அன்னை தெரசா பற்றிய மோகன் பகவத்தின் கருத்துக்கு நாடு முழுவதும் கண்டனம்

பட மூலாதாரம், AP
அன்னை தெரசாவின் தொண்டுப் பணிகளின் பின்னணியில், ஏழைகளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் நோக்கம் இருந்தது என இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கின் - ஆர்.எஸ்.எஸ். - தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கு இந்தியா முழுவதும் கண்டனம் எழுந்துள்ளது.
திங்கட்கிழமையன்று ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய மோகன் பகவத், "அன்னை தெரசா ஆற்றிய சேவைகள் சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், அந்த சேவை யாருக்கு வழங்கப்படுகிறதோ, அந்த நபரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதுதான் அதன் ஒரே நோக்கமாக இருந்தது" என்று குறிப்பிட்டார்.
"மதமாற்றம் செய்யப்படுவது இங்கே கேள்வியில்லை. ஆனால், சேவையின் பெயரால் மதமாற்றம் செய்யப்பட்டால், அந்தச் சேவை மதிப்பிழந்து போகிறது" என்றும் மோகன் பகவத் கூறியிருந்தார்.
மத சுதந்திரம் பாதுகாக்கப்படும் என சில நாட்களுக்கு முன்புதான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பேசியிருந்த நிலையில், மோகன் பகவத் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அன்னை தெரசா, கொல்கத்தா நகரின் ஏழைகளுக்காக ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய மிஷினரீஸ் ஆஃப் சாரிட்டீஸ் மூலம் பணியாற்றி வந்தார். அவருக்கு 1979ல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத் ரத்னா விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
மோகன் பகவத்தின் கருத்துக்கு கிறிஸ்தவ மதத் தலைவர்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தில்லி கத்தோலிக்க ஆர்க் டயோசிஸின் அருட் தந்தையான சவரிமுத்து, "இது வருத்தத்திற்குரிய கருத்து. அன்னை தெரசா ஆதரவற்றவர்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம்
இந்தக் கருத்துக் குறித்து பாரதீய ஜனதாக் கட்சி வருத்தம் தெரிவிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
"அன்னை தெரசாவை இப்படி அவமானப்படுத்தக்கூடாது" என காங்கிரஸ் தலைவரான ராஜிவ் சுக்லா கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்திருக்கும் தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், "கொல்கத்தாவில் உள்ள நிர்மல் ஹ்ருதய் ஆசிரமத்தில் அவருடன் சில மாதங்கள் நான் பணியாற்றியிருக்கிறேன். அவர் மிக உன்னதமான ஆத்மா. அவரை விட்டுவிடுங்கள்" என்று கூறியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். "காமலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் தானோ?" என தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.












