தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் - விரிவான தகவல்கள்

சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், அந்த அறிக்கையை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். பச்சைத் துண்டு அணிந்தபடி வந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பத்து மணியளவில் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
முக்கிய அம்சங்கள்
தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 93 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது.
2021-22ஆம் ஆண்டில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 11 லட்சத்து 73 டன் அதிகம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு உற்பத்தியாகும். வரும் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக புதிதாக ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
சிற்றூர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மற்ற பணிகளையும் மேற்கொள்ள, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக, 2504 ஊராட்சிகளுக்கு ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக் குட்டைகள் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும்.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்
ஏற்கனவே 20 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு சிறுதானிய மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்த மாவட்டங்களும் இந்த மண்டலங்களில் சேர்த்துக்கொள்ளப்படும். நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பொது விநியோக அட்டைகளுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தானிய திருவிழாக்களும் நடத்தப்படும். இந்த இயக்கத்திற்கு 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்
விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும் வருவாயை அதிகரிக்கவும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அதில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பாரம்பரிய நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்துவரும் 10 விவசாயிகளுக்கு தலா மூன்று லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
குறுவைப் பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகளை வாங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 60,000 வேளாண் கருவிகள் இதன் மூலம் வழங்கப்படும்.
அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க சமீபத்தில் கொள்கை வெளியிடப்பட்டது. விவசாயிகள் அங்ககச் சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க 10 ஆயிரம் ஹெக்டேருக்கு சான்றிதழைப் பெற மானிய உதவி அளிக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ஐந்தாண்டுகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிற அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் குடியரசு தினத்தன்று ஐந்து லட்ச ரூபாய் பணப்பரிசுடன் விருது வழங்கப்படும்.
ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் என 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்ப் செட்கள் வாங்க இந்த மானியம் பயன்படும்.
தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகளின் அடிப்படைத் தகவல்களான ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைச் சேமித்துவைக்க GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும் உற்பத்தியையும் அதிகரிக்க பயறு பெருக்குத் திட்டம் 30 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய துவரை மண்டலத்தில் துவரை சாகுபடிக்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம்:
சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும் நிலக்கடலை, எள், சோயா, மொச்சை போன்ற பயிர்களை பரவலாக்கம் செய்யவும் 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடம் பெற, மறுநடவு - புத்தாக்கத் திட்டம் 20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். குட்டை - நெட்டை வீரிய ஒட்டுரக தென்னைக்கு விவசாயிகளிடம் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டில் 10,000 குட்டை - நெட்டை ஒட்டுரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்த மாநில அரசின் மானியமாக இந்த ஆண்டு 2,337 கோடி ரூபாய் செலுத்தப்படும்.
கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 காலகட்டத்தில் 55,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய விலையான 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கென 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.

தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
மல்லிகை பூ மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
பலா மரங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 2,500 ஹெக்டர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும். இத்திட்டம், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 ஹெக்டேராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். மிளகாயின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவான கட்டமைப்பை உருவாக்க ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வரும் ஆண்டு 1,000 ஹெக்டேர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்துதலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். முருங்கையில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் இதற்கென 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தைப்பு இயந்திரங்கள், சேமிப்புக் கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும். தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தடுக்கு அமைத்தல், அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். 19 கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும்.
150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
வரும் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகியவற்றுக்காக மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு பயனாளிகள் தேர்வும் கணினிமயமாக்கப்படும்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும்.
வரும் ஆண்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் வளாகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை மெருகேற்றவும், மேம்படுத்தவும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்கவும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும்.
வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய வேளாண் நிதி நிலை அறிக்கையில் இலக்கியத்திலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் உட்பட கலீல் ஜிப்ரான், சேக்ஸ்பியர் உள்ளிட்ட சர்வதேச கவிஞர்களிடமிருந்தும் மேற்கோள்காட்டிப் பேசினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












