கொரோனா ஊடரங்கு: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு, மெட்ரோ சேவைக்கு அனுமதி, பள்ளிகளின் நிலை என்ன?

மெட்ரோ

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பொது முடக்கம் செப்டம்பர் 30வரை தொடரும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் இன்று புதிதாக வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள உத்தரவில் புதிய வழிகாட்டுதல்கள் என்ன என்பது விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை செப்டம்பர் 30ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும். எனினும், ஆன்லைன் கல்வி, தொலைதூர கல்வி ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுவது ஊக்கவிக்கப்படும்.

ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏதுவாக, 50 சதவீத ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதவர்கள் பள்ளிகளுக்கு வரவழைக்கலாம். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ளவர்கள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி பள்ளிகளுக்கு வரலாம்.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே இருந்தால், அவர்கள் தன்னார்வ அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று வர அனுமதிக்கப்படுவார்கள்.

உயர்கல்வி பயிலும் மற்றும் ஆராய்ச்சிப்பணியில் இருப்பவர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப மத்திய உள்துறையுடன் மத்திய உயர்கல்வித்துறை நடத்தும் ஆலோசனை அடிப்படையில் பணிகளை தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

மெட்ரோ ரயில் சேவை அமலில் உள்ள மாநிலங்களில், வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் படிப்படியாக இயங்க அனுமதிக்கப்படும். அதுவும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்தறை அமைச்சம் வெளியிடும் வழிகாட்டு நெறிகள் அடிப்படையில் இருக்கும்.

சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், மதம், அரசியல் நிகழ்ச்சிகளில் அதிகபட்ச வரம்பாக 100 பேர் பங்கேற்க அனுமதிக்கப்படும். இந்த அனுமதி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். அதில் பங்கேற்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். அனைவரும் தெர்மல் ஸ்கேனிங், கை சுத்திகரிப்பான்கள் மற்றும் சானிட்டைசர்கள் பயன்படுத்தப்படுவது அவசியமாகும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எனினும், திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என்றும், இறுதிச்சடங்களில் அதிகபட்சமாக 20 பேருக்கு மிகாமல் இருப்பது கட்டாயம் என்றும் இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 20 வரை பொருந்தும். அதற்கு மறு தினத்தில் இருந்து இந்த எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். எனினும், திறந்தவெளி திரையரங்குகள் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு பிறகு திறக்க அனுமதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு இடையே, எவ்வித உள்ளூர் பொது முடக்கத்தையும் மாவட்ட, மாநில அரசுகள் மத்திய அரசு ஆலோசனையின்றி விதிக்கக்கூடாது.

மாவட்டங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு இடையிலும் ஆட்கள் மற்றும் சரக்குகளின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு இருக்கக்கூடாது. அத்தகைய நடவடிக்கைகளுக்கு எவ்வித தனி அனுமதியும் தேவையில்லை.

பயணிகள் ரயில்களின் இயக்கம், வான் வழியாக பயணம் செய்வோர், வந்தேபாரத் திட்டம் மூலம் பயணம் செய்வோரின் நடமாட்டம், இந்திய கடல் மாலுமிகள் ஆகியோரின் நடமாட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்த விரைவில் தனி வழிகாட்டுதல் நெறிகள் வெளியிடப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Presentational grey line

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: