இயேசு குறித்து விவேகானந்தர் மரணப் படுக்கையில் என்ன கூறினார்?

பட மூலாதாரம், RUPA & COMPANY
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாற்றியதில் 'ரஷோகுல்லா'(ரசகுல்லா)வுக்கு பெரும்பங்கு உண்டு என்று யாருக்காவது தெரியுமா? சுவாமி விவேகானந்தர் சிறுவயதில் இருந்தே சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
'Swami Vivekananda the Feasting, Fasting Monk' அதாவது 'சுவாமி விவேகானந்தர் விருந்து மற்றும் உண்ணாவிரத துறவி', இது அவரது வாழ்க்கை வரலாற்றின் பெயர். ஆனால் இதன் தலைப்பு வெறுமனே வைக்கப்படவில்லை.
வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார் என்பதிலிருந்தே அவருக்கு உணவின் மீதிருந்த ஆர்வத்தை அளவிட முடியும்.
உலகிலுள்ள எல்லா பழங்களிலும் அவர் கொய்யாவை மிகவும் விரும்பினார். இது தவிர, சர்க்கரை மற்றும் ஐஸ் கலந்த மென்மையான தேங்காயைச் சாப்பிடவும் அவர் விரும்பினார். காந்திஜியை போலவே அவரும் ஆட்டுப்பால் குடித்தார்.
ஐஸ்கிரீம் விவேகானந்தரின் பலவீனமாக இருந்தது. அதை அவர் எப்போதும் குல்ஃபி என்றே அழைப்பார். அமெரிக்காவின் பூஜ்ஜியத்திற்கு குறைவான தட்பநிலையிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிடும் வாய்ப்பை விவேகானந்தர் தவறவிட்டதில்லை.
ஒரு நாள் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ராமச்சந்திர தத்தா, தன்னுடன் தக்ஷிணேஸ்வர் கோயிலுக்கு வரும்படியும், அங்கு வருபவர்களுக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் ரசகுல்லா கொடுப்பார் என்றும் விவேகானந்தரிடம் கூறினார்.
அங்கே ரசகுல்லா கிடைக்கவில்லையென்றால் ராமகிருஷ்ணரின் காதை இழுத்துவிடுவேன் என்று விவேகானந்தர் அண்ணனிடம் கூறினார். விவேகானந்தர் அங்கு ஏமாற்றமடையவில்லை. மேலும் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார்.

பட மூலாதாரம், RUPA & COMPANY
சிறுவயதில் இருந்தே துறவி ஆகவேண்டும் என்ற ஆசை
விவேகானந்தர் சிறுவயதில் மிகவும் குறும்புக்காரர். அவரின் தலையில் தண்ணீர் ஊற்றுவதுதான் அவரை சாந்தப்படுத்த ஒரே வழி.
சுற்றித்திரியும் சாதுக்களிடம் விவேகானந்தருக்கு அதிக பற்று இருந்தது. அவர்களுடைய சத்தத்தைக் கேட்டதும் அவர் வீட்டை விட்டு வெளியே ஓடுவது வழக்கம்.
சாதுக்களின் குரலைக் கேட்டதுமே அவர் அறையில் பூட்டப்படுவார். அவர்கள் சென்ற பின்னரே அவர் வெளியே வர அனுமதிக்கப்படுவார். அந்த அளவிற்கு சாதுக்கள் மீது விவேகானந்தரின் மோகம் இருந்தது.
குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் துறவியாக விரும்பினார். குழந்தைகள் எழுத்துகளை அடையாளம் காணத் தொடங்கும் வயதில் விவேகானந்தர் எழுதவும் படிக்கவும் தொடங்கினார்.
அவரது நினைவாற்றல் மிகவும் சிறப்பான ஒன்றாக இருந்தது. புத்தகத்தை ஒருமுறை படித்தாலே அவருக்கு அனைத்தும் நினைவில் இருக்கும். விளையாட்டுகளில், நீச்சல், மல்யுத்தம் மற்றும் சிலம்பம் சுற்றுவதை அவர் விரும்பினார். வாள் சண்டைப் பயிற்சியும் அவர் பெற்று வந்தார்.
ராய்ப்பூரில் தங்கியிருந்த காலத்தில் செஸ் விளையாட்டிலும் அவர் தேர்ச்சி பெற்றார். சிறந்த மாஸ்டர்களிடம் கிளாசிக்கல் இசைப் பயிற்சி பெற்ற அவர், பகாவஜ், தபலா, இஸ்ராஜ், சிதார் போன்ற இசைக்கருவிகளை மிகவும் திறமையாக வாசிப்பார். ஆனால் பாரம்பரிய இசையில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
அவருடைய இசைதான் அவரை அவருடைய குரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் அருகில் அழைத்துச் சென்றது. அவரது இசையால் பரமஹம்சர் மிகவும் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை அவரது பாடலை கேட்டுக்கொண்டே சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார்.
ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார்

பட மூலாதாரம், RUPA & COMPANY
ஒவ்வொரு தந்தையைப் போலவே விவேகானந்தரின் தந்தை விஸ்வநாதரும் அவருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார். ஆனால் அவரது குரு ராமகிருஷ்ண பரமஹம்சர் அதற்கு எதிராக இருந்தார்.
விவேகானந்தர் பிரம்மச்சரியத்தை ஏற்றுக்கொண்டு துறவியாக வாழ முடிவு செய்தார்.
மூத்த மகன் என்பதால் தந்தையின் மரணத்திற்குப் பிறகு ஏழு பேர் கொண்ட குடும்பத்தை நடத்தும் பொறுப்பு அவர் மீது விழுந்தது. அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார்.
விவேகானந்தரின் குரு ராமகிருஷ்ண பரமஹம்சர், எளிமை மற்றும் தார்மீக ஆன்மீகத்தின் அடையாளமாக இருந்தார். விவேகானந்தர் தனது செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வார் என்பதில் ராமகிருஷ்ண பரமஹம்சர் உறுதியாக இருந்தார்.

பட மூலாதாரம், RKMDELHI.ORG
1886 ஜூலை வாக்கில் ராமகிருஷ்ணரின் உடல்நிலை மோசமாகத் தொடங்கியது. அவருக்கு தொண்டை புற்றுநோய் இருந்தது.
கடைசி நேரத்தில் தன் சீடர்கள் அனைவரையும் அழைத்து விவேகானந்தர்தான் தனது வாரிசு என்று அவர் அறிவித்தார். இதற்குப் பிறகு,1886 ஆகஸ்ட் 16 ஆம் தேதி ராமகிருஷ்ணர் பரமஹம்சர் மகாசமாதி அடைந்தார்.
அதன் பிறகு விவேகானந்தர் ராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.
1898ஆம் ஆண்டு கல்கத்தாவில் பிளேக் நோய் பரவியது. நோய்க்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் கல்கத்தாவை விட்டு வெளியேறினர்.
மக்களுக்கு நிவாரணம் வழங்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. அப்போது விவேகானந்தர் கல்கத்தாவில் தங்கி மக்கள் மத்தியில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்.
நல்ல ஆளுமை உடையவர்

பட மூலாதாரம், RUPA & COMPANY
விவேகானந்தரின் உடல்வாகும், உயரமும் நன்றாக இருந்தது. அவர் மிகவும் தர்க்கரீதியானவர், ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களின் மனதைக் கவர்பவராக இருந்தார்.
"சுவாமிஜியின் உடல் ஒரு மல்யுத்த வீரரைப் போல வலிமையாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. அவர் 5 அடி 8.5 அங்குல உயரம் கொண்டவர். அவரது மார்பு அகலமானது, அவருக்கு அற்புதமான குரல் இருந்தது," என்று ரோமயா ரோலண்ட் தனது புகழ்பெற்ற புத்தகமான ' லைஃப் ஆஃப் விவேகானந்தா' வில் குறிப்பிட்டுள்ளார்.
"அனைவருடைய கவனத்தின் மையமாக அவரது பரந்த நெற்றியும், பெரிய கருப்பு கண்களும் இருந்தன. அவர் அமெரிக்கா சென்றபோது, ஒரு பத்திரிகையாளர் அவரது எடை 102 கிலோ இருக்கும் என்று மதிப்பிட்டார். சில நேரங்களில் அவர் தன்னைத் தானே கேலி செய்து 'மோட்டா சுவாமி' என்று அழைத்துக்கொள்வார்.”
சரியாக தூங்க முடியாததுதான் அவருடைய பெரிய பிரச்னை. அவர் படுக்கையில் புரண்டுகொண்டே இருப்பார். ஆனால் தூக்கமே வராது. எவ்வளவோ முயற்சி செய்தும் தொடர்ச்சியாக அவரால் 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியாது.
அமெரிக்காவுக்கு அனுப்பிய மைசூர் மகாராஜா

பட மூலாதாரம், RUPA & COMPANY
விவேகானந்தர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார்.
முதலில் அவர் வாராணசிக்கு சென்றார், அங்கு அவர் பல அறிஞர்கள் மற்றும் துறவிகளுடன் கருத்துகளை பரிமாறிக்கொண்டார்.
புத்தர் தனது முதல் உபதேசத்தை வழங்கிய சாரநாத்துக்கும் அவர் சென்றார். இதையடுத்து அயோத்தி, லக்னெள வழியாக ஆக்ரா சென்றார். அதன் பிறகு பம்பாய் சென்றார். அங்கிருந்து பூனாவுக்கு புறப்பட்டபோது தற்செயலாக அவரும் பாலகங்காதர திலகரும் ஒரே காரில் அமர்ந்தனர்.
இருவருக்கிடையே ஆழமான விவாதம் நடந்தது. திலகர் அவரை தன்னுடன் பூனாவில் தங்கும்படி அழைத்தார். விவேகானந்தர் 10 நாட்கள் திலகருடன் இருந்தார். இதையடுத்து விவேகானந்தர் ரயிலில் பெங்களூர் புறப்பட்டு சென்றார்.
அங்கிருந்து மைசூர் சென்று அங்கு மகாராஜாவின் விருந்தினராக தங்கினார். ஒரு நாள் மகாராஜா அவரிடம் 'நான் உங்களுக்காக என்ன செய்யவேண்டும்’ என்று கேட்டார். அமெரிக்கா சென்று இந்தியா பற்றியும் அதன் கலாசாரம் பற்றியும் விஷயங்களை பரப்ப விரும்புவதாக சுவாமி அவரிடம் கூறினார்.
மகாராஜா அவரது அமெரிக்க பயணத்திற்கான செலவுகளை ஏற்க ஒப்புக்கொண்டார். ஆனால் விவேகானந்தர் அந்த நேரத்தில் மகாராஜா அளித்த வாய்ப்பை ஏற்கவில்லை. ஆனால் பின்னர் அதற்கு ஒப்புக்கொண்டார்.
உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும் ஈர்த்த உரை
1893 மே 31ஆம் தேதி விவேகானந்தர், மெட்ராஸில் இருந்து 'பெனின்சுலா' என்ற நீராவி கப்பலில் அமெரிக்காவிற்கு தனது பயணத்தைத் தொடங்கினார்.
தாய்நாடு பார்வையில் இருந்து மறையும் வரை அவர் கப்பலின் மேல்தளத்தில் நின்று கொண்டிருந்தார். அவரது நீராவி கப்பல் கொழும்பு, பினாங், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் வழியாக நாகசாகியை அடைந்தது.
ஜூலை 14ஆம் தேதி ஜப்பானின் யாகோஹோமா துறைமுகத்தில் இருந்து 'எம்பிரஸ் ஆஃப் இந்தியா' கப்பலில் அவர் அமெரிக்கா புறப்பட்டார்.
அந்தப் பயணத்தில் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர் ஜெம்ஷெட்ஜி டாடாவும் அவருடன் இருந்தார். இருவருக்கும் இடையே இங்கிருந்து தொடங்கிய நட்பு வாழ்நாள் முழுவதும் நீடித்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
வான்கூவரில் இருந்து சிகாகோவுக்கு அவர் ரயிலில் சென்றார். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் பாராளுமன்றத்தில் (Parliament of world’s Religions) பங்கேற்க வந்திருந்தனர். அவர்களில் விவேகானந்தர்தான் வயதில் மிகவும் இளையவர்.
"உரையாற்றுபவர்களின் வரிசையில் விவேகானந்தர் 31வது இடத்தில் இருந்தார். ஆனால் தன்னை இறுதியில் பேச அனுமதிக்குமாறு அமைப்பாளர்களிடம் அவர் கோரிக்கை விடுத்தார். அவரது முறை வந்ததும் அவரது இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவரது நாக்கு பீதியில் உலர்ந்தது,” என்று கௌதம் கோஷ் தனது 'தி பிராஃபெட் ஆஃப் மார்டர்ன் இண்டியா, சுவாமி விவேகானந்தர்' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"அவரிடம் உரையும் தயாராக இல்லை. ஆனால் அவர் அன்னை சரஸ்வதியை நினைவு கூர்ந்தார், டாக்டர் பெரோஸ் அவரது பெயரை அழைத்தவுடன் மேடைக்கு விரைந்தார். அவர் தனது முதல் வார்த்தையான 'அமெரிக்காவின் சகோதரிகள் மற்றும் சகோதரர்களே' என்று சொன்னவுடன், அனைவரும் எழுந்து நின்றனர். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிடங்கள் கைதட்டிக்கொண்டே இருந்தனர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து மத சமத்துவத்தின் செய்தி

பட மூலாதாரம், RUPA & COMPANY
கைதட்டல் நின்றவுடன் விவேகானந்தர் தனது சிறு உரையைத் தொடங்கினார். அவர் தனது உரையின் தொடக்கத்திலேயே உலகின் பழைமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியாவின் சார்பாக உலகின் இளம் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்து மதம் எப்படி சகிப்புத்தன்மையின் பாடத்தை உலகிற்கு கற்பித்துள்ளது என்பதை அவர் கூறினார். உலகிலுள்ள எந்த மதமும் மற்ற மதத்தைவிட சிறந்ததோ கெட்டதோ அல்ல என்றார் அவர். எல்லா மதங்களும் இறைவனை நோக்கிச் செல்வதற்கான வழியைக் காட்டும் ஒன்றுதான் என்று அவர் சொன்னார்.
அதன் பிறகு அமெரிக்காவின் பல நகரங்களில் அவர் ஆற்றிய உரைகள் மிகவும் விரும்பப்பட்டன.
உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை அவரை உலகம் முழுவதும் பிரபலமாக்கியது. அவர் ஓராண்டு முழுவதும் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பயணம் மேற்கொண்டார்.
இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் இங்கிலாந்தில் தங்கிய அவர், இந்தியா மீது ஆர்வமுள்ள ஆக்ஸ்ஃபோர்டின் பேராசிரியர் மேக்ஸ் முல்லரை சந்தித்தார்.

இங்கிலாந்தில் அவர் பிபின் சந்திர பாலையும் சந்தித்தார்.
விவேகானந்தர் இந்தியா திரும்பியதும் அவரை வரவேற்க எல்லா இடங்களிலும் மக்கள் கூடினர். மெட்ராஸில் இருந்து அவர் கும்பகோணத்துக்கு ரயிலில் சென்றார். அவரைப் பார்க்க வழியில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூடினர்.
ரயில் நிற்காத ஒரு சிறிய ஸ்டேஷனில் அவரைப் பார்ப்பதற்காக மக்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை நிறுத்தினர்.
மக்களின் அன்பில் உண்ர்ச்சிவசப்பட்ட சுவாமி விவேகானந்தர் தனது பெட்டியிலிருந்து வெளியே வந்து மக்களைச் சந்தித்தார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்

பட மூலாதாரம், PENGUIN
1901 டிசம்பரில் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடந்தபோது அதில் பங்கேற்ற தலைவர்கள் பலர் பேலூருக்கு வந்து சுவாமிஜியை தரிசித்தனர். அவர்களில் பலர் தினமும் மதியம் அவரைப் பார்க்க வரத் தொடங்கினர்.
சுவாமிஜி அவர்களுடன் அரசியல், சமூக மற்றும் மதப் பிரச்னைகளைப் பற்றிப் பேசினார். அவரைச் சந்திக்க வந்தவர்களில் பாலகங்காதர திலகரும் ஒருவர். பிரபல தாவரவியலாளர் ஜெகதீஷ் சந்திரபோஸும் அவருடைய நெருங்கிய நண்பர்.
சுவாமி விவேகானந்தர் விலங்குகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவரிடம் வாத்துகள், செம்மறி ஆடுகள், மாடுகள் மற்றும் ஆடுகள் இருந்தன. அவரே அவற்றைப் பராமரித்து, தன் கைகளால் உணவளித்து வந்தார்.
அவர் தனது நாய்களில் ஒன்றான 'பாகா'வை மிகவும் நேசித்தார். அது இறந்தபோது மடத்திற்கு உள்ளே கங்கை நதிக்கரையில் அதை அடக்கம் செய்தார்.

பட மூலாதாரம், WWW.BELURMATH.ORG
சுவாமி விவேகானந்தரின் உடல்நிலை எப்போதுமே அவ்வளவு நன்றாக இருந்தது கிடையாது.
அவரது கால்களில் எப்போதும் வீக்கம் இருந்தது. வலது கண்ணின் பார்வையும் குறைந்துகொண்டே சென்றது. அவருக்கு எப்போதும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது.
அவருக்கு மார்பின் இடது பக்கத்திலும் வலி இருந்தது. தந்தையைப் போலவே அவருக்கும் சர்க்கரை நோய் இருந்தது.
வாராணாசியில் இருந்து திரும்பியதும், அவரது நோய் மீண்டும் அதிகரித்தது. புகழ்பெற்ற வைத்தியர் சஹானந்த் சென்குப்தாவிடம் அவர் சென்றார்.
விவேகானந்தர் தண்ணீர் அருந்துவதையும் உப்பு சாப்பிடுவதையும் அவர் தடை செய்தார். அடுத்த 21 நாட்களுக்கு அவர் ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்கவில்லை.
கடைசி நாளில் மூன்று மணி நேரம் தியானம்

பட மூலாதாரம், RUPA & COMPANY
அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது நெருங்கிய தோழி சிஸ்டர் நிவேதிதாவுக்கு தனது கைகளால் உணவு பரிமாறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
கைகளை கழுவுவதற்காக அவரது கைகளில் தண்ணீரையும் தெளித்தார். இதற்கு சிஸ்டர் நிவேதிதா, 'இதையெல்லாம் நான் செய்ய வேண்டும், நீங்கள் அல்ல' என்றார்.
அதற்கு விவேகானந்தர், 'இயேசு கிறிஸ்துவும் தன் சீடர்களின் பாதங்களைக் கழுவுவார்' என்று மிகவும் கம்பீரமாக பதிலளித்தார்.
சுவாமி விவேகானந்தர் தனது மகாசமாதி நாளில் அதிகாலையில் எழுந்தார். அவர் மடத்தின் கர்ப்ப கிருகத்திற்கு சென்று அதன் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தையும் மூடினார். பின்னர் தனியாக மூன்று மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். அவர் சக புனிதர்களுடன் தனது மதிய உணவை உண்டார்.

பட மூலாதாரம், Getty Images
நான்கு மணிக்கு ஒரு கோப்பை சூடான பால் குடித்தார். பின்னர் பாபுராம் மகராஜுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
மாலையில் பிரார்த்தனை மணி அடித்ததும் விவேகானந்தர் தன் அறைக்குச் சென்றார். அங்கே கங்கையின் முன் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
இரவு 8 மணியளவில் அவர் ஒரு துறவியை அழைத்து தன் தலை மேல் விசிறுமாறு கூறினார். அப்போது விவேகானந்தர் படுக்கையில் படுத்திருந்தார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவரது நெற்றி வியர்வையால் நனைந்தது. கைகள் லேசாக நடுங்கின. அவர் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார்.
எல்லாம் முடிந்துவிட்டது என்பதற்கான அறிகுறியாக அது இருந்தது. அப்போது இரவு 9.10 மணி. அங்கு இருந்த சுவாமி பிரேமானந்த் மற்றும் சுவாமி நிஷ்சயனந்த் ஆகியோர் சத்தமாக அவரது பெயரைக் கூறி அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் சுவாமிஜியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
மாரடைப்பால் காலமானார்

பட மூலாதாரம், RUPA & COMPANY
டாக்டர் மகேந்திரநாத் மஜூம்தார், விவேகானந்தரை பரிசோதிக்க அழைக்கப்பட்டார். செயற்கை சுவாசம் கொடுத்து சுவாமி விவேகானந்தரை அவர் எழுப்ப முயன்றார். இறுதியில் நள்ளிரவில் சுவாமி விவேகானந்தர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
மாரடைப்புதான் மரணத்துக்குக் காரணம் என்று கூறப்பட்டது. சிஸ்டர் நிவேதிதா அதிகாலையில் வந்தார். மதியம் 2 மணி வரை சுவாமி விவேகானந்தரின் கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
சுவாமி விவேகானந்தர் 39 ஆண்டுகள், 5 மாதங்கள் மற்றும் 22 நாட்களுக்குப் பிறகு இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.
எனது 40வது வசந்த காலத்தை என்னால் பார்க்க முடியாது என்று அவர் சொன்ன வார்த்தைகள் உண்மையானது.
விவேகானந்தர் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்
- அவர் வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார்.
- அவர் ஆட்டுப்பால் குடித்து வந்தார். கொய்யா அவருக்கு மிகவும் பிடித்த பழம் மற்றும் ஐஸ்கிரீம் அவரது பலவீனமாக இருந்தது.
- அவர் பெரிய மாஸ்டர்களிடம் பாரம்பரிய இசைப் பயிற்சி பெற்று பல இசைக்கருவிகளை வாசித்தார்.
- அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார்.
- சில சமயம் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு தன்னை 'மோட்டா சுவாமி'(குண்டு சுவாமி) என்று அழைத்துக் கொள்வார்.
- அவருக்கு நன்றாக உறக்கம் வராது. கடுமையாக முயற்சித்தும் ஒரு நேரத்தில் அவரால் 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியாது.
- ஒருமுறை அவர் ரயிலில் பயணம் செய்தபோது ஒரு சிறிய ஸ்டேஷனில் ரயில் நிற்கவில்லை. அவரை பார்ப்பதற்காக மக்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை வலுக்கட்டாயமாக நிறுத்தினார்கள்.
- அவருக்கு விலங்குகள் வளர்ப்பதில் விருப்பம் இருந்தது. அவரது நாய் 'பாகா' மடத்தின் உள்ளே கங்கை நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
- ஒருமுறை வைத்தியர் தண்ணீர் குடிப்பதையும் உப்பு சாப்பிடுவதையும் தடை செய்தபோது, அவர் 21 நாட்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












