You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் பதற்றம்: 200க்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் கைது
- எழுதியவர், ரியாஸ் மஸ்ரூர்
- பதவி, பிபிசி, ஸ்ரீநகர்
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் ஹமீத் ஃபயஸ் மற்றும் ஜே.கே.எல்.எஃப் தலைவர் யாசின் மலிக் உள்பட 200க்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை போலீஸார் சுற்றி வலைத்ததில் இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கைதுகளுக்கு இடையே, 20 ஆயிரம் கூடுதல் துணை ராணுவப் படையினர் அவசரமாக களமிறக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி சி.ஆர்.பி.எஃப் படையினரின் மீது நடைபெற்ற தற்கொலை தாக்குதல் குறித்த விசாரணைகளை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பிரிவு 35A-வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. மற்ற மாநிலங்கள் போல காஷ்மீர் இல்லை என்பதை குறிப்பிடுவதே சட்டப்பிரிவு 35A.
இந்த அரசமைப்பு சட்டப்பிரிவு நீக்கப்படப் போவதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வதந்திகள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனை மறுத்த போலீஸார், இந்த கைதுகளும், துருப்புகளை நிறுத்தியிருப்பதும், தேர்தலுக்கு தயாராவதன் ஒரு பகுதி என்று கூறினர்.
"பிரிவினைவாதிகள், தேர்தல் எதிர்ப்பு பிரசாரத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும் பல வாக்குச்சாவடிகள், பதற்றம் நிறைந்து இருப்பதால், தவறாக ஏதும் நடக்காமல் இருக்க, அதிக படைகள் தேவைப்படும். வதந்திகளை பரப்புவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று பிபிசியிடம் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி மற்றும் பாஜகவின் முன்னாள் கூட்டாளியான சஜத் லோன், இது தோல்வியடையும் என்று சோதிக்கப்பட்ட மாதிரி என்று கூறியுள்ளனர்.
அரசமைப்பு சட்டப்பிரிவான 35A மற்றும் 370 ஆகியவற்றை எதிர்த்து, சில ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நபர்கள் கடந்த ஆண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குகின்றன. இதனால்தான், அம்மாநிலத்துக்கான சட்டங்களை அவர்கள் இயற்றிக் கொள்ள முடிகிறது. என்று தனி சட்டம்
இந்த சட்டத்தை நீக்கினால், தக்க பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரிவினைவாதிகளும் மற்றும் இந்திய அரசியல் அமைப்புகள் சிலவும் மிரட்டியிருந்தன. இந்த சிறப்பு அந்தஸ்தை மாற்றியமைத்தால், இந்திய தேசியக் கொடியை ஏந்த யாரும் இருக்க மாட்டார்கள் என மெஹபூபா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
2014 தேர்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலை கட்டுவது மட்டுமல்லாது, காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவிற்குள் முழுமையாக கொண்டுவர சட்டப்பிரிவுகள் 35A மற்றும் 370-ஐ நீக்குவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
நரேந்திர மோதி பிரதமராக பொறுப்பேற்ற சில காலத்திலேயே இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வரும் திங்கட்கிழமையன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இதனை எதிர்த்து போராட்டம் நடத்த பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்