You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

நேரலை, 'ஐரோப்பாவை மிரட்டி பணிய வைக்க முடியாது' - அமெரிக்காவுக்கு டென்மார்க் பதில்

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'ஐரோப்பாவை மிரட்டிப் பணியவைக்க முடியாது' - டென்மார்க் பிரதமர்

    "ஐரோப்பாவை மிரட்டிப் பணியவைக்க முடியாது" என்று டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கிரீன்லாந்து குறித்த கருத்துகளைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

    கிரீன்லாந்து தொடர்பாக டிரம்பின் வர்த்தக வரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பரிசீலித்து வரும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

    கிரீன்லாந்து குறித்த தனது முன்மொழிவை டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, சுவீடன் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் எதிர்த்தால், அந்த 8 அமெரிக்க நட்பு நாடுகள் மீது பிப்ரவரி மாதம் புதிய வர்த்தக வரிகளை விதிப்பேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    டிரம்பின் இந்த முன்மொழிவு, டென்மார்க்கின் ஒரு பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா தன்னுடன் இணைத்துக் கொள்வதை உள்ளடக்கியது. கிரீன்லாந்து அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். அதை பலவந்தமாக கைப்பற்றும் சாத்தியக்கூறையும் அவர் நிராகரிக்கவில்லை.

    டிரம்பால் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நாடுகள், அவரது திட்டம் உறவுகளில் ஒரு "ஆபத்தான சீரழிவை" ஏற்படுத்தும் என்று கூறி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இந்த நாடுகள் ஒரு கூட்டு ராணுவப் பயிற்சியையும் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  2. ஸ்பெயினில் 2 அதிவேக ரயில்கள் மோதியதில் குறைந்தது 21 பேர் பலி

    ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக் கொண்டதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோர்டோபா நகரை அடுத்துள்ள அடாமுஸ் அருகே மாட்ரிட் நோக்கிச் சென்ற அதிவேக ரயில் தடம் புரண்டு எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயிலுடன் மோதியதாக ரயில் சேவை வழங்கும் ஏடிஐஎஃப் (ADIF) நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அண்டலூசியாவின் அவசர சேவைப் பிரிவு, குறைந்தது 73 பேர் பலத்த காயமடைந்ததாகக் கூறியுள்ளது. அதே நேரத்தில், தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்டு வந்தனர்.

    ஏடிஐஎஃப் (ADIF) நிறுவனத்தின்படி, உள்ளூர் நேரப்படி 18:40 மணிக்கு மாலாகாவிலிருந்து ரயில் புறப்பட்ட சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக அடோச்சா, செவில்லா, கோர்டோபா, மாலாகா மற்றும் ஹுயெல்வா நிலையங்களில் தங்குமிடங்களை ஏற்பாடு செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த விபத்தைத் தொடர்ந்து மாட்ரிட் மற்றும் அண்டலூசியாவிற்கு இடையேயான அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக முனையங்கள் இரவு முழுவதும் திறந்திருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    மாலாகாவிலிருந்து ரயிலை இயக்கிய ஐரியோ என்ற தனியார் ரயில் நிறுவனம், தடம் புரண்டதை உறுதிப்படுத்தியதுடன், சுமார் 300 பயணிகள் ரயிலில் இருந்ததாகத் தெரிவித்தது.

  3. கரூர் கூட்ட நெரிசல்: விஜயிடம் சிபிஐ இன்று மீண்டும் விசாரணை

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய், சிபிஐ முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார்.

    சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, அவர் நேற்றே டெல்லி புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவரிடம் கடந்த 12ஆம் தேதி சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.

    சுமார் 6 மணி நேரம் நீடித்த அந்த விசாரணையில் கூட்டத்துக்குத் தாமதமாக வருகை தந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, கூட்ட மேலாண்மை, கரூர் நிகழ்வுடன் தொடர்புடைய அமைப்புசார்ந்த பொறுப்புகள் ஆகியவை தொடர்பாக சிபிஐ கவனம் செலுத்தியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறியிருந்தது.

    விஜயிடம் மேலும் விசாரணை நடத்த சிபிஐ விரும்பியதாகவும், பொங்கலை முன்னிட்டு வேறொரு தேதியில் விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தெரிவித்ததாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

    அதன் தொடர்ச்சியாக விஜய் இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இந்த வழக்கில் சிபிஐ பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயர் இல்லையென்றாலும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

  4. வணக்கம் நேயர்களே!

    இன்று (19/01/2026) பிற்பகல் வரையிலும் நேரலைப் பக்கத்தில் சமீபத்திய நிகழ்வுகளை தொகுத்து தருவது பிரதீப் கிருஷ்ணா.