You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரேபியா:- அமெரிக்க தூதர் பொறுப்பில் முதல்முறையாக பெண் - புது வெளிச்சம்
செளதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்தை அமெரிக்காவுக்கான அடுத்த தூதராக செளதி அரேபியா அறிவித்துள்ளது.
செளதி அரசவையில் தூதர் பதவியை ஏற்க போகும் முதல் பெண்மணி இவர்தான்.
அவரின் நியமனம் சனிக்கிழமையன்று அரசு ஆணை மூலம் தெரிவிக்கப்பட்டது.
இளவரசி ரீமா தனது குழந்தை பருவத்தின் பாதியை அமெரிக்காவின் வாஷிங்கடனில் கழித்தார்.
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் இறப்பை அடுத்து எழுந்த சர்வதேச கண்டனங்களை அடக்க செளதி அரேபியா முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் இந்த நியமனம் நிகழ்ந்துள்ளது.
ஜமால் கஷோக்ஜி தொடர்பாக பல முரணான தகவல்களை தந்தபின் இறுதியாக இஸ்தான்புல்லில் உள்ள தனது நாட்டின் தூதரகத்தின் உள்ளே கொலை செய்யப்பட்டார் என்று ஒப்புக் கொண்டது செளதி அரசு.
வாஷிங்டன் போஸ்டில் பத்தி எழுத்தாளராக இருந்த ஜமால் கஷோக்ஜி செளதி அரேபியாவை கடுமையாக விமர்சித்து வந்தார்.
கஷோக்ஜியின் கொலையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு ஏதும் இல்லை என செளதி அரசாங்கம் மறுத்து வருகிறது ஆனால் இது தொடர்பாக அமெரிக்க உளவுத் துறை கேள்வி எழுப்பியது.
இந்த விஷயம் தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டும் என வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க சட்ட வல்லுநர்கள் அழுத்தம் கொடுக்க முயற்சித்தனர்.
தந்தையின் வழியில்
தற்போது இந்த பதவியில் முடிக்கான இளவரசரின் தம்பி இளவரசர் காலித் பின் சல்மான் இருந்து வருகிறார். அவர் தற்போது நாட்டின் துணை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரீமாவின் தந்தை பண்டார் அல் சுல்தான் சவுத் அமெரிக்க தூதர் பொறுப்பில் 1983ஆம் ஆண்டிலிருந்து 2005 வரை இருந்தார்.
அவரின் பதவி காரணமாக ரீமா தனது குழந்தை பருவத்தை அமெரிக்காவில் கழிக்க நேர்ந்தது. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சிய படிப்புகளுக்கான பட்டம் பெற்றுள்ளார் ரீமா.
2005ஆம் ஆண்டு ரியாத் திரும்பிய பிறகு பொது மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வந்தார் ரீமா.
ரியாதில் உள்ள ஹார்வி நிக்கோலஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் ரீமா செயல்பட்டுள்ளார்.
ஆண் பெண் சமத்துவம் குறித்து அதிகம் விமர்சிக்கப்படும் செளதி அரேபியாவில் இளவரசி ரீமா பெண்களுக்கான உரிமைகள் குறித்து பேசி வருகிறார்.
மிக சமீபமாக அவர் பொது விளையாட்டு அதிகாரசபையில் இருந்தார். அதில் விளையாட்டு மற்று உடற்பயிற்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வந்தார்.
மேலும் இவர் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்