You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு உறுதியான நடவடிக்கை தேவை': அரசு மருத்துவர்கள் கோரிக்கை
இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக உறுதியானநடவடிக்கை தேவை என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சை கோருகின்றது.
டெங்கு ஒழிப்புக்கான உறுதியான நடவடிக்கை தொடர்பாக முன்னுரிமை கொடுத்து ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகின்றது.
இலங்கையில் தீவிரமடைந்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இந்த ஆண்டு இனம் காணப்பட்டுள்ளனர். 227 மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த மே மாதம் 15 ஆயிரத்து 309 நோயாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் ஜுன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 309 ஆக அதிகரித்து காணப்பட்டது.
"நாட்டில் டெங்கு தொடர்பாக தற்போதைய நிலை நீடிக்குமானால் ஓரிரு வருடங்களில் நாடு பெரும் பாதிப்புக்கு முகம் கொடுக்க நேரிடும்'' என்கின்றார் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித்த அளுத்தே.
இதுவரையில் இனம் காணப்பட்ட மற்றும் உயிரிழந்த நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்பாக அரசினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை நிராகரித்துள்ள அவர் பாதிப்புக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை பள்ளிக்கூட நேரத்தில் மாணவர்கள் டெங்கு கொசு கடிக்குள்ளாகுவதை தடுக்கம் வகையில் மாணவர்களின் பள்ளிச் சீருடையில் கல்வி அமைச்சினால் தற்காலிக மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
டெங்கு தொற்றுக்குள்ளானவர்களில் 25 சதவீதம் பள்ளி மாணவர்கள் என கண்டறிப்பட்டுள்ளதையடுத்தே கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த தற்காலிக மாற்றத்தின் பிரகாரம் குட்டைக் கால்சட்டை அணியும் மாணவர்கள் நீளமான கால்சட்டை அணியும் வகையில் சீருடை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாணவிகள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான சீருடை அணிந்து பள்ளிக் கூடத்திற்கு சமூகமளிக்க முடியம் என கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நாடு தழுவியதாக முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகளில் சிறைக் கைதிகளின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்வது தொடர்பாக சிறைச்சாலைகள் தினைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: