதாவிடம் நாங்கள் வேண்டினோம். அவரும் சிறந்த ஆட்சியைத் தந்தார். இது தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். 2016ல் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த இயக்கத்திற்கு பல்வேறு சோதனைகள் வருகிறபோது, அன்று எல்லோரும் சேர்ந்து, இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என அன்றைய பொதுச் செயலாளராக திருமதி சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். என்னை ஜெயலலிதா பாராட்டியது எல்லோருக்கும் தெரியும். நாம் நெடும் பயணத்தை மேற்கொள்ளும்போது பல சோதனைகள் வரும், பொறுப்புகள் வரும். இந்த இயக்கத்திற்காக அந்தப் பணிகளை ஆற்றியிருக்கிறேன். இந்த இயக்கத்திற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருந்தேன். எனக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், இந்த இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்றுதான் என் பணிகளைத் தொடர்ந்தேன்.
2016க்குப் பிறகு நாம் தொடர்ந்து தேர்தலைச் சந்திக்கிறோம். ஜெயலலிதாவைப் பற்றி காளிமுத்து போன்றவர்கள் பேசிய வார்த்தைகள் இன்றும் தொண்டர்களின் நெஞ்சத்தில் முள் குத்துவதைப்போல இருக்கிறது. 1991ல் நீங்கள் கட்சியின் மூத்த தலைவர்களை மதிக்கவில்லை என்றார்கள். அதற்குப் பதிலளித்து பேசிய ஜெயலலிதா, என் பக்கத்தில் அமர்ந்திருப்பவர்கள் எப்படி விமர்சித்தார்கள் என்பதைச்சுட்டிக்காட்டி பேசினார்.

2016க்குப் பிறகு பல தேர்தல்களைச் சந்தித்தோம். 2019ஆம் ஆண்டு தேர்தல், 2021ஆம் ஆண்டு தேர்தல், 2024ஆம் ஆண்டு தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்திக்கும்போது பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அன்று பா.ஜ.கவோடு கூட்டணி வைத்திருந்தால் 30 இடங்களை பெற்றிருக்கலாம். எல்லோரும் ஒன்றிணைத்து, அரவணைத்து செல்ல வேண்டும் என்றோம். சகோதரர் வேலுமணிகூட இதனைக் குறிப்பிட்டார். இதற்குப் பிறகு பொதுச் செயலாளரைச் சந்தித்தோம். தேர்தலில் என்னதான் வியூகத்தை வகுத்தாலும் வெற்றிபெற முடியவில்லை. நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி. சண்முகம் ஆகிய ஆறு பேரும் சந்தித்தோம். கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை. வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் வெற்றிபெற முடியும். 2010ல் டெபாசிட் இழந்த பிறகு, கோவை குலுங்கியது, மதுரை நடுங்கியது, திருச்சி திரும்பியது என்று சொல்லும் அளவுக்கு மாநாட்டிற்கு கூட்டம் வந்தது. இருந்தபோதும் தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளை இணைத்து ஜெயலலிதா வெற்றிபெற்றார். 2016லும் அப்படித்தான் வெற்றிபெற்றார். வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். எந்த நிபந்தனையும் இல்லை, எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்களோடு இணைந்து பணியாற்றுவோம், எந்தத் தியாகத்தையும் செய்து பணியாற்றுகிறோம் என்று பல்வேறு மேடைகளில், கடிதங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
நாங்கள் எல்லோரும் தவித்துக்கொண்டிருக்கிறோம். யார் இதை எடுத்துச் சொல்வது என்ற நிலையில், நான் இதைப் பேசுகிறேன். மக்கள் ஆட்சி மாற்றம் தேவை என நினைக்கிறார்கள். அப்படி ஆட்சி மாற்றம் தேவை என்றால் வெளியே சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே அமைதியாக இருப்பவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான், வெற்றிபெற முடியும். நாளை நம் ஆட்சி மலரப் போகிறது என யாராலும் சொல்ல முடியாது. என்னிடம் பலரும் பேசினார்கள். அதன் அடிப்படையில்தான் உங்களைச் சந்தித்துப் பேசுகிறேன். அவர்கள் (வெளியில் இருப்பவர்கள்) எந்தப் பொறுப்பும் தேவையில்லை என அவர்கள் சொல்லும்போது, நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதனை விரைந்து செய்ய வேண்டும். தேர்தல் பணிகள் துவங்கிவிட்டன. அப்படிச் செய்யவில்லையென்றால் இந்த மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து அந்தப் பணிகளை மேற்கொள்வோம். அதனைச் செய்யவில்லையென்றால் ஜெயலலிதா ஆட்சி மலர ஏதுவாக இருக்காது. இந்தப் பிரச்சனைக்கு முடிவுவந்தால்தான் சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்வேன்" என்று குறிப்பிட்டார் கே.ஏ. செங்கோட்டையன்.
இதற்குப் பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க ஆரம்பித்தார் செங்கோட்டையன். "இப்போது சுற்றுப் பயணத்திற்கு வருகிற கூட்டம் வேறு. பல்வேறு தரப்பட்ட தொண்டர்களின் மனநிலை வேறு. இதனை மனதில் கொண்டு, இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றுதான் இந்தக் கோரிக்கையை வைத்திருக்கிறேன்" என்று தெரிவித்த செங்கோட்டையனிடம் யார் யாரை இணைக்க வேண்டும் எனக் கேட்டபோது, "அதனை பொதுச் செயலாளர் முடிவுசெய்யலாம். வெளியே சென்றவர்கள் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள். அவர்கள் இணைக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமே, தென் மாவட்டங்களில் என்ன நிலை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்" என்றார்.
மேலும், "என்னுடைய கருத்தை முன்வைத்திருக்கிறேன். அதற்குக் காலக்கெடு வைத்திருக்கிறேன். அது நடக்கவில்லையென்றால் எல்லோரையும் ஒருங்கிணைத்து அந்த பணிகளைச்செய்வோம். 10 நாட்கள் காலக்கெடு. நாங்கள் ஆறு பேர் சென்று பேசிய பிறகு, கழகத்தின் பொதுவான கருத்துகளை என்னிடம் பேச முன்வரவில்லை. எல்லோரையும் ஒருங்கிணைக்கும்போதுதான் கட்சி ஒருமைப்படும். அப்போதுதான் நாம் மாபெரும் வெற்றியைப் பெற முடியும். இப்போது பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். பிறகு இதே மனநிலையோடு இருப்பவர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்னுடைய மனநிலையை, தொண்டர்களின் மனநிலையை முன்வைத்திருக்கிறேன்" என்றார் செங்கோட்டையன்.
கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்களாக கருதப்படுபவர்களை எப்படிச் சேர்க்க முடியும் என கேட்டபோது, "எஸ்.டி.எஸ். கட்சியிலிருந்து வெளியேறும்போது, அவரும் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்தார்கள். இருந்தபோதும், எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சென்று அழைத்தார்" என்று சொல்லிவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டார்.
இந்தப் பேட்டியின்போது யார், யாரைச் சேர்க்க வேண்டும் என யாருடைய பெயரையும் செங்கோட்டையன் குறிப்பிடவில்லை.
செங்கோட்டையன் தனது செய்தியாளர் சந்திப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை ஓரிடத்தில் கூட குறிப்பிடவில்லை. இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், பொதுச்செயலாளர் என்றே அவர் குறிப்பிட்டார். அவர் என்ன பேசப்போகிறார் என்பதை அறிந்துகொள்ள அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் அந்தப் பகுதியில் கூடியிருந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












