தம்மை முன்னிறுத்திக் கொள்ளவே 'போலிச் செய்திகள்' பகிரப்படுகின்றன #BeyondFakeNews

பட மூலாதாரம், Getty Images
வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கில் பரவிய போலிச் செய்திகளால் இந்தியாவில் ஓராண்டில் மட்டும் இருபதுக்குக்கும் மேற்பட்டோர் பலி.
இது தொடர்பாக வாதம் விவாதம் பகுதியில், போலிச் செய்திகள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறதா? அல்லது செய்தியின் உண்மைதன்மை அறியாமல் சாமான்ய மக்களே பரப்புகிறார்களா? என்று பிபிசி நேயர்களிடம் கேட்டிருந்தோம்.
அவர்களின் கருத்துகளை இங்கே பகிர்கிறோம்.

"போலிசெய்திகளை பரப்புவது, காற்றில் விஷக் கிருமிகளை பரப்புவதற்கு சமமாகும். ஒரு செய்தியை ஷேர் பண்ணுவதற்கு முன்னால் யோசித்து, அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைத்து, அது தேவையா என்பதை ஆலோசித்து ஷேர் செய்ய வேண்டும்." என்று தம் கருத்தை பகிர்ந்துள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.


"தொலைபேசி மற்றும் இணைய சேவை அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படுகிறது. சமூக ஊடகங்கள் மூலம் செய்திகள் மிக வேகமாக பரப்பப்படுகின்றன. அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து பகிர்வோர் மிகக் குறைவு. பொழுதுபோக்கு, காழ்ப்புணர்வு, துவேசம், தவறான புரிதல் காரணமாகவோ உருவாக்கபட்டு நம்பகதன்மை ஆராயப்படாமல் பகிரப்படும் செய்திகள் மூலம் மனித உயிர் பறிக்கபடுகிறது. அந்த கொடூரங்களை தடுக்காமல் அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் சொல்லாமல் வீடியோ எடுத்து பகிர்பவர்களே அதிகம். சட்டத்தின் மீது பயம் இருந்தால்/ பயம் வருகிற மாதிரி சட்டங்கள் கடுமையாக நடைமுறை படுத்தப்பட்டால் இம்மாதிரி குற்றங்கள் குறையலாம். குழந்தை கடத்தல், திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என கருதிக் கொண்டு கும்பலால் அடித்து கொல்லபட்டவர்களே அந்த 20 நபர்கள். எவர் மீதும் சந்தேகம் வரும் பட்சத்தில் அந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்" என்கிறார் யாசின் பின் சமீம்.
"எதை எடுத்தாலும் போலி அசல் இருக்கிறது. ஆகவே தகவலும் இதற்கு விதிவிலக்கல்ல. படிக்கும் நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தகவல் தருவோருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும்" என்கிறார் சுப்புலஷ்மி
பதற்றம் மற்றும் தங்களை முன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆசையினால் பரப்புகிறார்கள் என்கிறார் அய்யாசாமி.
சாமானிய மக்கள் அவர்களுக்கு தெரியாமலேயே பரப்புகிறார்கள் என்கிறார் க.விஜயேந்திரமணி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












