அயோத்தி பாபர் மசூதி இடிப்பு நாளில் மதுரா மசூதி, கோயில் பகுதியில் உத்தர பிரதேச பாதுகாப்பு ஏன்?

பட மூலாதாரம், ROB ELLIOTT/AFP VIA GETTY IMAGES
இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, மதுராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த காவல்துறை பாதுகாப்புடன், ஷாஹி ஈத்கா பகுதியில் சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில் அருகே அமைந்துள்ள மசூதி, இந்துக் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாகவும், அங்கும் அயோத்தி போல மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என்றும் இந்து அமைப்பு ஒன்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மதுரா மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுரா நகரம் நான்கு சிறப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலத்துக்கு தலா ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 24 மணி நேரமும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நகரில் இதுபோன்ற 143 இடங்களில் தடுப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரைவு அதிரடிப் படையின் ஒரு கம்பெனியும், மத்திய ரிசர்வ் காவல் படையின் ஆறு கம்பெனிகளும் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மதுரா மாவட்ட எஸ்.எஸ்.பி கவுரவ் குரோவர் கூறுகையில், "மதுரா மாவட்ட காவல்துறையினருடன், ஏராளமான ஆக்ரா மண்டல காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். யாரேனும் அசம்பாவிதம் ஏற்படுத்தவோ, இது குறித்து பேசவோ முற்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், SAURABH GAUTAM
அகில இந்திய இந்து மகாசபையின் அறிவிப்பு
டிசம்பர் 6ம் தேதி, மதுராவின் ஷாஹி ஈத்கா பகுதியில் உள்ள மசூதியில் பால கோபாலா (குழந்தை கிருஷ்ணர்) சிலையை நிறுவி, அதற்கு அபிஷேகம் செய்ய அகில இந்திய இந்து மகாசபை திட்டமிட்டிருந்தது.
ஆனால், மதுரா மாவட்ட நிர்வாகம் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனால், இந்த நிகழ்ச்சி தில்லியிலுள்ள ஜந்தர்-மந்தர் பகுதிக்கு மாற்றப்பட்டது என்று இந்து மாகா சபை தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக, சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாக மதுரா மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
துணை முதல்வர் செய்த ட்வீட்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
டிசம்பர் ஒன்றாம் தேதியன்று, உத்தர பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியா, "அயோத்தியா காசியில் பிரமாண்ட கோயில் கட்டுமானம் நடந்து வருகிறது. மதுரா தயாராகி வருகிறது", என்று ட்வீட் செய்திருந்தார். இந்த ட்விட்டிற்கு பின், சர்ச்சை எழுந்தது
மதுராவை போலவே, அயோத்தியிலும் பாபர் மசூதி நினைவு தேதியை ஒட்டி, பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் பெரும் வன்முறை வெடித்தது. கடந்த 2019ம் ஆண்டு, இந்த இடம் இந்து தரப்புக்கே சொந்தம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின், தற்போது அயோத்தியில் இருந்த சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இஸ்லாமிய தரப்புக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. அங்கும் மசூதி மற்றும் மருத்துவமனை கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
பிற செய்திகள்:
- கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்
- குழந்தைகளை விற்கும் தாய்கள்: தமிழ்நாட்டில் குழந்தை விற்பனை எப்படி நடக்கிறது?
- நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினரால் பொதுமக்கள் சுட்டுக்கொலை: விசாரணைக்கு உத்தரவு
- 'மனிதாபிமானமற்ற, இழிவான நிலையில் வாழும் மலையகத் தமிழர்கள்' - ஐ.நா அலுவலர் கவலை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








