பிட்காயின்: கிரிப்டோ கரன்சி மீதான தடையை நீக்கிய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், AFP
கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை இன்று (புதன்கிழமை) ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்.
2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி.
பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்து இருந்தது ரிசர்வ் வங்கி.

பட மூலாதாரம், Getty Images
கிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளித்து இருந்தது.
இப்படியான சூழலில் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்கி உள்ளது நீதிபதி ரோஹிண்டன்ஃபாலி நாரிமன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு.
கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி என்பது மெய்நிகர் பணம். பெரிய பணக்காரர்களும் முதலீட்டாளர்களும் சர்வதேச அளவில் இதைத்தான் இப்போது உலகப் பொதுச் செலாவணியாகப் பயன்படுத்துகிறார்கள். இதன் மதிப்பை சர்வதேசச் சந்தைதான் நிர்ணயிக்கின்றன.
ஃபேஸ்புக், பில்கேட்ஸ்
ஆனால் முன்பே ஃபேஸ்புக் நிறுவனம், பில்கேட்ஸ் என பலர் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிடல் பணம் "நேரடியாகவே" மக்களின் உயிரைப் பறிப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.
செயற்கை ஓபியாய்ட் ஃபெண்டனில் (opioid fentanyl) போன்ற போதை மருந்துகள் வாங்க பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறி இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
2018 மார்ச் மாதம் செய்தி வலைத்தளம் ரெடிட் (Reddit) ஏற்பாடு செய்திருந்த "எதையும் என்னிடம் கேட்கலாம்" என்ற அமர்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பில் கேட்ஸ், யாருடையது என்று தெரியாத டிஜிட்டல் நாணயங்கள், பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது, பண மோசடிகளுக்கு துணைபோவது என பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறினார்.
ஃபேஸ்புக் நிறுவனம் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணம் மற்றும் அதுசார்ந்த சேவைகளுக்கான விளம்பரங்கள் இனி தடை செய்யப்படும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை வரவேற்பதாகவும், ஆனால் பல நிறுவனங்கள் மெய்நிகர் (வர்ச்சுவல்) நாணயங்களை புகழும்போது நல்லெண்ணத்தோடு நடப்பதில்லை என்றும் ஃபேஸ்புக் தெரிவித்து இருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













