டயானாவுக்கு சிலை - அவரது மகன்கள் முடிவு
டாயனா இளவரசி இறந்து 20 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது சிலையை நிறுவ கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியமும், இளவரசர் ஹாரியும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பட மூலாதாரம், AFP
நிரந்தரமாக சிலையை நிறுவி "இளவரசி டாயனாவின் தாக்கத்தை அங்கீகரிக்க சரியான நேரமிது" என்று இந்த இரு இளவரசர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இளவரசி டாயனாவின் முன்னாள் இல்லமான கென்சிங்டன் அரண்மனையின் பொது வளாகத்தில் அவருடைய சிலை நிறுவப்படவுள்ளது.
சிற்பக்கலைஞர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், கலை வேலைப்பாடுகள் விரைவில் தொடங்கும் என்று ஒரு செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"எங்களுடைய அம்மா இறந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. நிரந்தரமாக ஒரு சிலையை நிறுவி, அவருடைய தாக்கத்தை ஐக்கிய ராஜ்ஜியத்திலும், உலக நாடுகளிலும் அங்கீகரிக்க செய்ய இது சரியான நேரம்" என்று இளவரசர்கள் வில்லியமும், ஹாரியும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.
"எங்களுடைய அம்மா பலரின் வாழ்க்கையை தொட்டுள்ளார். நிறுவப்படும் அவருடைய சிலை கென்சிங்டன் மாளிகையை பார்வையிடுவோர் அனைவரும் அவருடைய வாழ்க்கையையும், அவர் நமக்கு விட்டு சென்ற அனைத்தையும் நினைவுகூரச் செய்யும்" என்று அவர்கள் கூறியுள்ளனர்.
சின்ட்ரெல்லா காரணங்கள்

பட மூலாதாரம், Reuters
இளவரசி டயானாவை நினைவுகூர்வதற்கு பேரன்கள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக எலிசபெத் அரசி தெரிவித்திருக்கிறார்.
"ஒரு சிறந்த அறக்கொடை புரவலர்" என்கிற அவர்களின் அம்மா விட்டு சென்ற நற்பெயரில், இந்த "இளவரசர்களின் முத்திரை"யை பதிப்பதற்கான வாய்ப்பு இது" என்று அரச வரலாற்று ஆசிரியர் கேத் வில்லியம்ஸ் கூறியிருக்கிறார்.
"அதிக கவனம் பெறாத அம்சங்களை தன்னுடைய அறக்கொடை தளங்களாக இளவரசி டயானா பயன்படுத்தி கொண்டதை இளவரசர்கள் உண்மையில் கையில் எடுத்துள்ளனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ் இளவரசர் 15 ஆம் வயதிலும், அவருடைய சகோதரர் ஹாரி 12 ஆம் வயதிலும் இருந்தபோது, வேல்ஸின் இளவரசியான டயானா 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் நாள் பாரிஸில் கார் விபத்தில் பலியானார்.

இளவரசி டயானாவுக்கு அமைக்கப்படும் இந்த சிலை, அவருக்கு அர்ப்பணிக்கப்படுகின்ற, லண்டனில் அமையும் நான்காவது நினைவு சின்னமாக இருக்கும்.
இது ஹைய்ட் பூங்காவிலுள்ள இளவரசி டயானா நினைவு பவுன்டன் (செயற்கை நீரூற்று) மற்றும் கென்சிங்டன் அரண்மனைக்கு அருகிலுள்ள நினைவு தோட்டத்திற்கு மிகவும் அருகில் நிறுவப்படவிருக்கிறது.
சிற்பக்கலைஞரை இளவரசி டயானாவின் சகோதரி சாரா மெக்கோர்குவோடாலெ உள்பட 6 பேர் கொண்ட குழு தேர்வு செய்யும்
இளவரசி டயானாவின் இறப்பு சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியது. பல மாதங்களாக அரச இல்லங்களுக்கு முன்னால் மில்லியன் கணக்கான அஞ்சலி நிகழ்வுகள் அவருக்காக நடத்தப்பட்டன.
அவருடைய இறுதி சடங்கு உலகளவில் 2 பில்லியன் மக்களால் பார்க்கப்பட்டதாக கருதப்படுகிறது.
இளவரசி டயானாவின் 20-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி, டயானாவின் சகோதரரான யேல் ஸ்பென்ஸரால் அல்துராபிலுள்ள அவர்களின் குடும்ப இல்லத்தில் கண்காட்சிகளோடு நடத்தப்படவுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












