You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு
இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த உடன்படிக்கைக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் காணப்படுகின்ற தொழிலாளர் சட்டத்தின் பிரகாரம், இலங்கையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள், 1958ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதி சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
குறித்த வெளிநாட்டு ஊழியர்கள் இலங்கையில் தமது தொழில்வாய்ப்புக்களை நிறைவு செய்து, மீண்டும் தமது தாயகம் நோக்கி புறப்படும் சந்தர்ப்பத்தில், அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் அதற்கான வட்டி ஆகியவற்றை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இலங்கை சட்டத்தில் காணப்படுகின்றது.
எனினும், இந்தியாவில் காணப்படுகின்ற சட்டத்தின் பிரகாரம், அந்த நாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள், அந்த நாட்டு சமூக பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இந்தியாவின் சமூக பாதுகாப்பு நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையர்களுக்கான அந்த பணத்தை, தொழில்புரியும் இலங்கையர்கள் 58 வயது பூர்த்தியாகும் வரை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பிரச்சனையை நிவர்த்தி செய்துக் கொள்ளும் வகையிலேயே இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கடந்த வாரம் கிடைத்துள்ளது.
இதன்படி, இலங்கை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு தொகையை வழங்கும் இலங்கையர்கள், இந்தியாவின் சமூக பாதுகாப்பு நடைமுறை நிதியத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியதன் அவசியம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்காது, இந்தியாவின் சமூக பாதுகாப்பு நடைமுறை நிதியத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் இலங்கை பணியாளர்கள், தமது தொழிலை நிறைவு செய்து, மீண்டும் இலங்கைக்கு திரும்பும் சந்தர்ப்பத்தில் அந்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இந்த உடன்படிக்கையின் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, 1958ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக, அமைச்சரவை அந்தஸ்தற்ற தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்