தமிழக அரசியல்: "திமுகவில் அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்; அதிமுக வந்தால் வரவேற்போம்" - அமைச்சர் ஜெயக்குமார்

ஜெயக்குமார்

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: "திமுகவில் அடுத்த விக்கெட் துரைமுருகன்தான்; அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம்" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக பொருளாளர் துரைமுருகன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் நேற்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் திமுகவிலிருந்து கு.க. செல்வம் வெளியேறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " நீரு பூத்த நெருப்பு தற்போது புகைந்து கொண்டிருக்கிறது முதல் விக்கெட் கு.க.செல்வம்.

துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார், பொதுச்செயலாளர் பதவிக்குதான் அவர் எதிர்பார்த்து காத்திருந்தார். அவருக்கு பதவி கொடுக்காததால் அடுத்த விக்கெட் அவராகத்தான் இருக்கும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

அதிமுகவிற்கு துரைமுருகன் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், திராவிட இயக்கத்தின் பாசம் துரைமுருகன் மீது இருக்கிறது அவர் வந்தால் கட்சி நல்ல முடிவு எடுக்கும் என்றும், துரைமுருகன் வந்தால் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்பதற்கு எங்களது இயக்கம் தயாராக இருக்கிறது. அதே போல, அதிமுக ஒரு பெரிய ஆலமரம் அதிருப்தியில் உள்ள திமுகவினருக்கு நிழல் கொடுக்கும்" என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Transparent line

தினமணி: "உலக பணக்காரர்கள் பட்டியல்: நான்காம் இடத்துக்கு முகேஷ் அம்பானி முன்னேற்றம்"

முகேஷ் அம்பானி

பட மூலாதாரம், Getty Images

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஐரோப்பாவின் பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நடப்பாண்டில் 220 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்ற அம்பானி தற்போது 806 கோடி அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக உயர்ந்துள்ளார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் பட்டியலின்படி, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ஆகியோரைத் தொடர்ந்து அம்பானி அதிக சொத்து கொண்ட நபராக உள்ளார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Transparent line

இந்து தமிழ் திசை: "அம்மா கோவிட் ஹோம் கேர் திட்டம் விரைவில் தொடக்கம்"

கொரோனா

பட மூலாதாரம், Getty Images

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க 'அம்மா கோவிட் ஹோம் கேர்' திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலைக்கு ஏற்ப மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், அறிகுறிகள் எதுவும் இல்லாமலும், லேசான அறிகுறிகளுடனும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் மருத்துவ கண்காணிப்புக்காக 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற திட்டத்தை தமிழக அரசு அடுத்த வாரம் செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.

2,500 ரூபாய்க்கு வழங்கப்படும் இந்த சிறப்பு பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ் ஆக்ஸி மீட்டர், வெப்ப நிலையை அறியும் டிஜிட்டல் தெர்மல் மீட்டர் ஆகிய உபகரணங்கள் இருக்கும்.

அதனுடன் 14 நாட்களுக்குத் தேவையான வைட்டமின் சி, ஜிங்க், வைட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீர், அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு போன்றவை இடம்பெற்றிருக்கும். நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடும் பெட்டகத்தில் இருக்கும்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: